tamilnadu

img

வாய்க்கு வந்தபடி பேசும் நீதிபதிகள் - செ.கவாஸ்கர்

நீதித்துறையில் வெட்கப்படக் கூடிய, தயக்கத்துடன் கூறக் கூடிய சில சம்பவங்கள் நிகழ்கின்றன. ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தியின் மகள் 2 மாதங்களுக்கு முன்பு தனது தாயையும், பிறந்த ஊரை சுற்றிப் பார்க்கவும் அனுமதி வழங்கக் கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, அம்மாவை மட்டும் பார்த்து விட்டு வா, அங்கு குளிர் அதிகமாக உள்ளது. அது உடலுக்கு ஒத்துக் கொள்ளாது என்று கூறினார். நீதிபதியின் தாயுள்ளத்தை பார்த்து மெய்சிலிர்த்தது(!). குளிரை காரணம்காட்டி ஒரு பெண் தான் வாழ்ந்த நகரத்தை சுற்றிப் பார்க்க அனுமதி மறுத்த நீதிபதி, மழையையும் குளிரையும் பொருட்படுத்தாமல் நடந்து வந்த இந்தப் பெண்களை (மாதர் சங்கத்தினரை) கவனிக்க வேண்டாமா?

பெண்கள் மீதான வன்முறையை தடுக்க, தவிர்க்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிடுகிறோம். அந்த நீதிமன்றத்திற்கு பெண்கள் பற்றிய புரிதல் உள்ளதா? ராமநாதபுரத்தில் பெண்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஒருவர் திறந்து வைத்தார். அங்கு பேசிய அவர், பெண்கள் கண்ட நேரத்தில் கண்ட இடத்திற்கு செல்லக்கூடாது. வீட்டிலேயே இருக்க வேண்டும். அப்போதுதான் ஆபத்து வராது என்றார். பெண்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஒரு உயர்நீதிமன்ற நீதிபதி சொன்னால், அவருக்கு சட்டம் புரியவில்லை அல்லது உண்மை திரித்துச் சொல்கின்றார் என்றுதான் அர்த்தம். சாலை விபத்துக்கள் அதிகரித்து விட்டன. ஆகவே, ஒவ்வொரும் வீட்டிலேயே காரை நிறுத்தி விட்டு நடந்து சென்றால் எந்த விபத்தும் நிகழாது. அப்படி செய்யலாமா? என்று கேட்டேன். இந்த சம்பவம் குறித்து மூத்த வழக்கறிஞர் இந்திரா ஜெயசிங், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் அனுப்பினார். என்றைக்கு ஒரு பெண் நள்ளிரவு நேரத்தில் யாருடைய பாதுகாப்பும் இன்றி நடக்கிறாரோ அன்றைக்குத்தான் நாட்டிற்கு சுதந்திரம் கிடைத்தது என்று நம்புவேன் என மகாத்மா காந்தி கூறியதை சுட்டிக்காட்டி, பெண்களை வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று ஆலோசனை சொல்லக்கூடிய அதிகாரத்தை அந்த நீதிபதிக்கு கொடுத்தது யார்? என்று கேள்வி எழுப்பினார்.

