சென்னை:
பாஜகவின் வேல் யாத்திரையை அனுமதித்தால் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச் சனை ஏற்படும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.வெற்றிவேல் யாத்திரைக்கு தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்துள்ள நிலையில், மாநில பாஜக பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
அதில் “நவம்பர் 16ஆம் தேதிக்கு பின் மத நிகழ்ச்சிகளில் 100 பேர் வரை கலந்து கொள்ளலாம் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. அதனால், மாநில அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்து, நவம்பர் 8ஆம் தேதி முதல் தொடங்க உள்ள வெற்றி வேல் யாத்திரையில் தலையிடக் கூடாது என அரசுக்கும், டிஜிபி-க்கும் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.இந்த வழக்கை நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வு, அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது பாஜக தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், “கோயில்கள் தரிசனத்துக்கு திறக்கப்பட்ட பின் பக்தர்களுக்கு தடை விதிப்பது தவறு. கோவிலுக்குள் நுழைவதை முறைப்படுத்த மட்டுமே அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றனர்.
மீண்டும் அனுமதி மறுப்பு
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், கொரோனா இரண்டாவது அலை பரவ வாய்ப்புள்ள நிலையில், கூட்டத்தை அனுமதிப்பது வைரஸ் பரவ மேலும் காரணமாக அமையும்.முதல் நாள் யாத்திரையில் கலந்து கொண்டவர்களில் பெரும்பாலானவர்கள் முகக்கவசம் அணியவில்லை. அரசு தரப்பில், நவம்பர் 15க்கு பின் 100 பேருடன் மத நிகழ்ச்சிகளுக்கு அரசு அனுமதியளித்துள்ளது.பாஜக அனுமதி கோரிய விண்ணப்பத்தில் எத்தனை பேர் கலந்து கொள்ள உள்ளனர் என்ற விவரங்கள் எதுவும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை.யாத்திரைக்கு அனுமதி அளித்தால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் அபாயமும் உள்ளது” என்றார்.
சரமாரி கேள்வி...
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதிகள், அரசியல் ரீதியான கூட்டங்கள் நடத்தப் போவதில்லை என்றால், எத்தனை வாகனங்களில்? எவ்வளவு பேர் செல்கிறீர்கள்? முருகன் கோயிலுக்கு செல்வது தான் நோக்கம் என்றால் கோயில் அமைந்துள்ள இடங்களுக்கு மட்டும் செல்ல வேண்டியது தானே?முருகன் கோயில் இல்லாத பகுதிகளுக்கு ஏன் யாத்திரை செல்கிறீர்கள்? என்று கேள்வி மேல் கேள்வி கணைகளைத் தொடுத்தனர்.பருவமழை நேரத்தில் வருவாய்த்துறை மற்றும் காவல் துறை அலுவலர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி வருகின்றனர்.மேலும், மனுவில் எந்த விபரங்களும் இல்லாமல் வழக்குதொடரப்பட்டுள்ளது. இதில், பொது அமைதி சம்பந்தப் பட்டுள்ளதால் எந்த வழியில் செல்ல வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானிக்க முடியாது.நம் நாட்டில் அரசியல் காரணங்களுக்கு தீர்வு காணவே நீதிமன்றங்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.டிசம்பர் 6ஆம் தேதி யாத்திரையை நிறைவு செய்வதாக கூறியுள்ளீர்கள். அன்றைய தேதியையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.வேல் யாத்திரை எப்படி நடைபெற உள்ளது என்ற முழு விவரங்களுடன் டிஜிபியிடம் மீண்டும் அனுமதி கேட்டு பாஜக விண் ணப்பிக்கலாம் என்று கூறிய நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணை நவம்பர் 10ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.