வட கிழக்கு கலவரங்கள் வழக்கில் தற்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் பெயரையும், தில்லிக் காவல்துறையினர் பிணைத்திருக்கின்றனர். இதற்கு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சங்கத்தின் தலைவர், மாலினி பட்டாச்சார்யா, பொதுச் செயலாளர் மரியம் தாவ்லே மற்றும் சட்ட ஆலோசகர் கீர்த்தி சிங் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மத்திய பாஜக அரசாங்கத்தின் அதிலும் குறிப்பாக உள்துறை அமைச்சகத்தின் கட்டளைக்கிணங்க, தில்லிக் காவல்துறையினர் வழக்கின் சாட்சிகள் இருவர் அளித்த வாக்குமூலங்களின் அடிப்படையில் தங்கள் சங்கத்தின் புரவலர் பிருந்தா காரத் பெயரையும் ஒரு குற்ற அறிக்கையில் சேர்த்திருப்பதற்கு, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறது. இவ்வாறு அவர் பெயர் வட கிழக்கு தில்லியில் முஸ்லீம்கள் மீது ஏவப்பட்ட வகுப்புவாத வன்முறை வெறியாட்டங்களுக்கு அவரும் பொறுப்பாவார் என்று கோரும் விதத்தில் பொய்யாகவும், போலித்தனமாகவும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு அவர் பெயர் இருவர் அளித்ததாகக் கூறப்படும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் 161ஆவது பிரிவின்கீழ் பதிவு செய்யப்பட்ட வாக்குமூலங்களின் அடிப்படையில் சேர்க்கப்பட்டிருக்கிறது. 161ஆவது பிரிவு வாக்குமூலம் என்பது காவல்துறையினரே சாட்சிகள் கூறியதாகப் பதிவு செய்துகொள்ளும் ஆவணமாகும். இதனை எந்தவிதத்திலும் நீதிமன்றங்கள் சாட்சியமாக ஏற்றுக்கொள்வதில்லை. இத்தகைய வாக்குமூலங்களின் அடிப்படையிலேயே மதிப்புமிக்க அறிவுஜீவிகள், கல்வியாளர்கள், இதழாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் பொய்யாக வழக்குகளுடன் பிணைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
குடியுரிமைத் திருத்தச்சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராக விமர்சனங்களைச் செய்திட்ட எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள், மாணவர்கள், கல்வியாளர்கள் முதலானவர்கள், தில்லிக் கலவரங்களுடன் சம்பந்தப்பட்ட குற்ற அறிக்கையில் பொய்யாகப் பிணைக்கப்பட்டு வருகிறார்கள். உண்மையில், வெறுப்புப் பேச்சை உமிழ்ந்து, வன்முறையைத் தூண்டிய மற்றும் கலவரங்களுக்குப் பொறுப்பாளரான பாஜக-வின் கபில் மிஷ்ரா போன்றவர்களைப் பிணைப்பதற்குப் பதிலாக, தில்லிக் காவல்துறையினர் கலவரங்கள் மேற்கொள்வதற்காக குடியுரிமைத் திருத்தச்சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்களால் சதி செய்யப்பட்டதாக ஒரு கற்பனைக் கதையைப் பொய்யாக ஜோடனை செய்திருக்கிறார்கள். அரசாங்கத்துடன் ஒத்துப்போகாதவர்களை அச்சுறுத்துவதற்காகவும், அவர்களின் பேச்சுரிமை, அமைதியானமுறையில் தங்கள் கருத்தைக் கூறும் உரிமையை மறுக்கும் விதத்திலும் அவர்களைப் பழிவாங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு நரவேட்டையாடுவதன் ஓர் அங்கமாகவே இத்தகையப் பொய்க்கதைகள் ஜோடனை செய்யப்பட்டிருக்கின்றன. மத்திய அரசாங்கம், தன்னுடைய காவல்துறையினர் மூலமாக, உமர் காலித், நடாஷா நர்வால், தேவங்கனா கலிதா, குல்ஃபிஷா பாத்திமா போன்ற, குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய முன்னணி ஊழியர்களைத் தொடர்ந்து வேட்டையாடி, சிறைப்படுத்திக் கொண்டிருக்கிறது. அவர்களை மிகவும் கொடூரமான சட்டவிரோத நடவடிக்கைகள் தடைச் சட்டத்தின் கீழ் சிறைகளில் அடைத்திருக்கிறது.
அரசாங்கத்தின் கொள்கைகளுடன் ஒத்துப்போகாவிட்டால் அது ஒரு குற்றம் கிடையாது. அரசின் கொள்கையுடன் வேறுபடுவதற்கான உரிமை, அரசமைப்புச்சட்டம் உத்தரவாதப்படுத்தியுள்ள உரிமையாகும். பாஜக அரசாங்கம், இந்தவிதத்தில் சட்டத்தைத் துஷ்பிரயோகம் செய்வதன் மூலம் கருத்து வேறுபாடு கூறுவதைத் தடுத்திட முடியாது.
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தைச் சேர்ந்த நாங்கள், குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசியக் குடிமக்கள் பதிவேடு மற்றும் தேசிய மக்கள்தொகைப் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகவும், அரசாங்கத்தின் மக்கள் விரோதக் கொள்கைகளுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடி வருகிறோம். இவ்வாறு போராடுகிறவர்களையும், தங்கள் அரசாங்கத்திற்கு எதிராகக் கருத்துக் கூறுபவர்களையும் கிரிமினல்தனமாகக் கைதுசெய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று கோருகிறோம், வகுப்புக் கலவரங்களில் பொய்யாகப் பிணைக்கப்பட்டுள்ள அனைவரின் பெயர்களையும் நீக்க வேண்டும் என்றும் கோருகிறோம். அவர்கள் அனைவரையும் உடனடியாக சிறைகளிலிருந்து விடுவிக்க வேண்டும் என்றும் கோருகிறோம்.
முஸ்லீம்கள் அதிகஅளவில் குறிவைக்கப்பட்ட தில்லி கலவரம் ஏற்படுவதற்காக உண்மையான காரணங்களை கண்டறிவதற்காக, வேறு போலீஸ் துறையால்
ஓர் ஓய்வுபெற்ற நீதிபதியின் கீழ் சுயேச்சையான விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கோருகிறோம்.
இவ்வாறு அவர்கள் தங்கள் அறிக்கையில் கோரியுள்ளனர்.
(ந.நி.