பாகிஸ்தான் எல்லையில் முகாமிட்டிருக்கும் பயங்கரவாதிகளை அழிப்பதற்காக, பாலகோட் தாக்குதல் நடத்திய போது, விமானப்படை வல்லுநர்கள் அந்த குறிப்பிட்ட நாளில் நடத்த வேண்டாம் என்று தான் சொன்னார்கள்; ஆனாலும் அன்றைய தினம் மேகக் கூட்டங்கள் குவியலாக இருப்பதால் அது நமது விமானப் படை விமானங்கள் அவர்களது ரேடார்களில் சிக்காமல் சென்று தாக்குவதற்கு உதவும் என்று நான்தான் சொன்னேன்; அந்த அறிவுரைபடியே தாக்குதல் நடந்தது - என்று பிரதமர் நரேந்திரமோடி கூறியிருக்கிறார். இந்திய விமானப் படையையே அவர் இழிவுபடுத்தியிருக்கிறார். ஆறாவது கட்ட வாக்குப் பதிவு நடப்பதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு நாட்டின் பிரதமர் இப்படியெல்லாம் பேசுவது தேர்தல் ஆணையத்தின் விதிகளையெல்லாம் கேலிக்கூத்தாக்குவது இல்லையா? தேர்தல் ஆணையம் மிகக் கடுமையான முறையில் இதுதொடர்பாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும். தேசிய பாதுகாப்பு என்பது மோடிக்கு ஒரு சாதாரண பிரச்சனையாக போய்விட்டது. விமானப் படையின் செயல்பாட்டை நான்தான் தீர்மானித்தேன் என்று ஒரு பிரதமர் சொல்வது எத்தகைய பொறுப்பற்ற பேச்சு. நமது விமானப்படை விபரம் தெரியாதது என்றும், மேகக் கூட்டங்களைப் பற்றியோ, எதிரி நாட்டு ரேடாரில் சிக்காமல் தப்பிப்பது பற்றியோ எதுவும் தெரியாத படை என்றும் இழிவுபடுத்துவது போல இருக்கிறது மோடியின் பேச்சு. இவர்தான் தேச பக்தி கொண்டவர். இந்த தேச பக்தரின் அப்பட்டமான தேசவிரோத பேச்சு அல்லவா இது? தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்குமா? கட்சியின் சார்பில் இதை வலியுறுத்தி விரிவான கடிதத்தை எழுதியுள்ளோம். என்ன செய்கிறார்கள் என்று பார்ப்போம்.