மத்திய அரசின் 2019-20 பட்ஜெட் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, விவசாயத் தொழிலாளர்கள் விரோத பட்ஜெட் என்று சிஐடியு, அகில இந்திய விவசாயிகள் சங்கம், முதலானவை தெரிவித்திருக்கின்றன.
மோடி-2 அரசாங்கத்தின் முழுமையான பட்ஜெட் அது ஆட்சிப் பொறுப்பேற்றபின் வெள்ளிக்கிழமையன்று நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமனால் சமர்ப்பிக்கப்பட்டது. து குறித்து வெகுஜன அமைப்புகளின் விமர்சனங்கள் வருமாறு:
சிஐடியு
சிஐடியு சார்பில் பொதுச் செயலாளர் தபன்சென் கூறியிருப்பதாவது:
மோடி-2 அரசாங்கம் சமர்ப்பித்துள்ள பட்ஜெட், எவ்விதமான அடிப்படை அம்சங்களும் இன்றி பெரும்பான்மை மக்களை ஏமாற்றக்கூடிய ஒரு பட்ஜெட்டாக அமைந்துள்ள அதே சமயத்தில், கார்ப்பரேட்டுகளைப் பல்வேறு வடிவங்களில் வெண்சாமரம் வீசி வரவேற்கும் பட்ஜெட்டாகவும் அமைந்திருக்கிறது. நாட்டின் வளங்களை கார்ப்பரேட்டுகளிடம் மடைமாற்றம் செய்யும் விதத்திலும், அவர்கள் சாமானிய மக்களை, குறிப்பாக தொழிலாளர்களை, மேலும் அதிகமான முறையில் சூறையாடிச் செல்லும் விதத்திலும் அமைந்துள்ளது.
நாட்டின் பொருளாதாரம் வேலைவாய்ப்பை உருவாக்க முடியாத நிலையில் மிகவும் மந்தமாக இருப்பது தொடரக்கூடிய அதேசமயத்தில், வேலையின்மை விகிதம் 2019 ஜூனில் 7.4 சதவீதத்தை எட்டியிருக்கக்கூடிய அவலநிலையில், நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு என்பது கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கக்கூடிய நிலையில், இதைப் பற்றியெல்லாம் ஆழமானமுறையில் கவலைப்படாத பட்ஜெட்டாக இது அமைந்திருக்கிறது.
பட்ஜெட்டில் 80 கால்நடை வர்த்தகக் காப்பகங்கள் (Livelihood Business Incubators) அமைக்கப்படும், 20 தொழில்நுட்ப வர்த்தகக் காப்பகங்கள் (Technology Business Incubators) அமைக்கப்படும் என்று கூறியிருப்பதெல்லாம், உண்மையில் கார்ப்பரேட்டுகளை வெண்சாமரம் வீசி வரவேற்கும் நடவடிக்கைகளே தவிர, வேறல்ல. உண்மையில் இவை விவசாயிகளிடம் இப்போது இருந்துவரும் நில உரிமைகளைப் பறிப்பதற்கான நடவடிக்கைகளேயாகும், கிராமப்புற மக்களின் சிறிய அளவிலான உற்பத்திப்பிரிவுகளை அழித்தொழிக்கும் நடவடிக்கைகளுமாகும். உண்மையில் இந்த பட்ஜெட் கிராமப்புறங்களில் நீடித்துவரும் விவசாய நெருக்கடியைத் தீர்ப்பதற்கு வழிவகை செய்யும் விதத்தில் அங்கே பொது முதலீட்டை ஏற்படுத்துவதற்கோ, சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு கடன் வசதிகளைச் செய்துதருவதற்கோ, விவசாயத் தொழிலாளர்களுக்கு உத்தரவாதமான ஊதியத்திற்கு வழிவகை செய்து தருவதற்கோ எதையுமே கூறவில்லை.
