tamilnadu

img

ஜி.என்.சாய்பாபா நவீன சிறப்பு மருத்துவமனைக்கு மாற்றப்பட வேண்டும் - தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை கடிதம்

உடல் மிகவும் நலிவடைந்து சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் முனைவர் ஜி.என். சாய்பாபா, நவீன சிறப்பு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட வேண்டும் என்றும், இதில் காலம் கடத்துவதற்கு நேரம் இல்லை என்றும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதியரசர் எச்.எல். தத்துவுக்கு,  ஊனமுற்றோர் உரிமைகளுக்கான தேசிய மேடை, பொதுச் செயலாளர் முரளிதரன் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக முரளிதரன் எழுதியிருப்பதாவது:

பேராசிரியர் முனைவர் ஜி.என். சாய்பாபா அவர்கள் சுமார் 90 சதவீத அளவிற்கு ஊனம் பெற்றுள்ளவர்- 19 வகையான மோசமான உடல்நலிவு நிலையால் பாதிக்கப்பட்டவர். இவர் தற்போது நாக்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய உயிரைப் பாதுகாத்திட உங்கள் தலையீடு கோரி இக்கடிதத்தை உங்களுக்கு எழுதுகிறோம்.

இவரது ஊனம் பிறப்பிலேயே இவருக்கு ஏற்பட்ட போலியோவுடனும் இணைந்திருக்கிறது. இதனால் இவருடைய இரு கால்களும் நடக்க முடியாத அளவிற்குப் பாதிக்கப்பட்டுள்ளன., அவருடைய வாழ்க்கைத் துணைவியாரின் கூற்றுப்படி இப்போது அவருடைய இரு கைகளும்கூட செயல்படவில்லை. ஒன்று, அவர் கைது செய்யப்படும்போது காவல்துறையினரால் ஏற்படுத்தப்பட்ட காயங்கள் காரணமாகவும், மற்றொரு கை சிறையில் உரிய சிகிச்சை அளிக்க மறுத்ததன் காரணமாகவும் ஏற்பட்டிருக்கின்றன. தற்போது அவர் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் நாக்பூர் மத்திய சிறையில் அவர் பயங்கர சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார். சிறை வளாகத்திற்குள் எவரும் அணுகமுடியாத நிலை.

சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்களில் பேராசிரியர் முனைவர் ஜி.என். சாய்பாபா போன்றவர்களைக் கையாளும் விதம் சர்வதேச அளவிலான கன்வென்ஷன்களையும், நம் நாட்டிலுள்ள 2016ஆம் ஆண்டு ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தினையும், சிறைக் கையேட்டையும்  மீறும் விதத்தில் அமைந்திருக்கின்றன. எனவே, தாங்கள் இதில் தலையிட்டு அவர் உயிரைக் காப்பாற்றும் விதத்தில் அவசரகதியில் அவருக்கு நவீன சிறப்பு மருத்துவமனையில் (சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில்) சிகிச்சை அளிக்கப்பட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இவ்வாறு முரளிதரன் தன் கடிதத்தில் கோரியுள்ளார்.

(ந.நி.)