அகில இந்திய மாணவர் சம்மேளனம் 1936ல் துவங்கப்பட்டபோது, நாடு முழுவதுமிருந்து 936 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இந்த மாநாட்டில் சம்மேளனத்தின் தலைவராக சத்யபால் டாங், பொதுச்செயலாளராக பிரேம் நாராயணன் பார்கவா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்த மாநாட்டில் ஜவஹர்லால் நேருவும், முகமது அலி ஜின்னாவும் கலந்து கொண்டிருந்தது முக்கியத்துவம் பெற்றது. அத்துடன் முகமது அலி ஜின்னா மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகளுடன் எடுத்துக் கொண்ட புகைப்படமும் அந்தக் காலத்தில் பிரபலமாக பேசப்பட்டது. இந்த மாநாடு இரண்டு நாள் லக்னோ நகரின் கங்கா பிரசாத் மெமோரியல் ஹாலில் நடைபெற்றது.
சம்மேளனத்தின் முழக்கமாக சுதந்திரம், சமாதானம், முன்னேற்றம் ஆகியவை அறிவிக்கப்பட்டது. 1958ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய சிறப்பு மாநாட்டில் படிப்போம், போராடுவோம் என்ற முழக்கம் ஏற்றுக்கொள்ளப்படும் வரை முந்தைய முழக்கமே சம்மேளனத்தின் முழக்கமாக இருந்தது. மாநாடு முடிவடைந்த பின்னர் நாட்டின் பல்வேறு நகரங்களிலும் உள்ள கல்வி நிலையங்களில் சம்மேளனத்தின் கிளைகளை உருவாக்கும் பணியில் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தனர். அதன் விளைவாக பெரும்பாலான மாகாணங்களில் மாணவர் சம்மேளனத்தின் கிளை அமைப்புகள் உருவாக்கப்பட்டன.
அதையொட்டி இந்தக் காலத்தில் சென்னை மாகாணத்திலும் சம்மேளனத்தின் கிளை அமைப்புகளை உருவாக்குவதற்கான முயற்சிகள் நடைபெற்றன. அதன்விளைவாக முதல் அமைப்பு மாநாடு நடந்த அதே 1936ஆம் ஆண்டில் சென்னை மாணவர் சங்கம் (எம்.எஸ்.ஓ) உருவானது. அதில் சென்னை மருத்துவக் கல்லூரி, சட்டக்கல்லூரி, பொறியியல் கல்லூரி ஆகியவற்றில் பயின்ற மாணவர்கள் தீவிரமாக பங்கேற்றனர். சென்னை மருத்துவக் கல்லூரியில் பயின்ற பின்னாளில் பிரபலமான மருத்துவர்களான பி.கே.ஆர். வாரியர், பி.சுந்தரய்யாவின் சகோதரர் ராமச்சந்திர ரெட்டி, கமலாம்மாள், கமலா ராமகிருஷ்ணன் உள்ளிட்டோர் முக்கியமானவர்கள். அதுபோல அண்ணாமலை பல்கலைக்கழகமும் மதுரை மாநகரின் அமெரிக்கன் கல்லூரியும் மாணவர் சம்மேளனத்தின் முக்கியத்தளங்களாய் விளங்கின. அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய சர்மா தான் முதல் கம்யூனிஸ்ட். அவர் தான் அங்கு மாணவர் சம்மேளனமும் கம்யூனிஸ்ட் கட்சியும் உருவாவதில் முக்கியப் பங்கு வகித்தவர்.
