tamilnadu

img

நியூசிலாந்து பிரதமராக ஜெசிந்தா மீண்டும் தேர்வு... கேரள அமைச்சர் கே.கே.சைலஜா வாழ்த்து...

திருவனந்தபுரம்:
நியூசிலாந்து பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெசிந்தா ஆர்டனுக்கு கேரள சுகாதார அமைச்சர் கே.கே.சைலஜாட்விட்டர் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.உங்கள் வெற்றிக்கு வாழ்த்துகள். புதியதொடக்கத்தில் அனைத்தும் சிறப்பாகட்டும். நீங்கள் கோவிட்டை திறம்பட எதிர்கொண்டதில் மகிழ்ச்சி. பெண் தலைவர்கள் சவால்களை எவ்வாறு சமாளிக்கிறார்கள் என்பதை உலகுக்குக் காட்டியதற்கு நன்றி என ஜெசிந்தாவை டேக் செய்து கே.கே.ஷைலஜா குறிப்பிட்டுள்ளார்.

சனியன்று நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான 80 சதவிகித வாக்குகளுக்குப் பிறகு, ஜெசிந்தாவின் மைய இடது தொழிற்கட்சி 49 சதவிகித வாக்குகளைப் பெற்றது. பழமைவாத எதிர்க்கட்சியான தேசியக் கட்சிக்கு 27 சதவிகித ஆதரவு மட்டுமே கிடைத்தது. அரை நூற்றாண்டில் முதல் முறையாக, முற்றிலும் இடதுசாரி அரசாங்கம் நியூசிலாந்தில் ஆட்சிக்கு வருகிறது.கட்சிக்கும் வேட்பாளருக்கும் வாக்களிக்கும் கலப்பு விகிதாச்சார வாக்களிப்பு முறையைக்கொண்ட நியூசிலாந்தில் 2017 இல் நடந்த தேர்தலில் தேசிய கட்சி முதலிடம் பிடித்தது. ஆனால் ஜெசிந்தா, பசுமைக் கட்சி மற்றும் வலதுசாரி நியூசிலாந்து முதல் கட்சி ஆகியவற்றின் ஆதரவுடன் பிரதமரானார். துணைப் பிரதமர் வின்ஸ்டன் பீட்டர்ஸ் மற்றும் அவரது நியூசிலாந்து முதல் கட்சிக்குஇந்த முறை இடங்கள் இல்லை. அவர்களுக்கு 2 சதவீத வாக்குகள் மட்டுமே கிடைத்தன, கடந்த முறை அந்த கட்சிக்கு 5 சதவிகித வாக்குகள் கிடைத்திருந்தது. சுதந்திர முதலாளித்துவ சட்டக் கட்சி 8 சதவிகித வாக்குகளையும், பசுமைக் கட்சி 7.6 சதவிகித வாக்குகளையும் பெற்றன.

120 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் தொழிற்கட்சி 64 இடங்களை வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1996 இல் கலப்பு விகிதாசார முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஒரே கட்சிக்கானஅறுதிப் பெரும்பான்மையை முதன்முறையாக தொழிற்கட்சி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு தொடக்கத்தில் கிறிஸ்ட்சர்ச்சில் உள்ள மசூதியில் ஒரு வெள்ளை இனவெறி இளைஞர் நடத்திய கூட்ட படுகொலைக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுத்தபின், இந்த ஆண்டு கோவிட்டை கட்டுப்படுத்துவதில் 40 வயதான ஜெசிந்தா வெற்றி பெற்றார்.நாடாளுமன்றத் தேர்தலுடன் இணைந்து இரண்டு வாக்கெடுப்புகள் நடத்தப்பட்டன. கருணைக்கொலை மற்றும் கஞ்சா பயன்பாடு குறித்த வாக்கெடுப்பின் முடிவுகள் 30 ஆம் தேதி அறிவிக்கப்படும். கருணைக்கொலை விசயத்தில், மக்களின் விருப்பத்தை செயல்படுத்த அரசாங்கம் கடமைப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும்பான்மையானோர் கஞ்சாவை ஆதரித்தாலும் அனுமதிக்கலாமா என்பதை அரசாங்கம் தீர்மானிக்க முடியும். அவ்வாறு அனுமதிக்கப்பட்டால், உகாண்டா மற்றும்கனடாவுக்குப் பிறகு கஞ்சாவை சட்டப்பூர்வமாக்கிய மூன்றாவது நாடாக நியூசிலாந்து மாறும்.