புதுதில்லி:
உ.பி. மாநிலத்தில் பாலியல் வன் கொலை செய்யப்பட்ட தலித் இளம் பெண் மனீஷாவின் உடலை, பெற் றோர்களிடம் தராமல் இரவோடு இரவாக காவல்துறையே சுடுகாட்டில் வைத்து எரித்து சாம்பலாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் அருகே ஹத்ராஸ் பகுதியைச் சேர்ந்த தலித் இளம்பெண் மனீஷா வால்மீகி (19) என்ற தலித் இளம்பெண்ணை, செப்டம்பர் 14 அன்று சாதி ஆதிக்க வெறியர்கள் 4 பேர், மிக மோசமான முறையில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கினர். அத்துடன், மனீஷாவை கொடூரமாகத் தாக்கி எலும்புகளை உடைத்ததுடன், அவரது நாக்கை அறுத்தும், துப்பட்டாவில் கழுத்தை இறுக்கி தரதரவென இழுத்துச் சென்றும் சாலையில் வீசினர். இதில், ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு, தில்லி ஜப்தர்சங் மருத்துவமனையில், கடந்த 14 நாட்களாக உயிருக்குப் போராடி வந்த மனீஷா, சிகிச்சை பலனின்றி செவ்வாயன்று மாலை உயிரிழந்தார். அவரது மரணம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மனீஷாவுக்கு நீதி வழங்க வேண்டும்; குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று கம்யூனிஸ்ட், காங்கிரஸ், சமாஜ்வாதி, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் மட்டுமன்றி, பாலிவுட் நட்சத்திரங்களான அக்ஷய் குமார், அனுஷ்கா சர்மா, கரீனா கபூர், கங்கனா ரணாவத், வரலட்சுமி சரத்குமார், ஜனனி அய்யர் உள்ளிட்டோரும் கண்டனக் குரல் எழுப்பினர்.
பிரதமர் மோடியும், உ.பி. முதல்வர் ஆதித்யநாத்துடன் பேசினார். தேசிய மகளிர் ஆணையமும் பிரச்சனையில் தலையிட்டதாகக் கூறப்பட்டது.இந்நிலையில், உ.பி. பாஜக அரசின் காவல்துறை, மனீஷாவின்உடலை அவரது பெற்றோர்களிடம் கூட வழங்காமல், அராஜகமாக கைப்பற்றி இரவாக இரவாக எரித்துச் சாம்பலாக்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.மனீஷாவின் உடலை, தில்லியிலிருந்து ஹத்ராஸிற்கு கொண்டுவந்த போலீசார், சாண்ட்பா கிராமத்தை விட்டுவிட்டு, தாங்களாகவே பூல் கார்ஹி கிராமத்திற்கு கொண்டுசென்று, அங்குள்ள சுடுகாட்டில் புதன் கிழமை அதிகாலை 2.25 மணிக்கு எரித்துள்ளனர். மனீஷாவின் பெற்றோர் வந்த வாகனம் கிராமத்திற்குள் நுழைவதற்கு முன்பே இவ்வாறுநடப்பதைக் கண்ட உறவினர்கள்,போலீசாருக்கு எதிர்ப்பு தெரிவித்துள் ளனர். போராட்டங்களையும் நடத்தினர். ஆனால், போலீசார் அவற்றைக் கண்டுகொள்ளாமல் அராஜகமான முறையில் தங்களின் திட்டத்தை அரங்கேற்றியுள்ளனர்.
ஏற்கெனவே, குற்றவாளிகளான சந்தீப், லவ் குஷ், ரவி மற்றும் ராம்குமார் ஆகிய 4 பேரையும், பல்வேறுகட்சிகள், மாதர் சங்கங்கள், தலித்இயக்கங்களின் போராட்டங்களுக்குப் பின்னர்தான் உ.பி. காவல்துறை கைது செய்தது. குற்றவாளிகள் முதல்வர் ஆதித்யநாத் சார்ந்த தாக்குர் சமூகத்தினர் என்பதால் அவர்களைத் தப்பவிடும்முயற்சி நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதற்கேற்ப மனீஷா வல்லுறவுக்கு உள்ளாக்கப்படவில்லை என்றே உ.பி. காவல்துறையும் தொடர்ச்சியாக கூறிவந்தது. இந்த பின்னணியில், மனீஷாவின் உடலையும் அவசர அவசரமாக எரித்திருப்பது சந்தேகங்களை வரவழைத்துள்ளது.
மனீஷாவின் உடலைக் கேட்டு,அவரது பெற்றோரும் உறவினர் களும் போலீசார் முன்னிலையில் கதறித்துடிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.இதனிடையே மனீஷா வன்கொலை வழக்கு உத்தரப்பிரதேசத் தில் விசாரித்தால் நீதி கிடைக்காது என்றும், அதனை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன.