புதுதில்லி:
வட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற கலவரங்களின்போது இறந்தவர்கள் எண்ணிக்கை 54 என்றும், தில்லிக் காவல்துறையினர் இதனை 53 என்று நீதிமன்றத்தில் கூறிக்கொண்டிருப்பதைத் திருத்திக் கொள்ள வேண்டும் என்றும், தில்லிக் காவல்துறை ஆணையருக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் கடிதம் எழுதியுள்ளார்.இது தொடர்பாக, அவர் தில்லிக் காவல்துறை ஆணையர் எஸ்.என். ஸ்ரீவஸ்தவாவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
வட கிழக்கு தில்லியில் பிப்ரவரியில் நடைபெற்ற வன்முறை வெறியாட்டங்களில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கையில் பெரியளவில் தவறு இருப்பதைத் தங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன்.நீதிமன்றத்தில் தில்லிக் காவல்துறை சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள உறுதிவாக்குமூலங்களில் வட கிழக்கு தில்லியில் கலவரங்களின்போது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 53 என்றே கூறிக்கொண்டிருக்கிறது.எனினும், முகமது முல்லாக் என்பவரின் மகன் சிக்கந்தர் என்பவர் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. அவர் 2020 பிப்ரவரி 27 அன்று கொல்லப்பட்டார். அவருடைய பிரேதவிசாரணை அறிக்கையில் பிப்ரவரி 27 அன்றுஇரவு 11.30 மணியளவில் சுய உணர்வின்றி கஜவுரி சவுக் மேம்பாலத்திற்குக் கீழ் கிடந்தஅவர் மருத்துவமனைக்குக் கொண்டுவரப்பட்டபோது இறந்துவிட்டார் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனினும் மார்ச் 19 வரை அவர்அடையாளம் காணப்படவில்லை. மார்ச் 19அன்றுதான் அவர் சிக்கந்தர் என காவல்துறையினரின் பதிவுருக்களில் அடையாளம் காணப்பட்டது. இவருடைய சடலக்கூராய்வு சான்றிதழ், இவர் தலையில் ஏற்பட்ட பலத்தக் காயங்களினால் இறந்தார் என்று காட்டுகிறது. இதுதொடர்பான முதல் தகவல் அறிக்கையை அளித்திடுமாறு கோரி, அவருடைய சகோதரர் முகமது இஸ்பாக் பலமுறை கஜவுரி காவல்நிலையத்திற்குச் சென்றிருக்கிறார். எனினும் அவர் இறப்பு தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. காவல்துறையைச் சேர்ந்தஒருவர், இவர் மரணத்திற்கு, இழப்பீடு ஏதாவதுஏற்பாடு செய்யப்படும் என்றும், அவர் பெயர் பட்டியலில் சரிசெய்யப்படும் என்றும் கூறியதாகவும் கூறப்படுகிறது.
இறப்பை பதிவு செய்து,எப்ஐஆர் அளித்திடுக
இவருடைய குடும்பம் கடும் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. பஜன்புராவில் இருந்த இஸ்பாக்கின் கடை தீக்கிரையாக்கப்பட்டு, சூறையாடப்பட்டது. கோண்டாவில் இருந்தஅவருடைய சகோதரியின் வீடும் தாக்கப்பட்டு, சூறையாடப்பட்டது. இவர்களில் இளையவரான சிக்கந்தரும் கொல்லப்பட்டார். இக்குடும்பத்திற்கு இரக்கம் காட்டுவதற்குப் பதிலாக, தில்லி காவல்துறை, சிக்கந்தர் இறந்ததைப் பதிவு செய்ய மறுப்பதன் மூலம், அவர்களின் துன்ப துயங்களை மேலும் மோசமாக்கி இருக்கிறது.எனவே, இதில் தாங்கள் உடனடியாகத் தலையிட்டு, உயர்நீதிமன்றத்திற்கு அளித்துள்ள பட்டியலில் கலவரத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 54 என்று மாற்றி அளித்திட வேண்டும்.அதன்மூலம் சிக்கந்தர் பெயரையும் சேர்த்திட வேண்டும். அவர் இறந்தது தொடர்பான முதல் தகவல் அறிக்கையை அவருடைய குடும்பத்தாருக்கு அளித்திட வேண்டும். இவ்வாறு இறந்தவர்கள் எண்ணிக்கையில் தவறு செய்துள்ள காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் கோரியுள்ளார். (ந.நி.)