பாட்னா
கொரோனா பதற்றத்துக்கு இடையே பீஹார் மாநிலத்தில் வரும் 28-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது. 3 கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தலின் முதல் கட்டமாக (வரும் 28-ஆம் தேதி) 71 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அடுத்த 2 கட்டங்கள் நவம்பர் 3ஆம் தேதி, 7ஆம் தேதிகளில் நடைபெறுகிறது.
முதல் கட்ட வாக்குப்பதிவிற்கு தற்போது வேட்புமனு தாக்கல் தொடங்கி உள்ள நிலையில், ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ராம் விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி என்ற முக்கியமான கட்சி விலகியுள்ளது. மாநில கூட்டணியில் இருந்து விலகினாலும் தேசிய அளவிலான கூட்டணியில் தொடர்ந்து பாஜகவுடன் இணைந்து இருப்பதாக லோக் ஜன சக்தியின் இளம் தலைவரும், ராம் விலாஸ் பஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்வான் அறிவித்துள்ளார்.
ராம் விலாஸ் பஸ்வான் தில்லியில் கவலைக்கிடமான நிலையில் மருத்துவ சிகிச்சை பெற்று வருவதால் அவரது மகன் சிராக் கட்சி பொறுப்பை கவனித்து வருகிறார். பீஹார் சட்டப்பேரவை தேர்தலில் கூட்டணி தொடர்பாக என் மகன் எடுக்கும் முடிவு தான் இறுதி முடிவு என ராம் விலாஸ் பஸ்வான் ஏற்கெனவே அறிவித்திருந்தார்.பாஜக கூட்டணியில் இருந்து விலகியுள்ளதால் தனித்து போட்டியா அல்லது வேறு எந்த கட்சியுடன் கூட்டணியா என்பது தொடர்பாக திடமான அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.
பீகாரில் மொத்தம் 243 தொகுதிகள் உள்ளது. லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதள கட்சியின் தலைமையிலான மெகா கூட்டணி மற்றும் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி என இரண்டு கூட்டணிகள் மோதுகின்றன. இதில் மெகா கூட்டணியில் லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதாதளம், காங்கிரஸ், இடதுசாரிகள் போன்ற கட்சிகள் உள்ளன. இந்த கூட்டணிக்கு தொகுதிகள் பிரிக்கப்பட்டு லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.