புதுதில்லி:
கடந்த பிப்ரவரி மாதம் இந்தியாவைச்சேர்ந்த எம்ஐ 17 ரக ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டதற்கு, உள்நாட்டில் ஏவப்பட்ட ஏவுகணையே காரணம் என்று இந்திய விமானப் படை தெரிவித்துள்ளது.
கடந்த பிப்ரவரி 14ஆம் தேதியன்று ஜம்மு- காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்திலுள்ள அவந்திபோராவில் மத்திய ரிசர்வ் படை போலீசார் சென்ற வாகனம் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 44 வீரர்கள் பலியாகினர். இதற்குப் பதிலடி தரும் வகையில், பாலகோட் பகுதியில் உள்ள ஜெய்ஷ் இ முகமது பயிற்சித்தளத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக இந்திய விமானப் படை தெரிவித்தது. இந்நிலையில், பிப்ரவரி 27ஆம் தேதியன்று இந்திய விமானப் படையைச் சேர்ந்த எம்ஐ 17 ரக ஹெலிகாப்டர் வீழ்த்தப்பட்டது. இதில் 6 வீரர்கள் உட்பட7 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் காரணம் என்று சொல்லப்பட்டது.
இதனை பாகிஸ்தான் அரசு மறுத்த நிலையில், ஹெலிகாப்டர் விபத்துக்குக் காரணம் யார் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பின. தற்போது, ஸ்ரீநகர் ஏவுகணைத்தளத்தில் இருந்து ஏவப்பட்ட ஏவுகணை மூலமாகவே இந்திய ஹெலிகாப்டர் தாக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது.
இஸ்ரேல் நாட்டு தயாரிப்பான ஸ்பைடர் எனும் தரையில் இருந்து விண்ணில் பாய்ந்து தாக்கும் ஏவுகணையை இந்திய அதிகாரிகள் தவறாகக் கையாண்டதாகவும், அதனால் இந்தவிபத்து நடந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹெலிகாப்டர் தாக்குதல் தொடர்பான விமானப்படை விசாரணையானது இன்னும் 20 நாட்களில் முடிவடைந்து இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.
தாக்குதல் நடத்தப்பட்ட அன்று, பாகிஸ்தானைச் சேர்ந்த எஃப் 16 ரக விமானங்கள் கூட்டமாக இந்தியஎல்லைக்கோட்டுப் பகுதியில் வந்ததாகவும், அவற்றை விரட்டியடிக்கும் முயற்சியின்போது இந்திய ஹெலிகாப்டர் தவறுதலாக வீழ்த்தப்பட்டதாகவும் விமானப்படை தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் ஏவுதளத்தில் இருந்துசெலுத்தப்பட்ட ஏவுகணை 12 நொடிகளில் அதனைத் தாக்கியுள்ளது. ரேடாரில் ஹெலிகாப்டர் இயக்கம் தெரிய வந்த போது, ஐஎஃப்எஃப் (Identification Friend or Foe transponder) தொழில்நுட்பம் வேலை செய்யவில்லை; இதனால், அந்த ஹெலிகாப்டர் பாகிஸ்தானுடையது எனக் கருதி தாக்க முடிவெடுக்கப்பட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.