tamilnadu

img

உ.பி.யில் மேலும் ஒரு தலித் இளம்பெண் பாலியல் வன்கொலை...

லக்னோ:
மனீஷா பாலியல்  வன்கொலையைத் தொடர்ந்து, உ.பியில்  மற்றுமொரு தலித் பெண் கும்பல்  வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். பல்ராம்பூர் மாவட்டத்திலுள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றிவந்த 22 வயது தலித்பெண்ணைக் கடத்திய 2 பேர், அவருக்கு மயக்க ஊசிபோட்டு கொடூரமான முறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கியுள்ளனர். இதில் ரத்தக் கசிவு ஏற்பட்டு அந்தப்பெண் உயிருக்குப் போராடிய நிலையில், பயந்துபோன அவர்கள் அவரை ரிக்சாவில் தூக்கிப்போட்டு வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். இதையடுத்து பெண்ணின்குடும்பத்தினர் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச்  சென்றுள்ளனர்.  ஆனால், சிறிது நேரத்திலேயே அந்த இளம்பெண் இறந்துபோயுள்ளார். இச்சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  இதுதொடர்பாக, ஷாகித், ஷாகில் ஆகிய 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மனீஷா குடும்பத்திற்கு நிவாரணம்
உ.பி. மாநிலத்தில் தலித் இளம்பெண் மனீஷா, மிகக் கொடூரமான முறையில் பாலியல் வன்கொலை செய்யப்பட்டார். நாட்டையே உலுக்கிய இச்சம்பவத்தில், மனீஷாவின் உடலை அவரது பெற்றோர்களிடம் தராமல், மாநில பாஜக அரசே தலையிட்டு எரித்து விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில், மனீஷாவின் குடும்பத்திற்கு ரூ. 25 லட்சம் நிவாரணம்; வீடு, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என முதல்வர் ஆதித்யநாத் அறிவித்துள்ளார். ரூ. 10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று ஹத்ராஸ் மாவட்ட ஆட்சியர் முன்பு அறிவித்திருந்த நிலையில், அது தற்போது ரூ. 25 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.