tamilnadu

img

கொரோனாவை எப்படி கையாளக் கூடாது என்பதற்கு இந்தியா உதாரணம்... ‘நோபல் பரிசு’ பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கடும் விமர்சனம்

புதுதில்லி:
கொரோனா தொற்றுப் பரவலை மோடிதலைமையிலான இந்தியா மிக மோசமானமுறையில் கையாண்டதாகவும், தொற்றைக்கையாளும் விஷயத்தில் ஒரு நாடு எவ்வாறுநடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு இந்தியாவே உதாரணம் என்றும் ‘நோபல் பரிசு’ பெற்ற அமெரிக்கப் பொருளாதார அறிஞர் ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் விமர்சித்துள்ளார்.

இந்திய தொழில் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் கூட்டமைப்பு (FICCI) ஏற்பாடு செய்த இணையவழி கருத்தரங்கம் அண்மையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசுகையிலேயே ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் இவ்வாறு கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பதாவது:

“கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதில் நியூசிலாந்து, ஜெர்மனி, தென்கொரியா போன்ற வலுவான ஜனநாயகம் கொண்ட நாடுகள் மிகச் சிறப்பாக செயல் பட்டுள்ளன. அதே நேரத்தில் அமெரிக்கா, இந்தியா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள்அவ்வாறு செயல்படவில்லை.அதிலும், கொரோனா தொற்று பரவல் காலத்தில், என்னவெல்லாம் செய்யக்கூடாது என்பதற்கு ஒரு ‘உதாரணக் குழந்தை’என்றால், அது இந்தியாதான். ஏனெனில்இந்திய அரசு அறிவித்த ஊரடங்கு என்பதுஎந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. மாறாக, புலம்பெயர் தொழிலாளர்கள் மூலம்நோய் பரவவே இந்தியா வழி செய்தது.தொற்றுப் பரவலை தடுக்காவிட்டால் பரவாயில்லை. அதனை பரப்புவது என் பதை கொஞ்சம்கூட சிந்தித்துப் பார்க்க முடியவில்லை. இது படுமோசமானது.ஊரடங்கு என்ற ஒரு விஷயத்தை மட்டும் இந்தியா கெட்டியாகப் பிடித்துக் கொண்டது. ஆனால், ஒரு ஏழை நாட்டில், ஊரடங்கு என்பது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பது பற்றி இந்திய அரசு கவலைப்படவில்லை.

மக்கள் எப்படி வாழ்வார்கள்? தங்களின் வாழ்வாதாரத்திற்கு என்ன செய்வார் கள்? என்பது குறித்து கொஞ்சமும் யோசிக்கவில்லை. தொற்றுநோயைக் கட்டுப்படுத்தாமல், பொருளாதார பாதிப்புக்களை இந்தியாவால் சரிசெய்ய முடியாது.ஆகவே, தொற்றுநோயைக் கட்டுப் படுத்துவதில் இந்தியா கவனம் செலுத்தியேஆக வேண்டும்.இந்தியாவில் பெரும் கோடீஸ்வரர்கள் மற்றும் மில்லியனர்கள் உள்ளனர். இவர்களுக்கு அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு வரிகளை உயர்த்தலாம். அந்த தொகையை ஏழைகளுக்கு செலவிடலாம்.குறைந்த வருமானம் கொண்டவர்கள் நுகர்வுக்கு அதிக அளவு முனைப்புடன் இருப்பதை நாம் அறிவோம். எனவே பொருளாதார ரீதியாக பின்தங்கிய அந்தப் பிரிவினருக்கு பணத்தை மாற்றுவதன் மூலம்நாட்டில் அதிகபட்ச தேவையை உருவாக்கமுடியும்.ஆனால், கொரோனா தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டுமோ, அவற்றைச் செய்யாத பிரதமர் மோடி, மாறாக இந்திய நாட்டைப்பிளவுபடுத்த தொடர்ந்து முயன்று கொண்டிருக்கிறார்.

இது இந்திய சமூகத்தை மட்டுமன்றி பொருளாதாரத்தையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தும். பிரதமர் மோடிஅரசு முன்வைக்கும் மத அடிப்படைவாதம்இந்தியாவை என்றென்றும் பலவீனப்படுத்தும். நாட்டில் பொருளாதார செழிப்பைக் கொண்டுவர வேண்டுமானால்,மத அடிப்படையிலான பிளவுவாத அரசியலை, அரசாங்கம் கைவிட வேண்டும். பிளவுபட்ட வீடு நிலைத்து நிற்க முடியாது.வளர்ச்சிக்கு அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் தேவை.அதேபோல உலகில் எந்தவொரு நாடும்எல்லாவற்றுக்கும் தன்னையே நம்பியிருக்கமுடியாது. ஆனால், இந்தியப் பிரதமர் மோடி,திடீரென ‘தற்சார்பு’ முழக்கத்தைக் கையில் எடுத்துள்ளார். ஆனால், இந்த விஷயத்தைப் பொறுத்தவரை- அதாவது 21-ஆம் நூற்றாண்டில் ‘தற்சார்பு’ பற்றியயோசனையானது, ஒரு ‘புனைகதை’யாகவே இருக்க முடியும். மேலும், ‘தற்சார்பு’ ஒரு அலங்காரமான சொல்லாட்சி என்பதைத் தாண்டி, அது யதார்த்தத்திற்கு பொருத்தமற்றது.இவ்வாறு ஜோசப் ஸ்டிக்லிட்ஸ் கூறியுள்ளார்.