tamilnadu

img

மது கிடைக்காத விரக்தியில் சேவிங் லோசனை குளிர்பானத்தில் கலந்து அருந்திய மீனவர்கள்.... 2 பேர் பலி

புதுக்கோட்டை:

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மது கிடைக்காத விரக்தியில் மாற்று போதையாக சேவிங் லோசனை குளிர்பானத்தில் கலந்து அருந்தி 2 மீனவர்கள் உயிரிழந்தார். ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்ப்பட்டினத்தைச் சேர்ந்தவர் அன்வர்ராஜா.( 33) இவர் இருசக்கர வாகனம் வாங்கி, விற்கும் தொழில் செய்து வந்தார். ராமநாதபுரம் மாவட்டம் பேய்க்கரும்பு பகுதியைச் சேர்ந்தவர் அருண்பாண்டி( 29) இவர் கோட்டைப்பட்டினத்தில் தங்கி மீன்பிடிக்கும் தொழில் செய்த வந்தார். கோட்டைப்பட்டினம் மீனவர் காலணியைச் சேர்ந்தவர் அசன்மைதீன்(33) இவரும் கடலுக்கு சென்று மீன்பிடிக்கும் தொழில் செய்து வந்தார்.

அன்வர்ராஜா, அருண்பாண்டி, அசன்மைதீன் இவர்கள் 3 பேரும் நண்பர்கள். இவர்கள் அடிக்கடி இரவு நேரத்தில் ஒன்றாக சந்தித்து மது அருந்துவது வழக்கம். தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், டாஸ்மாக் மதுபானக் கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் மதுபானம் கிடைக்காமல் அவதிப்பட்ட நண்பர்கள் சேவிங் செய்தபின்பு இன்பெக்சன் வருவதை தடுப்பதற்காக போடப்படும் கிளாசிக் என்ற லோஷனை வாங்கிச் சென்று கோட்டைப்பட்டினம் தர்ஹா அருகே அமர்ந்து குளிர்பானத்துடன் கலந்து அருந்தியுள்ளனர்.

லோஷனை அருந்திய 3 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் 3 பேரையும் ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக மணமேல்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், இதனையடுத்து மேல்சிகிச்சைக்காக அறந்தாங்கி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக மூன்று பேரும் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அருண்பாண்டி, அசன்மைதீன் ஆகியோர் உயிரிழந்தனர், மேலும் அன்வர்ராஜா உயிருக்கு ஆபத்தான நிலையில் அறந்தாங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார், வினை எடுத்து உயிரிழந்த இருவரின் உடல்களும் மணமேல்குடி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து கோட்டைப்பட்டினம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.மதுபானம் கிடைக்காததால் மாற்று போதையாக ஷேவிங் செய்த பிறகு பயன்படுத்தப்படும் லோசன் அருந்தி 2 பேர் பலியான சம்பவம் கோட்டைப்பட்டினம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
 

;