புதுதில்லி:
கொரோனா ஊரடங்கால் மாணவர்களின் பெற்றோர்கள் சிரமத்தில் உள்ளதால், நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம்வகுப்பு படிக்கும் சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய சிபிஎஸ்இக்கும், தில்லி அரசுக்கும் உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவைவிசாரிக்க மறுத்து, உச்சநீதிமன்றம் தள்ளுபடிசெய்தது.
இதுகுறித்து தில்லியைச் சேர்ந்த சோசியல் ஜூரிஸ்ட் எனும் தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. அந்த மனுவில், கொரோனா வைரஸால் கொண்டுவரப்பட்ட ஊரடங்கால் தொழில் முடக்கம், வர்த்தகம் பாதிப்பு, வேலையிழப்பு, ஊதியக்குறைப்பு போன்றவை நடந்துள்ளது. இதனால் ஏராளமான பெற்றோர் குழந்தைகளின் கல்விக் கட்டணத்தையும், தேர்வுக்கட்டணத்தையும் செலுத்த முடியாத சிரமத்தில் உள்ளனர். ஆதலால், பெற்றோர்கள் சந்தித்துவரும் நிதிப்பிரச்சனைகளைக் கருத்தில் கொண்டு நடப்புக் கல்வியாண்டில் 10 மற்றும் 12 ஆம்வகுப்பு பயிலும் சிபிஎஸ்இ மாணவர்களின் தேர்வுக் கட்டணத்தை தள்ளுபடி செய்ய சிபிஎஸ்இக்கும், தில்லி அரசுக்கும் உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள்அசோக் பூஷன், நீதிபதிகள் ஆர். சுபாஷ்ரெட்டி, எம்.ஆர்.ஷா ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு செவ்வாயன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் “ இந்த மனு கடந்த செப்டம்பர் 28 அன்று தில்லி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இருக்கிறது. எவ்வாறு ஓர் அரசுக்கு நீதிமன்றம் இந்த விஷயத்தை செய்யுமாறு உத்தரவிட முடியும். அரசுக்கு நீங்கள்தான் இந்த விஷயத்தை எடுத்துக்கூற வேண்டும். இந்த மனுவை விசாரிக்க இயலாது ” என்றுதெரிவித்தனர்.