tamilnadu

img

செம்மொழித் தமிழும் சேர்க்கப்பட்டது.... சு.வெங்கடேசன் எம்.பி., எழுப்பிய பிரச்சனைக்கு தீர்வு: முதல்வர், மு.க.ஸ்டாலின் வரவேற்பு...

புதுதில்லி:
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எழுப்பிய பிரச்சனையைத் தொடர்ந்து,  மத்திய அரசின் இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (ஏஎஸ்ஐ) முதுநிலைப் பட்டயப் படிப்புக்கான தகுதியில், (பி.ஜி.டிப்ளமோ) செம்மொழி வரிசையில் தமிழும் சேர்க்கப்பட்டுள்ளது.தில்லி அருகே  நொய்டாவில் மத்திய தொல்லியல் துறையின்,  பண்டித தீனதயாள் உபாத்யாயா கல்வி நிறுவனத்தில் 2 வருட முதுநிலைப் பட்டயப் படிப்பிற்கான மாணவர் சேர்க்கை அறிவிப்பில் கல்வித்தகுதியாக வரலாறு, தொல்லியல், மானுடவியல் ஆகியதுறைகளில் முதுநிலை எம்.ஏ. முடித்திருக்க வேண்டும்; செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்ற சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபுஅல்லது பாரசீகம் மற்றும் மண்ணியல் ஆகிய துறைகளில் எம்.ஏ. முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம் என்று  கூறப்பட்டிருந்தது.

ஆனால் செம்மொழியான  தமிழில்படித்தவர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட வில்லை. இதுகுறித்து மதுரை நாடாளு மன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் முதன்முறையாக கேள்வி எழுப்பி, தமிழை சேர்க்க வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து, தொடர்ச்சியாக தமிழைப் புறக்கணிக்கும் மத்திய பாஜக அரசின் செயலைக் கண்டித்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் அறிக்கை வெளியிட்டனர்.தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இப்பிரச்சனை குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதினார்.

கோரிக்கை ஏற்பு 
இந்நிலையில் வியாழனன்று மத்திய தொல்லியல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  ‘செம்மொழிப் பட்டியலில் இடம்பெற்ற தமிழ், சமஸ்கிருதம், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா மற்றும் பாலி, பிராகிருதம், அரபி அல்லது பாரசீகம்மொழி உள்ளிட்ட’ எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி., விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது:இந்தியத் தொல்லியல் துறை அறிவித்திருந்த தொல்லியல் பட்டயப்படிப் பிற்கான கல்வித்தகுதியில் தமிழ்மொழி சேர்க்கப்படாதது குறித்து எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்திருந்தேன். இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டின் எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், தமுஎகசஉள்ளிட்ட பல்வேறு ஆளுமைகளும் அமைப்புகளும் தங்களின் எதிர்ப்பினை வெளிப்படுத்தினர். முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் இந்தியப் பிரதமருக்குக் கடிதம் எழுதினார்.இந்த நடவடிக்கைகளைத் தொடர்ந்து இந்தியத் தொல்லியல் துறை வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் பட்டயப்படிப்புக்கான கல்வித்தகுதியில் தமிழ் உள்ளிட்ட செம்மொழிகள் அனைத்தையும் சேர்த்துள்ளது. இந்தியத் தொல்லியல் துறையின் இந்த அறிவிப்பினை வரவேற்கிறேன்.இந்தியத் தொல்லியல் துறைக்குள் நுழையும் வாசலிலேயே தமிழ் மாணவனை தகுதி இழக்கச்செய்யும் அநீதிக்கு முடிவுகட்டப்பட்டுள்ளது.

சமஸ்கிருதம் அல்லாத பிற செம்மொழிகளுக்கு இழைக்கப்பட்ட அநீதியைப் போக்க  தமிழகமே உரத்துக் குரல்கொடுத்தது.இந்தியத்தொல்லியல் துறை தனது விடாப்பிடியான இறுக்கத்தைத் தளர்த்தி மறுஅறிவிப்பு செய்ததைப் போல, ”இந்தியபண்பாட்டின் தோற்றத்தையும் பரிமாணத்தை யும்” ஆய்வுசெய்ய அமைக்கப்பட்ட குழுவினைக் கலைக்கும் அறிவிப்பினையும் விரைவில் வெளியிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முதல்வர், தலைவர்கள் வரவேற்பு
தமிழ் மொழி சேர்க்கப்பட்டதற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
மத்திய தொல்லியல் துறையின் பட்டயப்படிப்பிற்கான தகுதியில் தமிழ் மொழி திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டது. கடும் கண்டனத்திற்குப் பிறகு தமிழ் இணைக்கப்பட்டிருக் கிறது. வரவேற்கிறேன். மொழிகளே, பன்முகத்தன்மையின் பண்பாட்டு அடித்தளங்கள்! இனியும் மாற்றாந்தாய் மனப்போக்கை கடைப்பிடிக்க வேண்டாம்.இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

கே.பாலகிருஷ்ணன்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தமது டுவிட்டர் பதிவில், “மத்திய தொல்லியல் படிப்பில் செம்மொழி தமிழுக்கு இடமெங்கே என்ற கேள்வியை மதுரை எம்.பி., சு.வெங்கடேசன் எழுப்பினார். திமுக தலைவர் மு.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டார். தமிழக முதலமைச்சர் கடிதம் எழுதினார். இப்படி பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு குரல் வந்த நிலையில், இந்திய அரசு நிலைபாட்டை மாற்றியுள்ளது. இந்திய அரசு என்பது‘இந்தி’ அரசாக இயங்கக்கூடாது. இந்தி திணிப்பிற்கு எதிராக அனுதினமும் போராடுகிற நிலைமை மாற வேண்டும். அனைவருக்குமான அரசாக செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.இதேபோல் கி.வீரமணி, வைகோ உள்ளிட்டோர் வரவேற்றுள்ளனர்.மேலும், சு.வெங்கடேசன் எம்.பி., முதன்மைக் குரல் எழுப்பியமைப்புக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், ஜோதிமணி மற்றும் சமூக ஆர்வலர்கள் ஆழி. செந்தில்நாதன், பூவுலகின் நண்பர்கள் சுந்தரராஜன், தொல்லியல் ஆய்வாளர் க.த.காந்திராஜன் உள்ளிட்டோரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.இந்த முதுநிலைப் பட்டயப்படிப்பு மொத்தம் 15 மாணவர்களுக்கானது. இதில் தேர்வாகும் மாணவர்களுக்கு 2 ஆண்டுகளுக்கு மாதம் ரூ.8 ஆயிரம்  உதவித்தொகையாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்கக்கடைசித் தேதி நவம்பர் 8 ஆகும். நேர்முகத் தேர்வு நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. இந்தப் படிப்பை முடிப்போர் ஏஎஸ்ஐயின் அலுவலகங்கள், அருங்காட்சியகங்கள் மற்றும் தொல்லியல் ஆய்வாளர்களாகப் பணியாற்றலாம்.தமிழ் மொழிக்கு ஆதரவாக எழுந்த குரலால், இப்பட்டயப் படிப்பில் முதன்முறையாக கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஒடியா ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.