tamilnadu

பாடப் பகுதியைத் தாண்டிப் படிப்பதே பொது அறிவு! : கவிஞர் நா.முத்துநிலவன் பேச்சு

புதுக்கோட்டை, மே 4-கைக்குறிச்சி ஸ்ரீபாரதி கல்வியியல் கல்லூரியின் 14ஆவது ஆண்டுவிழாவில் சிறப்புரையாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன், ‘‘பாடப்பகுதிப் புத்தகங்களைத் தாண்டியும் படிப்பதே பொது அறிவு என்று பேசினார்.நிகழ்ச்சிகளுக்கு, கல்லூரித் தலைவர் குரு.தனசேகரன் தலைமையேற்றார். கல்லூரிச் செயலர் கே.ஆர்.குணசேகரன், அறங்காவலர்கள் ஏ.கிருஷ்ணமூர்த்தி, கே.ரெங்கசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். கல்வியியல் கல்லூரி முதல்வர் முனைவர் சுப.தாரகேஸ்வரி ஆண்டறிக்கை வாசித்தார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-ஆசிரியர்களுக்குப் பரிசளித்து விழா பேருரையாற்றிய கவிஞர் நா.முத்துநிலவன் மேலும் பேசியதாவது, பள்ளி ஆசிரியர்களின் அடிப்படைத் தகுதி அன்புதான். அதன்பிறகே ஓர் ஆசிரியரின் அறிவு பயன்படும். ஆசிரியர்கள் முதலில் மாணவர்களுக்குப் பிடித்த ஆசிரியராக வெற்றிபெற வேண்டும். அதன்பின்னர் அந்த மாணவர்களுக்கான அறிவுக்கு ஆசிரியர்கள் பணியாற்றுவது எளிது.மாணவர்கள், நண்பர்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த எச்சரிக்கை தேவை. தேவையற்ற நட்பு, பொழுதுபோக்காக அறிமுகமாகி கெடுதல் பண்ணி விடும். எந்தப் படிப்பானாலும், கூடுதல் தகுதியோடு இருப்பவருக்கு நிச்சயமாக வேலை கிடைத்துவிடும். சும்மா தேர்ச்சி மட்டும் பெற்றிருந்தால் அது கானல் நீராகவே போகும். தன்மீது வைக்கும் தன்னம்பிக்கையும், தொடர்படிப்பு முயற்சியுமே நல்ல வேலையின் வழியாக நல்ல வாழ்க்கையைக் கொண்டுவந்து தரும். ஆசிரியர்கள் கற்பிக்க கூடாது, உணர்த்த வேண்டும். வெறும் பாடங்களைச் சொல்ல ஆசிரியர்கள் தேவையில்லை. உரைநூல்களே போதும். வாழ்க்கைக்குத் தேவையான அறிவைத் தர ஒரு நல்ல ஆசிரியரால் மட்டுமே முடியும்.இவ்வாறு கவிஞர் நா.முத்துநிலவன் உரையாற்றினார்.