tamilnadu

img

கருத்து சுதந்திரத்தை நசுக்கவே தேச துரோக சட்டத்தை அரசு பயன்படுத்துகிறது - முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி லோகுர்

மக்களின் கருத்து சுதந்திரத்தை நசுக்கவே அரசு தேச துரோக சட்டத்தை அரசு பயன்படுத்துகிறது என்று முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மதன் பி.லோகுர் தெரிவித்துள்ளார். 
கருத்து ,பேச்சு சுதந்திரமும் நீதித்துறையும் என்ற இணையவழி கருத்தரங்கில் ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி லோகுர் கலந்து கொண்டார்.  அப்போது அவர் பேசியதாவது:- 
பத்திரிகையாளர்கள் கொரோனா வைரஸ் தொற்று, பாதிப்பு, பலி எண்ணிக்கை தொடர்பான விஷயங்களை எழுதும் போதோ, வெண்ட்டிலேட்டர்கள் இல்லை என்று எழுதும் போதோ இவர்கள் மீது ‘போலிச்செய்தியைப் பரப்புகிறார்’என்று குற்றம்சாட்டுவார்கள். சுதந்திரப்பேச்சை கருத்து சுதந்திரத்தை நசுக்க அரசின் மீதான விமர்சன கருத்துகளை ஒடுக்க அரசு கடைபிடிக்கும் இன்னொரு உத்திதான்  அது போலிச் செய்தி என்ற குற்றச்சாட்டு என்றார்.
“பேச்சுச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரத்தை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கவே அரசு தேசத்துரோகச் சட்டத்தைப் பயன்படுத்துகிறது. திடீரென தேசத்துரோக வழக்குகள் புறப்பட இதுதான் காரணம். சாதாரண குடிமகன் ஏதாவது விமர்சனக் கருத்தை வெளியிட்டால் தேசத்துரோக வழக்கு பாயும். இந்த ஆண்டு ஏற்கெனவே கிட்டத்தட்ட 70 தேசத் துரோக வழக்குகளைப் பார்த்தாகி விட்டது.” என்றார்

வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்  மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு குறித்து கூறிய முன்னாள் நீதிபதி லோகுர், பூஷணின் கருத்து தவறாக வாசிக்கப்பட்டது என்றார். மேலும் உத்தரபிரதேச மருத்துவர் கபீல்கான் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தையும் சுட்டிக்காட்டி அவர் பேசியது தவறாக அர்த்தம் கொள்ளப்பட்டது என்றார் .