பட்ஜெட், நாட்டில் இரண்டரை கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ள பணக்காரர்கள்மீது சர்சார்ஜ் வரி விதிக்க இருப்பதாகப் பாசாங்குத்தனம் செய்திருக்கிறது. உண்மையில் அவர்கள் இதுவரை அளித்துவந்த கார்ப்பரேட் வரியை 35 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாகக் குறைத்திருக்கிறது. இதே கார்ப்பரேட்டுகள்தான் நாட்டின் பொதுத்துறை வங்கிகளிடம் பெற்ற கடன்களைத் திருப்பிச்செலுத்தாமலும், அரசாங்கத்திற்குச் செலுத்தவேண்டிய வருமான வரி, கார்ப்பரேட் வரி மற்றும் பலவிதமான வரிகளைத் திருப்பிச் செலுத்தாமல் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்களுமாவார்கள். இவ்வாறு இவர்கள் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய தொகை மட்டும் முந்தைய பட்ஜெட் காலத்தில் 7,35,000 கோடி ரூபாய்களாகும். இவற்றை இவர்களிடமிருந்து எவ்விதம் வசூலிக்கப்போகிறோம் என்பது குறித்து ஒரு வரியைக் கூட இந்த பட்ஜெட் கூறிடவில்லை. மாறாக, அப்பேர்வழிகளுக்கு மேலும் பல சலுகைகளை இந்த பட்ஜெட் அறிவித்திருக்கிறது. அதே சமயத்தில் சாமானிய மக்களை நாள்தோறும் கசக்கிப் பிழியும் விதத்தில் பெட்ரோல் டீசல்களுக்கு வரியை உயர்த்தி இருக்கிறது. மற்றும் பல்வேறு மறைமுக வரிகளையும் விதித்திருக்கிறது.
45 லட்சம் ரூபாய் வரையிலும் வீட்டுக்கடன் மீதான வரி மற்றும் வட்டி விகிதங்களில் சில சலுகைகள் அறிவிக்கப்பட்டிருப்பது உண்மையில் ரியல் எஸ்டேட் வர்த்தகர்களுக்கு பயனளிக்குமே தவிர, உண்மையில் வீட்டுவசதி கோரும் ஏழைகளுக்கு எவ்விதத்திலும் உதவாது.
நாட்டின் பொருளாதாரத்தின் மிகவும் முக்கிய துறைகள் அனைத்தையும் அந்நிய கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு அகலத் திறந்துவிட்டிருக்கிறது. பொதுத்துறை நிறுவனங்களை அழிக்கக்கூடிய விதத்தில் மிகப்பெரிய அளவில் அவுட்சோர்சிங் முறையை இராணவத் தளவாடங்கள் உற்பத்தி, ரயில்வே உற்பத்திப் பிரிவுகள் முதலானவற்றில் கொண்டுவரவும் பட்ஜெட்டில் வகைசெய்யப்பட்டிருக்கிறது. உண்மையில் இந்த பட்ஜெட் நாட்டின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்களை அழித்து, அவற்றினிடத்தில் மிகப்பெரிய கார்ப்பரேட்டுகள் அமர்வதற்கேற்ற விதத்தில் வசதிசெய்து தரப்பட்டிருக்கிறது. இதனால் சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்களில் வேலையில் உள்ளவர்கள் மட்டுமல்ல, சுயவேலைவாய்ப்பு முறையில் அவற்றை நடத்திவரும் சிறு முதலாளிகளும் கடும் பாதிப்புக்கு உள்ளாவார்கள். பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி காரணமாக ஏற்கனவே அழிவின் விழிம்புக்குத் தள்ளப்பட்டுள்ள சிறிய மற்றும் நடுத்தரத் தொழில்கள் இப்பட்ஜெட் நடவடிக்கைகள் மூலமாக மேலும் அழியக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றன.
நாட்டில் இலாபகரமாக இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்பதன்மூலம் சுமார் 1.05 லட்சம் கோடி ரூபாய் ஈட்டிட பட்ஜெட் முடிவு செய்திருக்கிறது.
நாட்டில் தற்சமயம் அங்கன்வாடி, ‘ஆஷா போன்று பல்வேறு திட்டப் பணிகளில் ஒரு கோடிக்கும் மேலான தொழிலாளர்கள் அற்ப ஊதியத்துடன் பணிபுரிந்து வருகிறார்கள். அவர்களின் ஊதியத்தை உயர்த்திட இந்த பட்ஜெட்டில் எதுவுமே கூறப்படவில்லை. குறைந்தபட்சம் அவர்களுக்கு ஓய்வூதியமாக 6000 ரூபாய் வழங்கவேண்டும் என்ற அனைத்துத் தொழிற்சங்கங்களின் கோரிக்கை குறித்தும் பட்ஜெட் எதுவும் கூறிடவில்லை. மாறாக, மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் உட்பட அனைத்து சமூக நலத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடும் குறைக்கப்பட்டிருக்கிறது.
