tamilnadu

img

கருவில் இருக்கும் சிசுவுக்கு கொரோனா

உலகிலேயே முதல் முறையாக கருவில் இருக்கும் சிசுவுக்கு கொரோனா பாதிப்பு தாய் மூலம் ஏற்பட்டிருப்பதாக ராம் மனோகர் லோஹியா மருத்துவமனை மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 
பிறந்த குழந்தைக்கு, கொரோனா நோயாளிகள் வழியாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் கொரோனா பாதித்த தாய்க்குப் பிறந்த குழந்தைகளுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்படவில்லை. 
இந்நிலையில் ஜூன் 11ம் தேதி 24 வயது கர்ப்பிணிக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. அதே சமயம், சிகிச்சைக்குப் பிறகு 25ம் தேதி மீண்டும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டபோதும் கொரோனா இருப்பதாகவே வந்தது. பிறகு ஜூலை 7ம் தேதி மீண்டும்  நடந்த பரிசோதனையில் கொரோனா இல்லை என முடிவு வந்தது.  இதையடுத்து கடந்த ஜூலை 8-ம் தேதி இரவு கர்ப்பிணிக்கு சுகப் பிரசவத்தில் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து 6 மணி நேரத்தில் ஆர்டி-பிசிஆர் கருவி மூலம் பரிசோதனை செய்யப்பட்டதில், குழந்தைக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குழந்தை நலமாக இருக்கிறது. குழந்தைக்கு எந்த அறிகுறியும் இல்லை. 48 மணி நேரம் கழித்து மீண்டும் குழந்தைக்கு பரிசோதனை செய்யப்படும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்த தாய்க்கு, கொரோனா பாதிப்பு இருக்கும் குழந்தை பிறந்திருப்பது இந்த பரிசோதனையில் கண்டறியப்பட்டிருப்பதாக மருத்துவர் கீர்த்தி தெரிவித்துள்ளார். அதே சமயம் குழந்தைக்கு வெளியில் இருந்து கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட எந்த வழியும் இல்லை என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.