1938ஆம் ஆண்டில் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்களில் முக்கியமானவர்கள் கே.முத்தையா, டாக்டர் எஸ்.ராமகிருஷ்ணன், பாலதண்டாயுதம், திரவியம் (பின்னாளில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலாளர்), அ.ச.ஞானசம்பந்தம் ஆகியோர். அங்கு அமைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சிக் கிளையின் செயலாளராக கே.முத்தையா செயல்பட்டார். மாணவர் சம்மேளனம் அமைக்கப்பட்டதையடுத்து நாட்டு விடுதலைக்காகவும் மாணவர்களின் கல்விக்காகவும் நாடெங்கும் போராட்டங்கள் பெருமளவில் வெடித்தன. இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக 1937ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வங்காளத்தில் நடந்த மாணவர்கள் பேரணியில் கலந்து கொண்டவர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைத் தொடுத்தனர். இதில் ஏராளமான மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டது. காவல்துறையின் இந்த செயலைக் கண்டித்து சென்னையில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பெருந்திரளாக பங்கேற்ற மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக, வெளிநாட்டில் உருவாக்கப்பட்ட குறிப்பாக இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இருந்த இந்திய மாணவர் அமைப்பின் செயலாளராக செயல்பட்ட மோகன் குமார மங்கலம் இந்தியாவிற்கு வருகை தந்தார். அவர் இந்தியாவின் பல்வேறு முக்கிய நகரங்களில் சம்மேளனத்தின் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் உரையாற்றினார். இதையடுத்து 1938ஆம் ஆண்டு அகில இந்திய மாணவர் சம்மேளனத்தின் மூன்றாவது மாநாடு ஜனவரி 1, 2, 3 தேதிகளில் சென்னையில் நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சுபாஷ் சந்திர போஸ் தலைமை தாங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அவர் வெளிநாடு சென்றிருந்த காரணத்தால் கவிக்குயில் சரோஜினி நாயுடு மாநாட்டுக்கு தலைமை தாங்கும்படி அழைக்கப்பட்டார். ஆனால் அவரோ தலைமை தாங்க மறுத்துவிட்டார். இந்நிலையில் சம்மேளனத்தின் பழைய நிர்வாகக்குழு மாநிலக்குழுக்களை கலந்து ஆலோசிக்காமல் தலைமை ஏற்பதற்கு மினு மசானியை தேர்வு செய்தது.
மாநாடு துவக்கத்தில் அமைதியாக நடைபெற்றது. பின்னர் புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதில் மோதல் ஏற்பட்டது. மசானியும் அவரது சீடரான பொதுச் செயலாளர் பிரேம் நாராயணன் பார்கவாவும் கம்யூனிஸ்ட்டுகள் அதிக அளவில் நிர்வாகக்குழுவிற்கு வராமல் தடுக்கும் முயற்சியில் அடாவடியாக செயல்பட்டனர். அத்துடன் போலியான காரணத்தைச் சொல்லி மாநாட்டை கலைத்துவிட்டதாக மசானி அறிவித்தார். அத்துடன் மாநாட்டிலிருந்தும் அவர் வெளியேறினார். மாநாட்டில் கலந்து கொண்ட நூறு பிரதிநிதிகளில் 20 பேர் மட்டுமே அவருடன் சென்றனர். அதன்பின்னர் சர்வோத்தம ஷெட்டி என்பவர் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார். மசானியையும் அவருடன் வெளியேறியவர்களையும் கண்டித்து மாநாடு ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றியது.
மாணவர்களின் கோரிக்கைகள் மற்றும் உரிமைகள்; கல்வித் திட்டத்தை சீர்திருத்த வேண்டிய அவசியம்; எழுத்தறியாமையை அகற்றும் தேவை ஆகியவை குறித்து மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அத்துடன் மாநாட்டில் ரகசிய போலீசார் பங்கேற்றிருந்ததை கண்டித்தது; அவர்கள் உடனே வெளியேற வேண்டுமென்று மாநாடு உத்தரவிட்டது. சம்மேளனத்தின் பல்வேறு அமைப்புகள் சட்டவிரோதமாக்கப்பட்டதைக் கண்டித்தும் தனிப்பட்ட நபர்கள் மீது தடைவிதிக்கப்பட்டதைக் கண்டித்தும் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன.