நடிகர் சூர்யா நீட் தேர்வுக்கு எதிராக அறிக்கை வெளியிட்டுள்ள விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தலைமை நீதிபதி பிரதாப் சாஹிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் கடந்த சனிக்கிழமை மட்டும் 3 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டனர். இதைத்தொடர்ந்து நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நடிகர் சூர்யா அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில் உயிருக்கு பயந்த காணொலி காட்சி மூலம் வழக்குகளை நடத்தும் நீதிமன்றங்கள் கூட மாணவர்களை பயப்படாமல் தேர்வெழுத போகச் சொல்கிறது என நீட் மரணங்கள் குறித்த தனது அறிக்கையில் விமர்சித்திருந்தார்.
இதைத்தொடர்ந்து நீதிபதி எஸ்.எம் சுப்பிரமணியம் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம் ஒன்றை எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் என்னுடைய கருத்துப்படி அந்த அறிக்கையானது நீதிபதிகளின் ஒருமைப்பாடு மற்றும் ஈடுபாட்டையும் நமது நாட்டின் நீதிமன்ற கட்டமைப்பையும் குறை மதிப்புக்குட்படுத்தும் வகையில் மட்டுமின்றி அதை தவறான முறையில் விமர்சித்துள்ளதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரலாம். இதனால் நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கைக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.
எனவே நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.