புதுதில்லி:
கடந்த 2019-20 ஆம் நிதியாண்டில் சுமார் 781 மில்லியன் டாலர் மதிப்பிலான கலர் டிவிகள் இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. இவற்றில் 293 மில்லியன் டாலர் மதிப்பிலான டிவிகள் சீனாவில் இருந்து மட்டும் இறக்குமதி செய்யப்பட்டன. இந்த நிலையில் கலர் டிவி இறக்குமதிக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் உள்நாட்டு தயாரிப்புகளில் கிட்டத்தட்ட 36 சதவீதத்திற்கும் மேலான உதிரிபாகங்கள் சீனா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளிடத்தில் இருந்துதான் பெறப்பட்டு வருகிறது. சீனா, வியட்நாம், மலேசியா, ஹாங்காங், தென்கொரியா, இந்தோனேசியா, தாய்லாந்து, ஜெர்மனி ஆகியவை இந்திய டிவிகளின் முக்கிய ஏற்றுமதி நாடுகளாக உள்ளன.இந்த நிலையில் டிஜிஎப்டி (Directorate General of Foreign Trade)எனப்படும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகம் கலர் டிவி இறக்குமதிக்கு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. அதன்படி, குறிப்பிட்ட சில பிரிவுகளில் கலர் டிவிகளை இறக்குமதி செய்ய வேண்டுமென்றால் அரசின் அனுமதி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
டிஜிஎப்டியின் புதிய அறிவிப்பு, உள்நாட்டு பிராண்டுகளை உற்பத்தி திறன்களில் முதலீடு செய்ய ஊக்குவிப்பதற்கும், அதிக வேலைவாய்ப்பு அளிப்பதற்கும், தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் உள்ளூர் கூட்டாண்மைக்கு வழிவகுக்கும் ஒரு படியாக இருக்கும்” என்று கோடக்கின் சூப்பர் பிளாஸ்டிரானிக்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான அவ்னீத் சிங் மர்வா கூறியுள்ளார். பிரதமர் மோடியின் ஆத்மிர்பர் பாரத் பணியை ஊக்குவிக்கும் முயற்சியாக, இந்தியாவில் கலர் டிவி இறக்குமதி செய்வதை அரசாங்கம் தடை செய்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.