tamilnadu

img

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து அகாலி தளம் வெளியேறியது

பாஜக-வின் நீண்ட காலக் கூட்டணிக்கட்சியான சிரோமணி அகாலி தளம், அதனுடனான தன் உறவினை முறித்துக்கொண்டுவிட்டது.

சண்டிகாரில் சனிக்கிழமையன்று நடைபெற்ற சிரோமணி அகாலி தளத்தின் மூலக் குழு (Core Committee) கூட்டத்தில் ஒருமனதாக இம்முடிவு மேற்கொள்ளப்பட்டதாக அதன் தலைவர் சுக்பீர் சிங்  பாதல் அறிவித்தார்.

“மத்திய அரசாங்கம், முழுமையாக விவசாயிகளின் உணர்வுகளை உதாசீனம் செய்துவிட்டது. வேளாண்மை சம்பந்தமான சட்டமுன்வடிவுகளை அடாவடித்தனமாக கொண்டுவந்திருக்கிறது. மாநிலங்களவையில் நடந்தது என்ன என்பது அனைவரும் அறிந்ததே. .. நாங்கள் இந்த அரசாங்கத்தின் ஓர் அங்கமாக இருந்தபோதிலும்,  ஹர்சிம்ராத் கவுர் பாதல், இந்தச் சட்டமுன்வடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அமைச்சர் பதவியிலிருந்து வெளியேறிவிட்டார். இந்தப் பிரச்சனை தொடர்பாக நாங்கள் மக்களுடனும் கட்சித் தலைவர்களுடனும் விவாதித்தோம். இன்றைய தினம் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறுவதாகத் தீர்மானித்திருக்கிறோம்,” என்று அவர் கூறினார்.

தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து, சிவ சேனையும், தெலுங்கு தேசக் கட்சியும் வெளியேறியபின் மூன்றாவதாக இப்போது சிரோமணி அகாலி தளமும் அதலிருந்து வெளியேறியிருக்கிறது.

சிரோமணி அகாலி தளம் ஆரம்பத்தில் வேளாண் சட்டமுன்வடிவுகளுக்கு ஆதரவாகத்தான் இருந்தது. ஆனாலும் விவசாயிகளின் மத்தியில் இவற்றுக்கெதிராக கோபாவேசம் அதிகரித்துள்ளதை உணர்ந்துகொண்டு இப்போது தலைகீழாக மாறியிருக்கிறது.

விவசாய விளைபொருள்களுக்கு, குறைந்தபட்ச ஆதார விலை அளிப்பதற்கு, சட்டரீதியான உத்தரவாதம் அளித்திட, மத்திய அரசு மறுத்துவிட்டது என்பதால் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து விலகுவதாக கட்சியின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.

இககட்சியின் ஒரே பிரதிநிதியாக மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த ஹர்சிம்ராத் கவுர் பாதல், இச்சட்டமுன்வடிவுகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து தன் பதவியை ராஜினாமா செய்தார். அவர் இது தொடர்பாக பிரதமருக்கு எழுதியிருந்த தன் ராஜினாமா கடிதத்தில், “விவசாயிகளின் நலன்களுக்கு விரோதமான இச்சட்டமுன்வடிவுகள் நிறைவேற்றப்படும் அரசில் ஓர் அங்கமாக நாங்கள் இருக்க விரும்பவில்லை,” என்று தெரிவித்திருந்தார்.

(ந.நி.)