tamilnadu

img

முகநூல்-பாஜக கள்ளப் பிணைப்பு குறித்து விசாரணை நடத்திட கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திட வேண்டும்- சிபிஎம்

முகநூல்-பாஜக கள்ளப் பிணைப்பு குறித்து விசாரணை நடத்திட, கூட்டு நாடாளுமன்றக் குழுவை அமைத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது.

இது தொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டிருப்பதாவது:

அமெரிக்காவிலிருந்து வெளிவரும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், உலக சமூக ஊடக பயில்வான் போன்று விளங்கும் முகநூல் (Facebook) இந்தியாவில் மதவெறி எதிர்ப்புப் பிரச்சாரத்திற்கு எதிராக அடக்கி வாசித்திடும் கொள்கையைக் கடைப்பிடித்துவருவதை தோலுரித்துக் காட்டியிருக்கிறது. இந்தியாவைப் பொறுத்தவரை அது மதவெறி எதிர்ப்பு சாராம்சத்திற்கு எதிராக தன் சொந்தக் கொள்கையைக் கடைப்பிடிக்கவில்லை.

முகநூலின் நடவடிக்கைகளை அதனுடைய இதர சமூக ஊடகங்களான வாட்சப் மற்றும் இண்ஸ்டாகிராம் நடவடிக்கைகளுடன் ஒப்பிடுகையில் இது மேலும் வலுவானமுறையில் ஐயறவுகளை ஏற்படுத்தி இருக்கிறது. 2018இல் நியூயார்க் டைம்ஸ் நடத்திய ரகசியப் புலனாய்வு, இதன் சர்ச்சைக்குரிய நடவடிக்கைகளைத் தோலுரித்துக் காட்டியது. இவ்வாறு முகநூலின் கோரமுகம் தோலுரித்துக் காட்டப்பட்டிருப்பது, பாஜக சமூக ஊடுகத்திற்காக மிகப்பெரிய அளவில் முதலீடு செய்திருப்பது குறித்தும், அவற்றின்மூலம் செயல்பட்டுக்கொண்டிருப்பது குறித்தும், சமூகத்தினரிடையே வெறுப்பை உமிழ்வது தொடர்பாக அதன் பங்களிப்பு குறித்தும் ஆழமான கேள்விகளை எழுப்பி இருக்கின்றன.

முக்கியமாக, வலுவான சமூக ஊடக செயல்பாடுகளை முறைப்படுத்துவதற்கு நடைமுறை எதுவும் இல்லாத நிலையில், சமீபத்தில் ரிலயன்ஸ் நிறுவனம் முகநூலில் முதலீடு செய்திருப்பது, அதன்மீது ஏகபோகக் கட்டுப்பாட்டைக் கொண்டுவர இருக்கிறதோ என்கிற ஐயுறவை வலுப்படுத்தி இருக்கிறது.

மிகவும் கமுக்கமான முறையில் தேர்தல் பத்திரங்கள் மூலமாகப் பெறப்படும் நிதி உதவி மிகப் பெரிய அளவில் பாஜகவின் நிதி ஆதாரமாக இருந்துகொண்டு, சமூக ஊடகத்தின் மீது தன் கட்டுப்பாட்டை உத்தரவாதப்படுத்துவதற்கு முழுமையாக உதவி வருகிறது.

முகநூல்-வாட்சப்-இண்ஸ்டாகிராம் மற்றும் பாஜக ஆகியவற்றுக்கு இடையேயான கள்ளப் பிணைப்பு குறித்து ஓர் அவசரமான மற்றும் முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், இந்த அமைப்புகள் மதவெறி வெறுப்புப் பிரச்சாரத்தை உமிழ்வதிலிருந்து தடுத்திட ஒரு வலுவான நிர்வாக எந்திரத்தைப் பரிந்துரைத்திட வேண்டும் என்றும் அதன்மூலம் வெறுப்பை உமிழும் நிறுவனம் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்றும் அரசியல் தலைமைக்குழு கோருகிறது.

இந்தக் கள்ளப்பிணைப்பை விசாரணை செய்திட, கூட்டு நாடாளுமன்றக் குழு உடனடியாக அமைக்கப்பட வேண்டும் என்று அரசியல் தலைமைக்குழு கோருகிறது. கூட்டு நாடாளுமன்றக் குழுவின் முடிவுகள் வெளிவரும்வரையில், முகநூல் எந்தவொரு அரசாங்கத்துறையுடனும் அல்லது இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையம் போன்ற அரசமைப்புச்சட்ட நிறுவனம் எதனுடனும் செயல்படுவதைத் தடை செய்திட வேண்டும்.

இவ்வாறு அரசியல் தலைமைக்குழு கோரியுள்ளது.

(ந.நி.)