tamilnadu

img

பிரதமர் அவர்களே, மனம் திறந்து பேசுங்கள்-மோடிக்கு 17 வயது இளைஞன் எழுதிய கடிதம்

அன்புள்ள பிரதமர் அவர்களுக்கு,

சமீபத்தில் இந்திய குடிமக்களுக்கு நீங்கள் எழுதிய கடிதத்தை, உங்கள் இணையதளத்தில் நான் வாசித்தேன். உங்கள் தேர்தல் வெற்றி வரலாற்று சிறப்பு வாய்ந்தது என்று நீங்கள் சரியாகச் சுட்டிக்காட்டியுள்ளீர்கள்.. இந்திய மக்கள் உங்களை நம்புகிறார்கள். தேநீர் விற்கும் ஒருவர் இந்த நாட்டின் பிரதமராக முடிகின்ற வகையில் ஜனநாயக அமைப்புகளைக் கொண்டிருக்கும் இந்த நாட்டில், பல குடிமக்களுடன் சேர்ந்து நானும் வாழ்வதில் மிகுந்த பெருமிதம் கொள்கிறேன்,

இந்த கடிதம் முழுவதும் எனது தொனி மரியாதைக்குரியதாக இருந்தாலும், அது விமர்சன ரீதியானதாகவே இருக்கும். இதையே சிலர் ஜனநாயகத்தின் அழகு என்று அழைப்பார்கள். உச்சநீதிமன்றம் மாற்றுக் கருத்துக்களை, ஜனநாயகத்தின் பாதுகாப்பு வால்வு என்று குறிப்பிட்டிருக்கிறது. மாற்றுக் கருத்து என்பது உண்மையில் அற்புதமான விஷயம். தங்களுக்கு கிடைக்க வேண்டிய உரிமைகளைப் பெறுவதற்காக, ஆட்சியதிகாரத்திற்கு கடமைப்பட்டவர்களாக குடிமக்கள் இருக்க வேண்டும் என்று நான் கருதவில்லை.

உங்களுடைய முதல் ஆட்சிக்காலத்திற்கு முன்பிருந்தே, உங்களைச் சுற்றி ஆளுமை வழிபாட்டு முறை உருவாக்கப்பட்டது. போகப்போக அது நன்கு பலப்படுத்தப்பட்டது. விஷ்ணுவின் அவதாரம், தேசத்திற்கு கடவுள் தந்த பரிசு, உலகின் மிக அழகான முகம், சிறந்த பொருளாதார நிபுணர் என்று உங்களைப் பற்றி எங்களிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டது. அறிமுகம் செய்தவர்கள் உங்கள் கட்சியின் முன்னணி உறுப்பினர்கள். அவர்களில் பலரும் அமைச்சர்கள். அவ்வாறு கூறப்பட்டதால் நீங்கள் மகிழ்ச்சியடைந்தாலேயே, அத்தகைய சொல்லாட்சி தொடர்ந்தது என்று கருத முடிகிறது.

2016ஆம் ஆண்டில், கங்கையை சுத்தம் செய்யும் திட்டத்தை நீங்கள் அறிவித்தீர்கள். அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவித்தவாறு பார்த்தால், 2018 ஜுலைக்குள் கங்கை சுத்தமாகி இருக்க வேண்டும். உங்களுடைய அந்த அறிக்கை வெறுமனே சுற்றுச்சூழல் பிரச்சினை குறித்ததாக இல்லாமல், ஒரு குறியீட்டு அறிக்கையாகவே இருந்தது. ஹிந்துக்களைப் பொறுத்தவரை, கங்கை நதி புனித நதியாக இருப்பதால், ஹிந்துத்துவாவைப் பின்பற்றுகின்ற உங்களுடைய முன்னுரிமையாக அந்த திட்டம் இருக்கும் என்றே இயல்பாகக் கருத முடிந்தது. ஆனால், 2018 வந்து சென்று பல ஆண்டுகளாகி விட்டது. கங்கை இன்னும் சுத்தமாகவில்லை. ஹிந்து சன்யாசியும், முன்னாள் சுற்றுச்சூழல் பொறியியல் பேராசிரியருமான ஜி.டி.அகர்வால், முறையான நடவடிக்கைகள் எடுக்கப்படாதது குறித்து, உங்களுடைய அரசாங்கத்திற்கு கடிதம் எழுதியிருந்தார். 86 வயதான அந்த பேராசிரியர் சாகும் வரை உண்ணாவிரதம் இருந்த போது, தனது கோரிக்கைகளை அந்த கடிதத்தில் தெளிவுபடுத்தியிருந்தார். அரசாங்கம் சரியான முறையில் அவருக்குப் பதிலளிக்கத் தவறியது. தனது உண்ணாவிரதத்தின் 111ஆவது நாளன்று அந்தப் பேராசிரியர் மரணமடைந்தார். மனசாட்சி உள்ள குடிமக்கள் பலருடன் சேர்ந்து, நானும் அதை ஒரு கொலை என்றே நம்புகிறேன்.  