ஒட்டுமொத்தத்தில் கூறவேண்டுமானால் இது மக்கள் விரோத, தொழிலாளர் விரோத பட்ஜெட்டாக இருக்கக்கூடிய அதே சமயத்தில் தங்களுடைய உண்மையான எஜமானர்களான கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்திடும் பட்ஜெட்டுமாகும்.
இத்தகைய தொழிலாளர் விரோத பட்ஜெட்டுக்கு எதிராக, மக்கள் விரோத பட்ஜெட்டுக்கு எதிராக அனைத்துத்தரப்பு உழைக்கும் மக்களும் ஒன்றுபட்டுப் போராட முன்வரவேண்டும் என்று சிஐடியு அறைகூவி அழைக்கிறது.
இவ்வாறு தபன்சென் அறிக்கையில் கூறியுள்ளார்.
விவசாய சங்கம்
அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் தலைவர் அசோக் தாவ்லே மற்றும் பொதுச் செயலாளர் ஹன்னன்முல்லா கூறியிருப்பதாவது:
இந்த பட்ஜெட்டில் விவசாயிகள் குறித்து துல்லியமானமுறையில் எதுவும் கூறப்படவில்லை. மாறாக வெற்று உரைகளே காணப்படுகின்றன. மேலும் விவசாயிகளின் வயிற்றில் அடித்து கார்ப்பரேட்டுகளின் இலாபத்தைப் பெருக்கக்கூடிய விதத்திலும் இந்த பட்ஜெட் அமைந்திருக்கிறது.
விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பது குறித்தோ அல்லது அவர்களின் கடன்வலையிலிருந்து அவர்களை மீட்பதற்கு என்ன செய்யவேண்டும் என்பது குறித்தோ பட்ஜெட்டில் எதுவுமே கூறப்படவில்லை. மாறாக, டீசலுக்கு லிட்டருக்கு 2 ரூபாய் செஸ் வரி விதித்திருப்பதன் மூலம் விவசாயிகளின் உற்பத்திச் செலவினத்தை அதிகரித்து, அவர்களுக்கு மேலும் சுமையினை ஏற்றி இருக்கிறது.
வேளாண் நெருக்கடிக்கான காரணங்களில் மிகவும் முக்கியமான ஒன்று இடுபொருட்களின் விலைகள் விண்ணை எட்டியிருப்பதாகும். விதைகள், இரசாயன உரங்கள், டீசல் மற்றும் மின்சாரம் ஆகியவற்றுக்கான விலைகளும் செலவுகளும் உச்சத்திற்குச் சென்றுள்ளன. இவற்றைக் கட்டுப்படுத்திடக்கூடிய விதத்தில் பட்ஜெட்டில் எதுவுமே கூறப்படவில்லை.
மத்திய நிதியமைச்சர் இவ்வாறு எதுவும் கூறாதது மட்டுமல்ல, வெந்தபுண்ணில் வேலைப் பாய்ச்சுவதுபோல் விவசாயிகள் இடுபொருட்கள் வாங்கத் தேவையில்லை, அவர்கள் ஜீரோ பட்ஜெட் விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை பகர்ந்துள்ளார். நாட்டில் வறட்சி மிகவும் அதீதமாக ஏற்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் அதிகமான எண்ணிக்கையில் விவ்சாயத் தொழிலாளர்களாக மாறக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால் மகாத்மாகாந்தி தேசியக் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழான ஒதுக்கீடு ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது.
2019ஆம் ஆண்டில் குறைந்தபட்ச ஆதார விலை மிகவும் அற்ப அளவிலேயே உயர்த்தப்பட்டிருக்கிறது.
இவ்வாறு விவசாயிகளுக்கு எவ்விதத்திலும் பயனளிக்காத பட்ஜெட்டாக இது அமைந்துள்ள அதே சமயத்தில் விவசாயத்துறை சார்ந்த பல்வேறு தொழில்துறைகளில் கார்ப்பரேட்டுகளை அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளும் இந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருக்கிறது. எனவே இந்த பட்ஜெட்டிற்கு எதிராக அனைத்துத்தரப்பு விவசாயிகளும் கிளர்ந்தெழுந்திட வேண்டும் என்று அகில இந்திய விவசாயிகள் சங்கம் அறைகூவி அழைக்கிறது.
இவ்வாறு அசோக் தாவ்லேயும்., ஹன்னன்முல்லாவும் கூறியுள்ளார்கள்.
(ந.நி.)