tamilnadu

img

தலித் இளம்பெண் பாலியல் கொடூரக் கொலை.... பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூற இன்று ஹத்ராஸ் செல்கிறது சிபிஎம்-சிபிஐ குழு

புதுதில்லி:
கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட்ட ஹத்ராஸ் தலித் இளம்பெண்ணின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆறுதல் கூற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ,இந்திய கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் அக்டோபர் 6 செவ்வாயன்று ஹத்ராசுக்கு செல்கின்றனர். 

உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் தலித் இளம்பெண் ஒரு கும்பலால் கொடூரமாக பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். மருத்துவமனையில் உயிருக்கு போராடிய நிலையில் அந்தப் பெண் பரிதாபமாக இறந்தார். அவரது சடலத்தை கூட குடும்பத்தினரிடம் காட்டாமல் இரவோடு இரவாக உத்தரப்பிரதேச பிஜேபி அரசின் காவல்துறை எரித்தது.இச்சம்பவம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  ஹத்ராஸ் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி கோரியும் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெறுகின்றன. 

ஹத்ராஸ் தலித் இளம்பெண் கொலைக்கு   நீதி கோரி ஆயிரக்கணக்கானவர்கள் தில்லி, நாடாளுமன்ற வீதியில் திரண்டனர்.  அப்போது ஜனநாயகத்தை வெட்கித்தலைகுனிய வைத்துள்ள உத்தரப்பிரதேச பாஜக அரசு இனியும் ஆட்சியில் தொடருவதற்கு உரிமை இல்லை என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சாடினார். இந்த போராட்டத்தில் தில்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் மற்றும் பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.  

போராட்டங்களை தடுப்பதற்காக அந்த மாவட்டத்தில் ஒரு மாதத்திற்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாவட்ட எல்லைகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டன. இந்நிலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தூதுக்குழுவினர் அக்டோபர் 6 அன்று ஹத்ராஸ் சென்று தலித் பெண்ணின் குடும்பத்தினரை சந்திக்கிறார்கள்.ஹத்ராஸ் செல்லும் குழுவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் து. ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் அமர்ஜீத் கவுர்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஹீராலால் யாதவ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கிரிஷ் ஷர்மா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

காங்கிரஸ் போராட்டம் 
இந்நிலையில் ஹத்ராஸ் கொடுமைக்கு நீதி கேட்டு காங்கிரஸ் கட்சி சார்பில் நாடு முழுவதும் திங்களன்று சத்தியாக்கிரகப் போராட்டங்கள் நடைபெற்றன.தேசப்பிதா மகாத்மா காந்தியடிகள், அண்ணல் அம்பேத்கர் சிலைகள் முன்பு போராட்டம் நடத்தினர்.பல இடங்களில் தடையை மீறி இந்த போராட்டம் நடைபெற்றது.  தமிழகத்திலும் பல மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

திமுக பேரணி 
உத்தரப்பிரதேச பாஜக ஆட்சியில் தலித் பெண் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை கைது செய்யக்கோரியும் குற்றவாளிகளை பாதுகாக்கும் பாஜக அரசை கண்டித்தும் திமுக சார்பில் சென்னையில் திங்களன்று ஆளுநர் மாளிகை நோக்கி பேரணி நடைபெற்றது. இதில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மகளிரணி செயலாளர் கனிமொழி எம்.பி., பங்கேற்றனர். கிண்டி ராஜீவ் காந்தி சிலை அருகே பேரணியை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்னர் போராட்டக்காரர்கள் இடையே திமுக தலைவர்கள் உரையாற்றினர்.