காரைக்கால்,ஆக.11 மலேஷியாவில் இருந்து காரைக்கால் துறைமுகத்திற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ள சுமார் 54 ஆயிரம் டன் ஆற்று மணலை கொண்டு செல்ல தமிழக அரசு அனுமதிக்காததால் கடந்த மே மாதம் முதல் துறைமுகத்திலேயே தேங்கிக் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் இறக்குமதி மணலை சேமித்தல், இடமாற்றம் செய்தல், விற்பனை ஆகியவற்றை பொதுப்பணித்துறை மட்டுமே மேற்கொள்ள முடியும். தனியாருக்கு அனுமதியில்லை. ஆனால் புதுச்சேரி அரசு இறக்குமதி மணலை கையாள தனியாருக்கு அனுமதி அளித்துள்ளது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த இறக்குமதியாளர் ஒருவர் புதுச்சேரியில் கட்டுமானப் பணிகளுக்காக விற்பனை செய்யும் நோக்கத்துடன் கடந்த மே மாதம் மலேஷியாவில் இருந்து புதுச்சேரி அரசின் கட்டுப்பாட்டில் உள்ள காரைக்கால் துறைமுகத்தில் 54 ஆயிரத்து 692 டன் ஆற்று மணலை இறக்குமதி செய்தார். அந்த மணலை புதுச்சேரிக்கு கொண்டு செல்ல சுமார் 100 கிலோமீட்டர் தூரமுள்ள தமிழக சாலைகளை கடந்து செல்ல வேண்டும். ஆனால் தமிழக அரசு அனுமதி அளிக்காததால் அந்த மணல் காரைக்கால் துறைமுகத்திலேயே தேங்கிக்கிடப்பதாக லாரி உரிமையாளர்கள் குற்றம்சாட்டியுள்ள நிலையில் அது குறித்து கருத்து தெரிவிக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மறுத்துவிட்டனர். ஏற்கனவே கடந்த 2017-ஆம் ஆண்டு மலேஷியாவில் இருந்து தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் அங்கு வீணாகக் கிடப்பதாக புகார் எழுந்தது. கடந்த ஆண்டு ஜனவரியில் இறக்குமதி செய்யப்பட்ட மணல் மங்களூருக்கு திருப்பி விடப்பட்டது. இந்நிலையில் 3-வது முறையாக இறக்குமதி செய்யப்பட்ட மணலும் துறைமுகத்துக்குள்ளேயே தேங்கிக் கிடப்பதாக புகார் எழுந்துள்ளது.