ஆந்திர முதல்வர் அளித்துள்ள புகார்மனுமீது, உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, முடிவு எதுவும் எடுக்காமல் கிடப்பில் போட்டிருப்பது சரியல்ல என்றும் அவர் இதில் விரைந்து முடிவு எடுத்திட வேண்டும் என்றும் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் கோரியுள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா மற்றும் பொதுச் செயலாளர் பி.வி. சுரேந்திரநாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இந்திய வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு, ஒரு மாநிலத்தின் முதல்வர் (ஆந்திரப்பிரதேச மாநில முதல்வர் திரு.ஜெகன்மோகன் ரெட்டி) உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு புகார் மனு அனுப்பியிருக்கிறார். அதில், அவர் உயர்நீதிமன்ற நீதிபதிகள் சிலர் அரசியல் சாய்மானத்துடன் பணி செய்வதாகக் குற்றஞ்சாட்டி இருக்கிறார். மேலும் உச்சநீதிமன்றத்தின் மூத்த நீதிபதி நீதியரசர் என்.வி. ரமணா என்பவர்மீதும் ‘உயர்நீதிமன்றத்தில் தன் செல்வாக்கைப்பயன்படுத்தி சலுகை பெற முயற்சிப்பதாகவும்’ குற்றஞ்சாட்டி இருக்கிறார்.
இவ்வாறு அவர் புகார் மனு அளித்து ஒரு மாதம் ஆகியும் அதன்மீது தலைமை நீதிபதி எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை. இதன்மீது மேலும் தாமதம் ஏற்படுவது, நீதித்துறையின் மீது மகத்தான அளவில் சேதத்தை ஏற்படுத்தும். நீதித்துறையின் நலன் கருதி, மற்றும் நீதிபதிகளின் நலன் கருதி, இதன்மீது உரிய நடவடிக்கை மேலும் காலதாமதமின்றி மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
புகார்தாரர் அளித்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு அடிப்படை எதுவும் இல்லை என்று நீதிபதி கருதுவாரானால், இவ்வாறு புகார் அளித்தவருக்கு எதிராகவும் கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டும்.
நீதித்துறையின் சுதந்திரத்தை உயர்த்திப்பிடிக்கும் விதத்திலும், மக்களுக்குப் பதில் சொல்லும் விதத்திலும், நீதிமன்றத்தின்மீது நீதிமன்றத்திற்கு உள்ளேயிருந்தோ அல்லது வெளியிலிருந்தோ எந்தவிதத்தில் தலையீடு வந்தாலும் அதைத் தடுத்திடும் விதத்திலும் அவசியமான நடவடிக்கைகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எடுப்பார் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் நம்புகிறது, எதிர்பார்க்கிறது மற்றும் தூண்டுகிறது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
(ந.நி.