tamilnadu

img

தனக்குத் தானே நில ஒதுக்கீடு செய்துகொண்ட மோடி..

புதுதில்லி:

பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் முதல்வராக இருந்தபோது, தனக்குத் தானே நில ஒதுக்கீடு செய்துகொண்ட விவகாரம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

வாரணாசி மக்களவைத் தொகுதியில் போட்டியிடுவதற்காக, மோடி தாக்கல் செய்த வேட்புமனு மூலம் இந்த உண்மை வெளிப்பட்டுள்ளது.


அதாவது, கடந்த 2001-ஆம் ஆண்டு,குஜராத் முதல்வராக இருந்தபோது, அம்மாநிலத்தின் தலைநகரான காந்தி நகரில், அரசுக்குச் சொந்தமான நிலத்தை, குறைந்த விலைக்கு மோடி தனக்காக ஒதுக்கிக் கொண்டுள்ளார். அந்த இடத்தின் இன்றைய சந்தை மதிப்பு ரூ. 1 கோடி ஆகும். ஆனால், இந்த விவரங்களை, இதுவரை வெளியே தெரிவிக்காமல் மோடி மறைத்து வந்தார். 2012 குஜராத் சட்டமன்றத் தேர்தல், 2014 மக்களவைத் தேர்தலின்போது, காந்தி நகர் சொத்து குறித்து,வேட்புமனுவில் மோடி வாய் திறக்கவில்லை.


பத்திரிகையாளரும், சந்தை ஆலோசகருமான சகேட் கோகலே என்பவர்,இதனைக் கண்டறிந்து, உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். மோடி, அவரது வேட்புமனுவில், சொத்து விவரங்களை மறைத்து விட்டதாக மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.இந்நிலையிலேயே, காந்தி நகரில் பிளாட் இருப்பது குறித்து, அண்மையில் வாரணாசி வேட்புமனுத் தாக்கலின் போது, பிரதமர் மோடி வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளார்.


இதில் அடங்கியிருக்கும் மற்றொரு முறைகேடு என்னவென்றால், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினருக்கான ஒதுக்கீடு அடிப்படையில் 2001- ஆம் ஆண்டு மோடி நிலத்தைப் பெற்றிருக்கிறார். ஆனால், 2000-ஆவது ஆண்டுக்குப் பிறகு, குஜராத்தில் யாருக்குமே அரசு நிலம் ஒதுக்கப்படவில்லை என்று குஜராத் அரசு ஆவணங்கள் சொல்கின்றன. அப்படியானால், அரசு நிலத்தை மோடி பெற்றது எவ்வாறு? என்ற கேள்வியும் தற்போது முன்னுக்கு வந்துள்ளது.