’பருவநிலை மாறவில்லை, மனிதர்கள்தான் மாறியிருக்கிறார்கள்’ என்று நீங்கள் நம்புகிறீர்கள் என்ற உண்மையைக் கருத்தில் கொண்டு பார்க்கும் போது, சுற்றுச்சூழல் பிரச்சினைகள், பருவநிலை மாற்றம் குறித்து உறுதியான நடவடிக்கையை  நீங்கள் எடுப்பீர்கள் என்று எதிர்பார்ப்பது உண்மையில் பயனற்றது.

தன்னாட்சி கொண்ட நிறுவனங்களை மெதுவாக நீங்கள் கைப்பற்றி வருவதையும் நாங்கள் பார்த்து வருகிறோம். பத்திரிகையாளர் தவ்லீன் சிங் போன்று உங்கள் மீது விமர்சனம் செய்து வருகின்ற இன்றைய விமர்சகர்களில் பலரும், உயரடுக்கு லூட்டியன் டெல்லி தர்பாரின் செல்வாக்கை நீங்கள் அகற்றுவீர்கள் என்றே நம்பினர். வெளியாளாக, சகாக்களின் செல்வாக்கிற்கு தலைவணங்காத ஒருவராகவே நீங்கள் காணப்படுகிறீர்கள். இந்த உயரடுக்கு வட்டம் டெல்லியை மட்டுமே மையமாகக் கொண்டிருப்பதால் அதை ’விதிவிலக்கு’ என்று உங்களால் சரியாகவே குறிப்பிடப்பட்டது. ஆனாலும் நடந்தது வேறாகவே இருந்தது. தொடர்ந்து டெல்லி லூட்டியனிலிருந்து இடித்துரைகளை நாங்கள்  கேட்டு வருகிறோம். உண்மையில், நீங்களே அதைக் குறிப்பிட்டும் இருக்கிறீர்கள்.

ஆனாலும் எந்தவிதமான முறையான மாற்றமும் உங்களிடம் ஏற்படவில்லை. ஆட்சி குறித்த  பிரச்சாரக் கருவியாக லூட்டியன் டெல்லி தொடர்ந்து செயல்படுகிறது. இப்போது ஊடகங்கள் அனைத்தும் மிகவும் வெளிப்படையாக துருவமுனைப்பை பரப்பி வருகின்றன. அவை எதிர்க்கட்சிகளிடம் மட்டுமே கேள்விகளைக் கேட்கின்றன. ஆட்சியதிகாரத்திடம் மிக அரிதாகவே கேள்விகள் எழுப்பப்படுகின்றன. உங்களைப் பாராட்டிக் கொண்டிருக்கின்ற செய்தி நிறுவனங்களுக்கு மட்டுமே நேர்காணல்களை வழங்குவதன் மூலமாக, நீங்கள் இந்த அணுகுமுறையை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறீர்கள். அவர்கள் உங்களுடைய கவிதைகள், குழந்தைப் பருவம், நவராத்திரி விரதங்கள், அயராத ஆற்றல், தன்னலமற்ற தன்மை, எழுதப்படாத உங்களுடைய வெளிநாட்டு நேர்காணல்கள், உடையலங்கார உணர்வு, நோய்வாய்ப்படும் போது எடுத்துக் கொள்ளும் மருந்துகள், பார்க்கும் திரைப்படங்கள், கேட்கும் பாடல்கள், மாம்பழங்களைச் சாப்பிடும் விதம், தூக்கத்தைத் திட்டமிடுதல் என்று கேள்விகளை உங்களிடம் அடுக்குகிறார்கள். கனடா குடிமகனாக இருக்கின்ற பாலிவுட் நடிகருடன் ஒரு மணி நேர நேர்காணலைச் செய்வதற்கு உங்களுக்கு நேரம் இருக்கிறது, ஆனால் பத்திரிகையாளர்களைச் சந்திப்பதற்கு உங்களுக்கு நேரம் இருப்பதில்லை. உங்களை விமர்சிப்பவர்களுடன் நேர்காணல் செய்வதற்கான நேரம் உங்களிடம் இல்லை. உங்களுடைய முடிவிற்கான வழியாக மட்டுமே நீங்கள் ஊடகங்களைக் கருதுகிறீர்கள். அதாவது, உங்களிடமிருந்து செய்திகளைப் பெற்றுக் கொள்வதற்கான ஒரு வழியாக, உங்கள் பிரச்சாரத்தை நாடு முழுவதும் எடுத்துச் செல்லும் வழியாக மட்டுமே அவற்றைக் கருதுகிறீர்கள்.

