tamilnadu

img

கொரோனாவுக்கு மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயின்.... இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை

புதுதில்லி:
இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் (Indian Council of Medical Research - ICMR) அமைக்கப்பட்ட அவசரக் குழு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தொடர்ந்து ஆய்வுசெய்து வருகிறது. 

தற்போது அந்தக்குழு, கொரோனாவைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களுக்கு ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ என்ற மருந்தை பயன்படுத்தலாம் என்று பரிந்துரை செய்துள்ளது.நோய்த் தாக்குதலின் ஆபத்தான காலகட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கு இந்த மருந்து பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. மாத்திரை வடிவில் எடுத்துக் கொள்ளப்படும் ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ ஏற்கெனவே மலேரியா தடுப்புமருந்தாக பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், கொரோனா பாதிப்பிற்கு, இந்தமருந்தை, அனுமதிக்கப்பட்ட மருத்துவர்களைத் தவிர யாரும் பரிந்துரைக்கக் கூடாது என்றும், மருந்தை உட்கொண்ட பின், நோயாளிக்கு வேறு ஏதேனும் அறிகுறிகள் தென்பட்டால், அவர்கள் மருந்தைப் பரிந்துரைத்த மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

‘ஹைட்ரோ குளோரோகுயின்’ மற்றும் ‘அஸித்ரோமைசின்’ மருந்துகளை ஒன்றாக எடுத்துகொண்டால் கொரோனாவிற்கு தீர்வு கிடைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அண்மையில் கூறினார். டிரம்பின் இந்த அறிவிப்பை ஏற்று பரிசோதனை செய்த முதல்நாடு ஜோர் டான் ஆகும். முதற்கட்டமாக 400mg ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தும், தொடர்ந்து 9 நாட்களுக்கு 200mg ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தும் கொரோனாவால் பாதித்தவர்களுக்கு செலுத்த ஜோர்டான் நாட்டின் உணவுமற்றும் மருத்துவத்துறை பரிந்துரைத் தது.ஆனால், இந்த மருந்து கொரோனாவிற்கு நல்ல தீர்வு தரும் என்பது அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை என்று மருத்துவ அறிவியலாளர்கள் தெரிவித்தனர்.

ஒரு சோதனை முயற்சியாக மட்டுமே ஹைட்ரோ குளோரோகுயின் கொரோனா தடுப்பிற்கு பயன்படுத்தப்பட்டு வருவதாக, பல்வேறு மருத்துவ ஆராய்ச்சியாளர்களும் கூறினர்.நைஜீரியாவின் லாகோஸ் மாகாணத்தில் குளோரோகுயின் மருந்து ஓவர்டோஸ் ஆனதால் இருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகின்றனர். டிரம்பின் அறிவிப்பைத் தொடர்ந்து, எவ்வித மருத்துவ ஆலோசனைகளும் இல்லாமல் குளோரோகுயின் மருந்துகளை அவர்களாகவே எடுத்துக்கொண்டதால், அதுவே விஷமாக மாறிவிட்டது. இதையடுத்து, “குளோரோகுயின் மருந்துகள் கொரோனா நோயினைத் தடுக்குமென இதுவரை அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளிவரவில்லை. உலக சுகாதார அமைப்பிடமிருந்து (World HealthOrganization - WHO) கடைசிக் கட்ட முடிவுகள் வரும் வரை குளோரோகுயின் மருந்துகளை யாரும் பயன்படுத்தவேண்டாம் என்று நைஜீரிய அரசின் நோய் தடுப்புத் துறை அறிவித்தது.இந்நிலையிலேயே, கொரோனா பாதிப்பிற்கு ‘ஹைட்ராக்ஸி குளோரோகுயின்’ மருந்தை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் பரிந்துரை செய்துள்ளது.

;