tamilnadu

img

சி.கோவிந்தசாமிக்கு சிபிஎம் பாராட்டு

புதுக்கோட்டை, ஆக.31- அரசுப் பணியில் இருந்து ஓய்வு பெற்று சமூகப் பணிக்குத் திரும்பியுள்ள அரசு ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாவட்டச் செயலாளர் சி.கோவிந்தசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனிக்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு நில அளவைத் துறையில் துணை இயக்குனராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர் சி.கோவிந்தசாமி. இவர் புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற அறிவொளி இயக்கத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றி ஏராளமான மக்களுக்கு எழுத்தறிவைப் போதிப்பதிலும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செலுத்தியவர்.  தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயலாளராக பத்தாண்டுகளுக்கும் மேல் பணியாற்றி மக்களிடத்தில் அறிவியல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும், மூட நம்பிக்கைக்கு எதிராகவும் தொடர்ந்து களமாடியவர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தில் மாவட்டச் செயலாளராக பல ஆண்டுகள் பணிபுரிந்து தொழிற்சங்க நடவடிக்கையிலும் காத்திரமான பங்களிப்பைச் செலுத்திய சி.கோவிந்தசாமி கடந்த மாதம் பணி நிறைவு பெற்றார். பணி நிறைவு பெற்றதோடு, சமூகப் பணிகளில் தொடர்ந்து பங்கேற்க உறுதியேற்றுள்ள சி.கோவிந்தசாமிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சனிக்கிழமையன்று பாராட்டு விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.கவிவர்மன் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் எம்என்எஸ்.வெங்கட்ராமன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.வி.நாகராஜன், எம்.சின்னத்துரை ஆகியோர் பாராட்டிப் பேசினர். ஏராளமான தோழர்கள் பங்கேற்றனர்.

;