உங்கள் ஆட்சி மெதுவாக நீதித்துறையையும் கைப்பற்றி வருகிறது. அண்மையில், குஜராத் உயர்நீதிமன்றம் ’மக்களுக்கு நல்லது செய்ய முடியாதவர்களுக்கு, மாநில அரசாங்கத்தின் செயல்பாட்டை விமர்சிப்பதற்கான உரிமை எதுவும் இல்லை’ என்று கூறியிருக்கிறது. இதை நான் எரிச்சல் ஏற்படுத்துகின்ற கருத்தாகவே பார்க்கிறேன்.  இந்த நாட்டின் குடிமக்கள் அனைவருக்குமே அரசாங்கத்தை விமர்சிப்பதற்கும், அரசாங்கத்தைப் பொறுப்பேற்றுக் கொள்ள வைப்பதற்குமான அனைத்து உரிமைகளும் இருக்கின்றன. அரசு என்பது மக்களுக்காகவே செயல்படுகிறது.

முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் ஓய்வு பெற்ற சில மாதங்களிலேயே, அவரை  மாநிலங்களவை எம்.பி.யாக உங்கள் அரசாங்கம் நியமித்தது. அது பலராலும் தெளிவான கைமாறாகவே பார்க்கப்பட்டது. கோகோய் வழங்கிய பல தீர்ப்புகள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கியிருந்தன. பேச்சு சுதந்திரத்தின் மீதான தாக்குதல், அசாம் என்.ஆர்.சி விவகாரம் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த நிலையில், அவர் அதை வெளிப்படையாக ஆதரித்தது, தனக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கு தன்னுடைய தலைமையில் சிறப்பு அமர்வை அமைப்பதில் எந்தவித வெட்கமுமின்றி இருந்து என்று அவர் சர்ச்சைகளுக்குள்ளே  சிக்கியிருந்தார். உங்கள் ஆட்சிக்கு ஆதரவான தீர்ப்புகளை வழங்கியதற்காக அவருக்கு வழங்கப்பட்ட வெகுமதியாகவே, அந்த நியமனம் இருந்ததாக அனைவராலும் பார்க்கப்பட்டது. உங்களுடைய மறைந்த நண்பர் திரு.அருண் ஜேட்லி முன்பொரு முறை ’ஓய்விற்கு முந்தைய தீர்ப்புகள், ஓய்விற்குப் பிறகு கிடைக்கின்ற வேலைகளின் தாக்கத்தைக் கொண்டிருக்கின்றன’ என்று கூறியிருந்தார்.

உங்கள் கடிதத்தில், உச்சநீதிமன்றம் வழங்கியிருக்கின்ற ராமர் கோவில் தீர்ப்பையும் உங்களுடைய அரசாங்கத்தின் சாதனைகளில் ஒன்றாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். 377ஆவது பிரிவு மற்றும் சபரிமலை பிரச்சினை தொடர்பான உச்சநீதிமன்றம் வழங்கிய அதேபோன்ற வரலாற்றுத் தீர்ப்புகளைப் பாராட்டுகின்ற கடிதத்தை (அல்லது ஒரு ட்வீட்) எழுத வேண்டிய அவசியம் இருப்பதாக நீங்கள் ஏன் உணரவில்லை என்று ஒருவர் நிச்சயம் ஆச்சரியப்படக்கூடும். உண்மையில், LGBTQIA+ பிரச்சனைகள் குறித்து தெளிவற்ற நிலையில் இருந்த நீங்கள், சபரிமலை தீர்ப்பை மிகத்தீவிரமாக எதிர்த்ததாகவே தோன்றுகிறது. பிரிவு 377க்கான உங்கள் அரசாங்கத்தின் நடுநிலை அணுகுமுறையை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் அவர்களே தோலுரித்துக் காட்டியிருந்தார். LGBTQIA+ நபர்களை பாலியல் வன்புணர்வாளர்கள், சிறுவர்களுக்கு தொந்தரவு தருபவர்களுக்கு இணையாக அந்த பிரிவு நடத்தியது என்று நீதிபதி சந்திரசூட் சரியாக சுட்டிக்காட்டியிருந்தார். எனவே, அரசாங்கத்தின் நடுநிலை நிலைப்பாடு LGBTQ+ சமூகத்தின் மீதான களங்கத்தைத் துடைக்க எதுவும் செய்யாததாகவே இருந்தது. அயோத்தி தீர்ப்பு உங்களுக்கு அரசியல் ரீதியாக பயனுள்ளதாக இருந்ததன் காரணத்தால், இது குறித்து உங்களுடைய நிலைப்பாடு ஒருவேளை இவ்வாறு இருந்ததா?

