பாட்னா:
பீகாரில் ரூ.30,000 கோடி அளவுக்கு நிதிஷ்குமார் அரசு ஊழல் செய்துள்ளதாக முதலமைச்சர் வேட்பாளரும் ராஷ்ட்டிரிய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி குற்றம்சாட்டியுள்ளார். பாட்னாவில் செய்தியாளர்களிடம் தேஜஸ்வி கூறுகையில், கல்வி, வேலைவாய்ப்பு, பாசனம் மற்றும் மருத்துவம் இவைகள் தான் பீகாரின் முக்கிய பிரச்சனைகள். இதனை ஒரு போதும் நிதிஷ் குமார் பேசமாட்டார். நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் சிறப்பாக மாற்ற நாங்கள் யோசித்துக் கொண்டிருக்கிறோம். ஆனால்கடந்த காலமே நிலைத்திருக்க நிதிஷ் குமார் விரும்புகிறார். பீகாரின் வளர்ச்சி குறித்து, ஜே.பி. நட்டாவுடன் நாங்கள் பொது வெளியில் விவாதம் நடத்த தயாராக இருக்கிறோம். பீகாரில் 30,000 கோடி அளவுக்கு மொத்தம் 60 மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது என்று தெரிவித்தார்.
முன்னதாக டிவிட்டரில் பிரதமர் மோடி பேசிய முந்தைய தேர்தல் பிரச்சாரத்தின் வீடியோ ஒன்றை தேஜஸ்வி பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவில் பாஜகவுடன் கூட்டணி சேருவதற்கு முன்பு நிதிஷ் குமார் மீது பிரதமர் மோடி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை சுட்டிக்காட்டியுள்ளார்.