tamilnadu

img

பீகார்: மூளைக்காய்ச்சல் நோய் பாதிப்பால் 100 குழந்தைகள் பலி


பீகாரில் மூளைக்காய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட 100 குழந்தைகள் பலியாகி உள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் நூற்றுக்கணக்கான குழந்தைகள் நோய் பாதிப்பால் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. 

பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு மூளைக்காய்ச்சல் கடுமையாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட  குழந்தைகள் முசாபர்பூரில் உள்ள  ஸ்ரீகிருஷ்ணா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழந்த குழந்தைகளின் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது.  உயிரிழந்த குழந்தைகளில் பெரும்பாலானோருக்கு ரத்தத்தில் குளுக்கோஸ் அளவு குறைவாக இருந்ததாக, முசாபர்பூர் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித் துள்ளனர். 

இதன் காரணமாக முசாபர்பூரில் 8 வகுப்பு வரையிலான பள்ளிகள் 22-ம் தேதி வரை மூடப்படும் என்றும், மேல்நிலைப் பள்ளிகளில் காலை 10.30 மணி வரை மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மூளைக்காய்ச்சல் கயா மாவட்டத்திலும் பரவி வருகிறது. 
இக்காய்ச்சல் பாதிப்பு அறிகுறியுடன் இருக்கும் 130 குழந்தைகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.