அதிபர் டொனால்ட் டிரம்புடன் கலந்து கொண்ட மிகவும் விளம்பரப்படுத்தப்பட்டதொரு நிகழ்வை பிப்ரவரியில் நீங்கள் நடத்திய சமயத்தில், டெல்லி எரிந்து கொண்டிருந்தது. வேற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பதற்காக இந்திய குடிமக்கள் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருந்த நிலையில், ’மத சுதந்திரத்திற்காக மிகவும் கடினமாக உழைத்திருக்கிறீர்கள்’ என்று டிரம்ப் உங்களை வெகுவாகப் பாராட்டிக் கொண்டிருந்தார். முஸ்லீம் போராட்டக்கார்களைத் தாக்கிய காவல்துறையினர், ’ஜெய் ஸ்ரீராம்’ என்று பகிரங்கமாக முழக்கமிட்டு, தங்கள் நிலைப்பாட்டை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டனர். உங்கள் விமர்சகர்களைப் பொறுத்தவரை, இதுவொன்றும் ஆச்சரியமளிப்பதாக இருக்கவில்லை. குஜராத் கலவரத்தின் போதும்,  அரசின் உடந்தையுடன், சட்டஒழுங்கு கடைப்பிடிக்கப்படாததை நாடு ஏற்கனவே கண்டிருக்கிறது. திறமையின்மை என்று இதைக் கூறலாம் என்றாலும், இத்தகைய செயல்களுக்குள் இருக்கின்ற ஒரே போன்ற தன்மை, திட்டமிட்டு தீங்கு விளைவிக்கும் வகையில் இருப்பதாகவே எண்ண வைக்கிறது.

பொதுமுடக்கத்திற்கான சரியான திட்டமிடல் இல்லாதால், புலம்பெயர்ந்தோர் மற்றும் அன்றாட கூலித் தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட தேவையற்ற துயரத்தை அது அதிகரித்தது. இறந்த உடல்களுடன் டிரக்கின் பின்புறத்தில் பயணிக்க வேண்டிய கட்டாயத்தில் காயமடைந்த புலம்பெயர்ந்தோர், பட்டினியால் இறந்து போன புலம்பெயர்ந்தவர்கள், பட்டினியால் இறந்து போன தாயை எழுப்ப முயற்சிக்கும் குழந்தை என்று பல வீடியோ காட்சிகளை நாம் இந்த காலகட்டத்தில் கண்டிருக்கிறோம். ஏறக்குறைய ஒரு மாதமாக இது தொடர்ந்து கொண்டிருப்பது, ஆட்சியதிகாரத்திடம்  திறமை இல்லை என்பதையே காட்டுகிறது.

எம்.எஸ்.கோல்வால்கரை பூஜ்னியா’ (வழிபாட்டுக்குத் தகுதியானவர்) என்று கருதுகின்ற நீங்கள், அதே வேளையில் தேசத்தின் பன்மைத்துவத்தைப் பற்றியும் பேசுகிறீர்கள். ’நாம் அல்லது நமது தேசம் வரையறுக்கப்பட்டது’ என்ற தனது புத்தகத்தில், ’ஹிந்துஸ்தானில் உள்ள வெளிநாட்டு இனங்களைச் சேர்ந்தவர்கள் ஹிந்து கலாச்சாரத்தையும், மொழியையும் பின்பற்ற வேண்டும். அவர்கள் ஹிந்து மதத்தை மதிக்கவும், போற்றவும் கற்றுக் கொள்ள வேண்டும், ஹிந்து இனத்தை மற்றும் கலாச்சாரத்தைப் பெருமைப்படுத்தும் கருத்துக்களைத் தவிர, வேறு எந்த சிந்தனையும் அவர்களிடம் இருக்கக்கூடாது. ஹிந்து தேசத்திற்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, எந்தவொரு சலுகையும் பெறாமல், எந்தவொரு முன்னுரிமை சிகிச்சையும் பெறாமல், குடிமக்களுக்கான உரிமைகள் எதுவுமின்றி இந்த நாட்டில் அவர்கள் தங்கியிருக்கலாம்’ என்று கோல்வால்கர் எழுதியிருக்கிறார்.

