tamilnadu

img

43 தொகுதிகளில் மட்டுமே வென்ற நிதிஷ் மீண்டும் முதல்வர் ஆகிறார்.... பீகாரில் தனிப்பெருங்கட்சியாக ஆர்ஜேடி தேர்வு.....

பாட்னா:
பீகார் சட்டமன்றத்  தேர்தலில் 43 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று கடும் பின்னடைவை சந்தித்துள்ள ஜக்கிய ஜனதா தளம் (ஜேடியு) கட்சியின் தலைவரும் முதல்வர் வேட்பாளருமான நிதிஷ்குமார் தேசிய ஜனநாய கூட்டணியின் ஆதரவுடன் மீண்டும் முதல்வர் ஆகிறார். தேஜஸ்வி தலைமையில் போட்டியிட்ட ராஷ்டிரிய ஜனதாதளம் (ஆர்ஜேடி) கட்சி 75 தொகுதிகளை வென்று தனிப்பெருங்கட்சியாக மக்களால் தேர்வு செய்யப்பட்டுள்ளது. 

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டமன்றத்திற்கான தேர்தல் கடந்தஅக்டோபர் 28, நவம்பர் 3 மற்றும் 7 ஆகிய நாட்களில் 3 கட்டங்களாக நடந்துமுடிந்தது.  57 சதவீதம் வாக்குகள் பதிவாகின.இத்தேர்தலில் ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ், இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சி அடங்கிய மகாகத்பந்தன் அணியும்  ஜக்கிய ஜனதா தளம், பாஜக அடங்கிய தேசிய ஜனநாயககூட்டணியும் பிரதான அணிகளாக போட்டியிட்டன. மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வானின் லோக் ஜனசக்தி கட்சியும் போட்டியிட்டது.  

வாக்கு எண்ணிக்கை நவம்பர் 10 அன்று காலை தொடங்கி விடியவிடிய நடைபெற்றது.இந்நிலையில் நவம்பர் 11 அன்று வெளிவந்துள்ள தகவலின்படி மகாகத் பந்தன் கூட்டணியில் ஆர்ஜேடி 23.11 சதவீத வாக்குகளுடன்  75 தொகுதிகளில் வெற்றிபெற்று, தனிப்பெருங்கட்சியாக உள்ளது. காங்கிரஸ் 19 தொகுதிகளிலும்  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 2 இடங்களிலும்  இந்தியக் கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சி 12 இடங்களிலும் வெற்றிபெற்றுள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 74 தொகுதிகளிலும் ஜக்கிய ஜனதா தளம் 43 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.

லோக் ஜனசக்தி கட்சி ஒரு இடத்தில் மட்டுமே வென்றுள்ளது.ஓவைசியின் அகில இந்திய மஜ்லிஸ் முஸ்லிம் கட்சி 5 இடங்களிலும் இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (செக்யூலர்) கட்சி 4 இடங்களிலும் விகாஸ்ஷில் இன்சான் கட்சி 4 இடங்களிலும் பகுஜன் சமாஜ் கட்சி ஒரு இடத்திலும் வென்றுள்ளனர். ஒரு தொகுதியில் சுயேட்சை வெற்றிபெற்றுள்ளார். 10 தொகுதிகளில் ஆயிரத்திற்கு கீழ்வெற்றி - தோல்வி வாக்குகள் வித்தியாசம் உள்ளது. ஹில்சா தொகுதியில் ஜேடியு வேட்பாளர், ஆர்ஜேடி வேட்பாளரைவிட 12 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். ராம்கார் தொகுதியில் ஆர்ஜேடி வேட்பாளர், பகுஜன்சமாஜ் வேட்பாளரைவிட 189 வாக்கு வித்தியாசத்தில் வென்றுள்ளார். பிரபத்தா தொகுதியில் ஜேடியு வேட்பாளர், ஆர்ஜேடி வேட்பாளரைவிட 951 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். மயிதானி தொகுதியில் எல்ஜேபி வேட்பாளர், ஜேடியு வேட்பாளரைவிட 333 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார்.பீகார் தேர்தல் தோல்விக்கு ராகுல்காந்தி பொறுப்பு அல்ல; நாங்கள் எங்கள்கூட்டாளிகளுக்கு ஆதரவாக நிற்போம் என்று ராஷ்டிரிய ஜனதா தள  தலைவர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.

                                     *********************

இடதுசாரிகள் அமோக வெற்றி
பீகார் சட்டமன்றத் தேர்தலில் இடதுசாரிக்கட்சிகள் 16 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன. மகாகத் பந்தன் கூட்டணியில் இடதுசாரி கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட், இந்தியக் கம்யூனிஸ்ட் (எம்எல்) கட்சி அங்கம் வகித்தன. இதில் சிபிஐ(எம்-எல்) 12 இடங்களிலும், சிபிஎம் 2 இடங்களிலும், சிபிஐ 2 இடங்களிலும் வென்றுள்ளன.  மஞ்சி  தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் சத்யேந்திர யாதவ், விபூதிப்பூர் தொகுதியில் சிபிஎம் வேட்பாளர் அஜய் குமார் ஆகியோர் மகத்தான வெற்றி பெற்றனர்.