tamilnadu

img

ஐஐடி வளாகங்களுக்கு வெளியே ஏகலைவன்கள் - ஆர்.பத்ரி

ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்க ளின் வளாகங்களுக்கு வெளியே நவீன இந்தியாவின் ஏகலைவன்கள் வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள். “இன்றைக்கு நாம் காணும் அனைத்து அறிவியல் வளர்ச்சிகளும் புராணங்களிலேயே இருக்கிறதாக்கும்” என புளகாங்கிதமடையும் கூட்டம் புராண காலத்தின் நீட்சியாகவே இன்றும் ஏகலைவன்களை வெளியே நிறுத்தி வைத்திருக்கிறது.  ஆனாலும் அவர்கள் முழக்கமிடுவார்கள் நாங்களே இந்துக்கள்; அனைவருக்குமான ஏக பிரதிநிதிகள் என்று. ஆயினும் உண்மையென்னவெனில், இந்தியாவில் மொத்தமுள்ள ஐஐடி நிறுவனங்கள் 23. கடந்த 2015 முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளில்  முனைவர் படிப்பிற்காக சேர்க்கப்பட்ட மாணவர்கள் எண்ணிக்கை மொத்தம் 25,007.   

இடஒதுக்கீடு முறையின்படி பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் 6,752. கிடைத்த இடங்கள் 5,811. பட்டியல் சாதியினருக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் 3,751. கிடைத்த இடங்கள் 2,268. பழங்குடியினருக்கு கிடைக்க வேண்டிய இடங்கள் 1,876. கிடைத்தவை வெறும் 526.  சென்னை ஐஐடியில் பட்டியல் சாதியினருக்கு கிடைக்க வேண்டியது 581 இடங்கள். ஆனால் கிடைத்தது 248 மட்டுமே. 

பழங்குடியினருக்கு கிடைக்க வேண்டியவை 290. ஆனால் வழங்கப்பட்டது வெறும் 50. நாடு முழுவதும் இடஒதுக்கீட்டு முறை அமலாக்கத்தின் மூலமாக கிடைக்க வேண்டிய 12,379 இடங்களில் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல், பழங்குடியின மாணவர்களுக்கு கிடைத்தவை  8605 இடங்கள் மட்டுமே. 

இடஒதுக்கீடு முறையை ஏன் முறையாக பின்பற்றவில்லை எனும் கேள்விக்கு அந்தந்த பிரிவுகளுக்கான போதுமான விண்ணப்பங்கள் வரவில்லை என விளக்கமளிக்கிறார்கள்.   ஆனால் பி.டெக்., எம்.டெக்., ஆகிய இதர உயர்கல்வி இடங்களில்,  இடஒதுக்கீட்டின் அளவிற்கேற்பவும், அதைவிட கூடுதலாகவும் கூட  விண்ணப்பங்கள் வருகிறபோது,  முனைவர் (Ph.D) படிப்பில் மட்டும் விண்ணப்பங்கள் வருவதில்லை என்பது எப்படி உண்மையாக இருக்க முடியும்.  

அதுவும் முனைவர் (Ph.D) படிப்புகளில் சமீப ஆண்டுகளில் மாணவர் சேர்க்கை என்பது 20% அளவில் அதிகரித்துள்ள சூழலில், பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினருக்கான இடங்கள் அதற்கு முரணான வகையில் குறைக்கப்பட்டி ருப்பது என்பதே  சமூக அநீதியின் வெளிப்பாடாகும்.  இது தங்களுக்கான  இடம் என கருதும் இடங்களில் பிறரை அனுமதிக்காமல் இருப்பதே அவர்களின் சமூக (?) நீதியாகும். அது கருவறையாக மட்டுமல்ல கல்வியறையாகவும்  கூட இருக்கும்.