tamilnadu

img

மோடி மீதான மென்மையான போக்கு : தேர்தல் ஆணையத்திற்கு உள்ளேயே எழுந்த எதிர்ப்பு

புதுதில்லி:

பிரதமர் நரேந்திர மோடி, பிரசாரம் செய்யும்போது, ‘புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த தியாகிகளுக்காக உங்கள் வாக்கினை போடுங்கள்' என்றார். அதோபோல ராஜஸ்தானில் பேசும்போது மோடி, ‘இந்திய அணு ஆயுதங்கள் தீபாவளிக்காக வைக்கப்பட்டிருக்கவில்லை' என்றார்.


அமித்ஷா மேற்கு வங்கத்தில் பேசும்போது, ‘புதிய இந்தியா, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது' என்று உரையாற்றினார். இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர் அமித்ஷா ஆகியோர் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி நடந்து கொண்டனர் என்று எதிர்கட்சிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுத்தன. 


ஆனால், இதுவரை மோடி மற்றும் அமித்ஷாவுக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் தேர்தல் ஆணையம் எடுக்கவில்லை. மாறாக, மோடி மற்றும் அமித்ஷா மீது கொடுக்கப்பட்ட 5 புகார்களில் எவ்வித விதிமீறல்களும் இல்லை என்று இந்திய தேர்தல் ஆணையம் கூறிவிட்டது. ஆனால், ஆணையத்தின் இந்த முடிவுக்கு, தேர்தல் ஆணையத்திற்கு உள்ளேயே எதிர்ப்பு இருந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.


மோடி, அமித்ஷா ஆகியோர் மீதான 5 தேர்தல் வழக்குகளிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு, 3 தேர்தல் ஆணையர்களில் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின், மூவர் குழுவில், தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா மற்றும் ஆணையர்கள் அசோக் லவாசா, சுஷில் சந்திரா ஆகியோர் உள்ளனர். 

தேர்தல் விதிமுறை புகார்கள் குறித்து இந்த மூவர் குழுதான் முடிவெடுக்கும். புகார்கள் குறித்து இந்த மூவர் குழு ஒரு மனதாக முடிவெடுக்க வேண்டும் என்பதுதான் விதிமுறை. அப்படி இல்லாத பட்சத்தில் பெரும்பான்மை முடிவே இறுதியானது.