அதனடிப்படையில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, சம்பந்தப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதியை தொடர்பு கொண்டு விசாரித்தார். அதற்கு அந்த நீதிபதி, தாம் அப்படியெல்லாம் பேசவே இல்லை என்று மறுத்து விட்டார். நீதிபதிகள் வாய்க்கு வந்தபடி பேசுகிறார்கள். அண்மையில் சினிமா இயக்குநர் ஒருவர் கூட அப்படி பேசி இருக்கிறார். எதிர்ப்பு வந்ததும், எனது பேச்சை திரித்துவிட்டார்கள் என்று சொல்கிறார். ஒரு கிழவருக்கு 21 வயதுக்கு மேல் உள்ள பெண்ணை திருமணம் செய்து வைக்கிறார்கள். அந்த பெண் காணாமல் போனதையடுத்து அந்த ‘கிழ மாமா’ உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார். அந்தப் பெண்ணை நீதிமன்றத்திற்கு கொண்டு வருகிறார்கள். அந்தப் பெண்ணிடம் எங்கே போனாய்? என்று நீதிபதிகள் கேட்டார்கள். அதற்கு அந்த பெண் நான் சுயமாக வேலை செய்து, பெண்கள் விடுதியில் தங்கி வாழப் போகிறேன். என்னை வாழவிடுங்கள் என்கிறார். அதனை ஏற்க மறுத்த நீதிபதிகள், புருசனோடு போக வேண்டும் என்றார்கள். அதை ஏற்க மறுத்த அந்த பெண், எனக்கு இங்கேயே விவாகரத்து கொடுங்கள், அந்த கிழவரோடு வாழ விரும்பவில்லை என்கிறார். அதற்கு நீதிபதிகள் என்ன கூறியிருக்க வேண்டும்? அதற்கான மனுவை தாக்கல் செய் என்றுதானே கூறியிருக்க வேண்டும். மாறாக, அதிக பிரசங்கித்தனமாக பேசுகிறாய். நீதிமன்றம் என்ன சந்தைக் கடையா? என்று கேட்டார்கள்.

மறுநாள் பத்திரிகையில் சில பெண் ஆர்வலர்கள் நாளிதழில் எழுதிய கட்டுரையில், அந்த பெண் நீதிமன்றத்தில்தான் விவகாரத்து கேட்டார். நீதிபதிகள்தான் காய்கறி கடையாக மாற்றிவிட்டார்கள் என்று குறிப்பிட்டிருந்தார்கள். உடனே அந்த பெண் ஆர்வலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. உண்மையை புரிந்து கொள்ளாமல் இப்படியெல்லாம் கற்பனைக் காட்டில் நீதிபதிகள் உள்ளனர். இந்தச் சூழ்நிலையில், பெண்களுக்கு எதிரான வன்முறை நடக்கும்போது விரைவான, உண்மையான, சட்டப்படியான நீதி கிடைக்கும் என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது?

நீதித்துறையைச் சேர்ந்தவர்களுக்கு பெண்கள் பிரச்சனைகளை புரிந்து கொள்வதில் சிக்கல் உள்ளது. நிர்பயா வழக்கில் உள்ள குற்றவாளிகளுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது. அதை எதிர்த்த சீராய்வு மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், அந்த கொலைகாரர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை. காரணம் கேட்டால், திகார் சிறையில் தூக்குபோட ஆள் இல்லை என்று அற்பத்தனமான காரணத்தை கூறுகிறார்கள். ஒரு தூக்கு போடுவதால் இதுபோன்ற பிரச்சனைகள் தீராது. ஏனென்றால் இது சமுதாயத்தின் அடிப்படையான பிரச்சனை. பெண்கள், பாலினம் பற்றிய சரியான புரிதல் இல்லாததால் நடக்கிறது. சரியான புரிதலை உருவாக்க 5லிருந்து தொடங்க வேண்டும். அப்போதுதான் 50ல் வளையும். நேரடியாக 50ல் வளைக்க முடியாது. மரத்துப்போன ஆண்கள் நிறையபேர் சமூகத்தில் இருக்கிறார்கள். எனவே இதுபோன்ற பிரச்சாரப் பயணத்தை அதிகமாக நடத்த வேண்டும்.

(‘வன்முறையற்ற, போதையற்ற தமிழக’த்தை உருவாக்குவதற்கான கோரிக்கைகளோடு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், நவ.25 அன்று வடலுர், திருவண்ணாமலையிலிருந்து இரண்டு நடைபயணக்குழுக்கள் 360 கி.மீ. கடந்து டிச.3 அன்று சென்னை தாம்பரத்தை வந்தடைந்தன. அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் நீதியரசர் கே.சந்துரு பேசியதிலிருந்து.)