நூறு நாள் வேலைத் திட்டத்தை முறையாக செயல்படுத்தக் கோரிக்கை
அறந்தாங்கி, செப்.29- புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி ஒன்றிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க ஒன்றிய பேரவைக் கூட்டம் வெள்ளி அன்று சுப்ரமணியபுரம் கற்பகம் மண்டபத்தில் நடைபெற்றது. பேரவைக் கூட்டத்திற்கு எஸ்.ஜெயந்தி தலைமை வகித்தார் எஸ்.சரோஜா வரவேற்றார் ஜெ.மும்தாஜ், எ.வின்னரிசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். புதிய நிர்வாகிகளாக ஆர்.ராதா தலைவராகவும், எஸ்.ஜெயந்தி செயலாளராகவும், மலையத்தாள் துணைத்தலைவராகவும், எஸ்.சரோஜா துணைச் செயலாளராகவும், ஜெ.மும்தாஜ் பேகம் பொருளாளராகவும் தேர்வு பெற்றனர். ஏழு பேர் கொண்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப்பட்டது. புதிய நிர்வாகிகளை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார் மாதர் சங்க மாவட்ட செயலாளர் டி.சலோமி, மாவட்ட பொருளாளர் எஸ்.பாண்டிச்செல்வி பேரவைக் கூட்டத்தில் அதிகரித்து வரும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகளை தடுத்து நிறுத்த தனிசட்டம் இயற்ற வேண்டும். அறந்தாங்கி மற்றும் சுற்று வட்டார கிராம பகுதிகளில் குடிதண்ணீர் பற்றாக்குறையை போக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும் தகுதி படைத்த முதியோர்களுக்கு அரசின் உதவித்தொகை வழங்க வேண்டும் போன்ற கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. நிறைவாக ஆர்.ராதா நன்றி கூறினார்.
ரத்த தான முகாம்
திருத்துறைப்பூண்டி, செப்.29-இந்திய தேசத்தின் விடுதலைக்கு வித்திட்ட மாவீரன் பகத்சிங் 112-வது பிறந்த தினத்தை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி ஒன்றிய, நகரக்குழு சார்பில் ரத்த தான முகாம் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றியச் செயலாளர் ஏ.கே.வேலவன் தலைமை வகித்தார். நகரச் செயலாளர் வழக்கறிஞர் சி.சிவசாகர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியினை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சாமிநாதன், ஒன்றியச் செயலாளர் டி.வி.காரல்மார்க்ஸ் துவக்கி வைத்தனர். இதில் 22 பேர் ரத்த தானம் செய்தனர். நிகழ்ச்சியில் ஒன்றிய தலைவர் சி.வீரசேகரன், ஒன்றியக்குழு ஏ.ஐயப்பன், பி.கோபி, நகரக்குழு ஸ்டாலின், ராஜ், ராகவன், கிராம நிர்வாகி மருதாச்சலம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பகத்சிங் பிறந்த நாள் நிகழ்ச்சி
குடவாசல், செப்.29-திருவாரூர் மாவட்டம் குடவாசல் ஒன்றியத்தில் மாவீரன் பகத்சிங் பிறந்த நாளையொட்டி மரக்கன்றுகள் நடப்பட்டு பள்ளி மாணவர்களுக்கு எழுதுகோல், நோட் புக் மற்றும் சாதியற்ற சமூகம் அமைப்போம் என உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியும் குடவாசல் ஒன்றியத்தில் நடைபெற்றது. குடவாசல் தெற்குப் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வாலிபர் சங்கத்தின் ஒன்றிய தலைவர் பி.குமரேசன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் எஸ்.எம்.சலாவுதீன் புங்கை மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடவாசல் ஒன்றிய கட்சி அலுவலகத்தில் அமைக்கப்பட்ட இடத்தில் மரக்கன்றுகளை ஊன்றினார். மேலும் பூவம்பூர், மூலங்குடி ஆகிய கிராமங்களில் பள்ளி மாணவர்களுக்கு நோட்டு மற்றும் எழுதுகோல் வழங்கப்பட்டது. இதே போல் குடவாசல் வடக்குப் பகுதியில் எரவாஞ்சேரி ஒன்றியம் அதம்பவூரில் வாலிபர் சங்கத்தின் சார்பாக பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் நடத்திய சாதியற்ற சமூகம் அமைப்போம் என்று உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். நிகழ்ச்சிக்கு சரண்ராஜ் தலைமை தாங்கினார். ஒன்றிய செயலாளர் தீனதயாளன், வாலிபர் சங்க உறுப்பினர் மத்தியில் மாவீரன் பகத்சிங் வீர வரலாற்றை எடுத்துரைத்தார்.
பள்ளியில் மருத்துவ முகாம்
தஞ்சாவூர் செப்.29-தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பழுக்காடு கிராம ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மருத்துவ முகாம் நடந்தது. சேதுபாவாசத்திரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் ராமலிங்கம் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் நீலாவதி, ஆசிரியர் பிரபாகரன், பழுக்காடு முத்துத்துரை, முத்தையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் மூர்த்தி வரவேற்றார். அழகியநாயகிபுரம் ஆரம்ப சுகாதார மையம், பேராவூரணி டாக்டர். ஜே.ஸி. குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாட்டு நலப்பணித் திட்டம் இணைந்து நடத்திய மருத்துவ முகாமில் 150 க்கும் மேற்பட்ட பயனாளிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். அவர்களுக்கு சிகிச்சை மற்றும் மருந்து, மாத்திரை இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. பட்டுக்கோட்டை கல்வி மாவட்ட என்.எஸ்.எஸ் தொடர்பு அலுவலர் ராஜசேகரன் சிறப்புரையாற்றினார். இதில் டாக்டர் அமர்நாத், மருந்தாளுநர் அப்துல்ரஹீம், பழுக்காடு ரமேஷ், வினோத், குணா, செவிலியர்கள், பொதுமக்கள், மாணவர்கள், மற்றும் பலர் கலந்து கொண்டனர். ஆசிரியர் பிரகாஷ் நன்றி கூறினார்.