அரசியலமைப்பையும், மதச்சார்பற்ற என்ற வார்த்தையின் பயன்பாட்டையும் (கோல்வால்கருடன் இணைந்து)  கண்டனம் செய்த தீன் தயாள் உபாத்யாயாவின் சிலையைத் திறந்து வைக்கின்ற அதே வேளையில், அரசியலமைப்பு சட்டம் எனது புனித புத்தகம் என்று நீங்கள் கூறுகிறீர்கள்.

காந்தியின் கொள்கைகளைப் பின்பற்றுவதாக கூறுகின்ற நீங்கள், காந்தியைக் கொலை செய்த கொலைகாரனை தேசபக்தர் என்று குறிப்பிட்ட சாத்வி பிரக்யா மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. வெளிப்படையாக வன்முறையைத் தூண்டிவிட்டு, ஹிந்துக்களும் முஸ்லீம்களும் இணைந்து வாழ முடியாது என்று கூறியிருக்கும் வகுப்புவாத சிந்தனை கொண்ட யோகி ஆதித்யநாத்தை உத்தரப்பிரதேச முதலமைச்சராகத் தேர்ந்தெடுக்கின்ற அதே வேளையில், ஒட்டுமொத்த உலகமும் ஒரே குடும்பம் என்று நம்புவதாக நீங்கள் கூறுகிறீர்கள்.

உங்களுக்கு எதிரானவர்கள், இந்த நாட்டிற்கு எதிரானவர்கள் என்று உங்களைப் பின்பற்றுபவர்கள் கூறுகின்றனர். அவர்கள் ’நாம் எதிர் அவர்கள்’ என்ற சொல்லாடலை உருவாக்கியிருக்கிறார்கள். நீங்கள் மட்டுமே நாடு இல்லை என்பதே உண்மை. ஊடகங்கள் நாம் அதை நம்ப வேண்டுமென்று சொன்னாலும், பாஜகவிற்கு மட்டுமே தேசியவாதத்தில் ஏகபோக உரிமை என்பது இருக்கவில்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு, மக்களுக்குச் சேவை செய்வதற்காக மட்டுமே நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் மக்களுக்குப் பதில் சொல்லியே ஆக வேண்டும். உங்களைத் தேர்ந்தெடுத்துள்ள மக்கள், உங்கள் மீது அதிருப்தி அடையும் போது, உங்களை விமர்சிப்பதற்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுள்ளனர். உங்கள் கட்சியின் எம்.பி.க்கள் மற்றும் அமைச்சர்கள் பேசியதற்காக, உங்களை விமர்சிப்பதாக சிலர் என்னைக் குறை கூறுவதுண்டு. நிச்சயமாக, நீங்கள் அதற்குப் பொறுப்பல்ல என்றாலும், உங்கள் மௌனம் இந்த துருவமுனைப்பை வளர்த்து வந்திருக்கிறது. அதற்கான பொறுப்பு உங்களைச் சார்ந்தே நிற்கிறது.

உங்கள் தெளிவின்மை, உங்கள் மௌனம் மற்றும் உங்கள் நடுநிலைமை ஆகியவை ஒரு செய்தியைத் தருகின்றன. பிரதமர் அவர்களே, மனம் திறந்து பேசுங்கள். மௌனம் இதற்கு முன் ஒருபோதும் இவ்வளவு பேரிரைச்சலாக இருந்தில்லை. மனம் திறந்து பேசுங்கள். இல்லையெனில், ’அமைதி காத்த பிரதமர்’ என்று உங்கள் பெயர் வரலாற்றில் இடம் பெறக்கூடும்.

தங்கள் மதிப்புக்குரிய,

அன்வேஷ்

https://livewire.thewire.in/personal/mr-prime-minister-speak-up-a-17-year-old-writes-to-narendra-modi/

நன்றி: லைவ் வயர் இணைய இதழ்

தமிழில்: தா.சந்திரகுரு 

(அன்வேஷ் சத்பதி, ‘பொறுமையற்ற நாத்திகன்’ என்ற நூலின் ஆசிரியர்

லைவ் வயர் இணைய இதழ், 2020 ஜூன் 3)

;