புதுதில்லி:
விவசாயிகளுக்கு விரோதமான வகையில் மத்திய பாஜக அரசு கொண்டுவந்துள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து தமிழகம் உட்பட நாடு முழுவதும் விவசாயிகள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் திமுக,மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி,காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மற்றும் தோழமைக் கட்சிகள் இணைந்து போராட்டத்தை நடத்தினர்.
இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா இதற்கான மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.இந்நிலையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக கேரள மாநில காங்கிரஸ் கட்சியின் திருச்சூர் நாடாளுமன்ற உறுப்பினர் பிரதாபன் உச்சநீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டங்கள்விவசாயிகளுக்கு எதிரானவை, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதாயமாக உள்ளன. இதுவிவசாயிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். விவசாயிகளின் சுதந்திரம் மற்றும் அவர்களுக்கு ஏதுவாக விற்பனை செய்யக்கூடிய திறனைப் பறிக்கும் வகையில் இந்தச் சட்டங்கள் உள்ளன. விவசாயத் துறையை முழுமையாக கார்ப்பரேட்டுகளின் வசம் ஒப்படைக்கும்வகையில் இந்தச் சட்டங்கள் இயற்றப் பட்டுள்ளன. எனவே, இந்தச் சட்டங்கள் செல்லாது என்றும், அரசியல் சாசனத்திற்கு எதிரானவை என்றும் நீதிமன்றம் அறிவிக்க வேண்டும் என்று மனுவில்கோரப்பட்டுள்ளது.இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.