tamilnadu

img

தொடரும் தோழமை - முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு நினைவலைகள்

முதுபெரும் தலைவர் ஆர்.நல்லகண்ணு நினைவலைகள்

இன்று 100-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கும் தோழர் என.சங்கரய்யா மேலும் பல ஆண்டுகள் வாழ வேண்டுகிறேன். அவரைவிட 6 வயது குறைந்தவன் என்கிற முறையில் அவருக்கு எனது புரட்சி வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் இருவரும் ஒரே மாவட்டத்தை சார்ந்தவர்கள் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். நான் பிறந்தது வளர்ந்தது ஸ்ரீவைகுண்டம். தோழர் சங்கரய்யா கோவில்பட்டி அருகில் உள்ள கிராமத்தில் பிறந்தவர். இருவருமே மாணவப் பருவம் முதல் பொதுவுடமை இயக்கத்திற்கு வந்தவர்கள். தோழர் சங்கரய்யா, படிப்பிலும் கெட்டிக்காரர். கல்லூரிப் பருவத்தில் மாணவர்கள் பிரச்சனைகளுக்காக படிப்பையே துறந்தவர். மாணவ சமூகத்திற்கு விடியலை ஏற்படுத்தியதுடன் தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட வழிநடத்திச் சென்றவர்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர்கள் ப.மாணிக்கம், கே.டி.கே.தங்கமணி, ஜீவா உள்ளிட்ட பலருடன் இணைந்து பணியாற்றியவர். சென்னை மாநில தொழிற்சங்கம் உருவாக்கியபோது அந்த இயக்கத்தில் இணைந்து தொழிலாளர்களுக்காக குரல் கொடுத்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உதயமான போது அதில் தன்னை இணைத்துக் கொண்டார். விவசாயிகள் இயக்கத்திலும் கட்சியிலும் ஏராளமான பொறுப்புகளில் திறம்படச் செயல்பட்டிருக்கிறார். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர். தூத்துக்குடி, மதுரை மாவட்டங்களில் தொடங்கிய அவரது கட்சிப்பணி மாநில அளவில் விரிவடைந்தது. அவருடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் கட்சியில் பல்வேறு மாநாடுகள், போராட்டங்கள் உள்ளிட்ட ஏராளமான நிகழ்வுகளில் இருவரும் கூட்டாக பங்கேற்று இருக்கிறோம். அவருடனான தோழமை என்றென்றும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.