tamilnadu

img

மூடப்பட்ட வாணப்பட்டறையில் வெடிவிபத்து 17 வீடுகள் சேதம்; இழப்பீடு வழங்க சிபிஎம் கோரிக்கை...

புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே மூடப்பட்ட வாணப்பட்டறையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 17 வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 
கோரிக்கை விடுத்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் அருகே கீழாநிலைக்கோட்டை ஸ்ரீராம் நகரில் கடந்த 2017-ஆம் ஆண்டு குணசேகரனுக்குச் சொந்தமான வாணப்பட்டறையில் ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து பொதுமக்கள் நடத்திய போராட்டத்தின் காரணமாக வாணப்பட்டறை மூடப்பட்டது. இந்நிலையில், திங்கள்கிழமை இரவு மூடப்பட்ட தொழிற்சாலை அருகே பதுக்கி வைத்திருந்த வெடிபொருட்கள் வெடித்ததில் அப்பகுதியில் உள்ள 17 வீடுகள் சேதமடைந்தன.ஏற்கனவே இயங்கிவந்த வாணப்பட்டறையை மீண்டும் திறக்க முயற்சித்ததாகவும், இதற்கு அப்பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே ஆத்திரமடைந்த வாணப்பட்டறை உரிமையாளர் பதுக்கி வைத்திருந்த வெடிபொருட்களை வெடிக்கவைத்து அப்பகுதியினரை பழிவாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால், பொதுமக்கள் குணசேகரனின் கார் மற்றும் பொருட்களை அடித்து நொறுக்கியதோடு போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த பொன்னமராவதி காவல் துணைக் கண்காணிப்பாளர் செந்தாமரைக்கண்ணன் தலைமை யிலான போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வெடி விபத்துக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

பதுக்கி வைத்திருந்த வெடிபொருட்களின் அழுத்தம் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர். மேலும், போலீசார் நடத்திய ஆய்வில் வெடிபொருட்கள் தயாரிக்க மூலப்பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. அந்த அறையை போலீசார் சீல் வைத்தனர்.

இழப்பீடு வழங்க சிபிஎம்  கோரிக்கை
வெடிவிபத்து நடந்த இடத்தையும், அதனால் பாதிக்கப்பட்ட வீடுகளையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.சங்கர், ஒன்றியச் செயலாளர் ஜி.நாகராஜன் மற்றும் நிர்வாகிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது, இந்தப் பகுதியில் மீண்டும் வெடிபொருள் தயாரிக்க அனுமதி அளிக்கக்கூடாது என்றும், வெடிவிபத்தில் சேதமடைந்த வீடுகளுக்கு உரிய இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் மாவட்ட செயற்குழுஉறுப்பினர் எஸ்.சங்கர் தெரிவித்தார்.