வேலைநிறுத்தம் தீவிரமடைந்த நிலையில் ஆதரவாக களத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இறங்கியது. அத்தோழர்களை காவல்துறை கடுமையாக தாக்கியது. தடியடியை தாங்கிக் கொண்ட தோழர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன் மற்றும் முருகேசன் கைது செய்யப்பட்டு சிறையேகினார்கள்.
31-01-1920 அன்று சென்னையில் என்ஜிஓ யூனியன் உருவாக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றத்தில் பணியாற்றிய ஹமீது ஹசன் முதல் தலைவராகவும் எம்.எஸ்.சுந்தரேசன், எம்.பி.சிரோன்மணி ஆகியோர் பொறுப்பாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மூன்று ஆண்டுகாலத்திற்குள் இச்சங்கம் அரசு ஊழியர்கள் மத்தியில் வேரூன்றி வளர்ந்தது. 1924ஆம் ஆண்டு அரசும் இச்சங்கத்திற்கு அங்கீகாரம் அளித்தது. தேசம் முழுவதும் விடுதலைப் போராட்டம் வீறுகொண்டு எழுந்த போது அந்த உணர்வின் தாக்கம் அரசு ஊழியர்கள் மத்தியில் எழவில்லை. அக்காலத்தில் அந்நிய ஆட்சிக்கு விசுவாசம் காட்டும் வகையிலேயே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இக்காலக்கட்டத்தில்தான் 1929ஆம் வருட இறுதியில் சென்னையில் நடந்த காங்கிரஸ் மகாசபையில் பூரண சுதந்திரம்தான் காங்கிரசின் லட்சியம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இக்காலத்தில்தான் உலக முதலாளித்துவத்திற்கு மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதுபெரும் முதலாளித்துவ நாடுகளையும் வளரும் நாடுகளையும்கூட விட்டு வைக்கவில்லை. உற்பத்திப் பண்டங்கள் தேங்கியதால் பெரிய கம்பெனிகள் திவாலாகின. பலர் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். வேலையில்லாத் திண்டாட்டம் மிகக் கடுமையாகியது.
இப்பொருளாதார நெருக்கடியை ஏகாதிபத்திய நாடுகள் இந்தியா உள்ளிட்ட காலனி நாடுகளின் மீது சுமத்தின. அதன் உடனடி வெளிப்பாடாக எண்ணற்ற அரசு ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. 1931ல் “செலவு குறைப்பு குழு” அமைக்கப்பட்டது. அக்கமிட்டி சம்பளக் குறைப்பினை அமல்படுத்தியது. தொடர்ந்து 1939ல் தொடங்கிய இரண்டாவது உலகப்போர் 1945ல் ஆறு வருடங்கள் நடைபெற்றன. ஆரம்பத்தில் முதல் சோசலிச நாடான சோவியத் யூனியனை அழிக்க ஜெர்மனிய பாசிச அரசை வளர்த்துவிட்ட முதலாளித்துவ நாடுகளே அப்பாசிசத்தால் அழிவை சந்திக்க நேர்ந்தது. ஆனால் சோவியத் யூனியன் செஞ்சேனை மிகப்பெரிய தனது தியாகத்தின் மூலம் ஹிட்லரை தோற்கடித்து பாசிசத்திலிருந்து உலகை காப்பாற்றியது.
இந்த யுத்த காலத்தில் அத்தியாவசிய பண்டங்களின் பற்றாக்குறை, விலைவாசிகளின் கடுமையான உயர்வு ஆகியவை காரணமாக அனைத்து மக்களோடு அரசு ஊழியர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டனர். பின்னர் மத்திய அரசு ஊழியர்களின் கடுமையான போராட்டம் காரணமாக முதல் ஊதியக்குழு அமைக்கப்பட்டு சம்பளம் உயர்த்தப்பட்டது. இதனால் மத்திய அரசு ஊழியர்களுக்கும் மாநில அரசு ஊழியர்களுக்கும் சம்பளத்தில் பாகுபாடு ஏற்பட்டது. இதனை எதிர்த்து அன்றைய என்ஜிஓ யூனியன் தலைவர் ஜெகதீசன் தலைமையில் பல கட்ட போராட்டம் நடைபெற்றது. தொடர்ந்து 15.12.47 முதல் 21.12.47 வரை கடுமையான அடக்குமுறையை தாங்கிக் கொண்டு வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதற்கிடையில் தொழிற்சங்க தலைவர்கள் சக்கரைச் செட்டியார், கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எம்.ஆர்.வெங்கட்ராமன் ஆகியோர் நிதியமைச்சர் கோபால்ரெட்டியை சந்தித்து, அரசு ஊழியர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாகப் பேசினர். ஆனாலும் அதனை ஏற்க மறுத்தார் நிதி அமைச்சர்.
ஏஐடியுசியின் 19.12.47 அன்றையக் கூட்டத்தில் இந்த வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. வேலைநிறுத்தம் தீவிரமடைந்த நிலையில் ஆதரவாக களத்தில் கம்யூனிஸ்ட் கட்சி இறங்கியது. அத்தோழர்களை காவல்துறை கடுமையாக தாக்கியது. தடியடியை தாங்கிக் கொண்ட தோழர்கள் எம்.ஆர்.வெங்கட்ராமன் மற்றும் கே.முருகேசன் கைது செய்யப்பட்டு சிறையேகினார்கள். அன்று தொடங்கிய இந்த இணைப்பு ஆதரவு 1920ல் துவங்கிய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு கொண்டாடும் இந்நாளிலும் தொடர்கிறது.