மத்திய பட்ஜெட், இந்திய – அந்நிய கார்ப்பரேட்டுகளுக்கு தேர்தலுக்கு நிதி அளித்ததற்காக நன்றிக்கடன் செலுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர் பி.ஆர். நடராஜன் கூறினார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. பட்ஜெட்டின் மீதான விவாதத்தில் பி.ஆர். நடராஜன் புதன்கிழமையன்று பங்கேற்று கூறியதாவது:
மத்திய நிதி அமைச்சரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள இந்த அரசாங்கத்தின் முதல் பட்ஜெட், ஆட்சியாளர்கள் தங்களுக்கு நிதி உதவி அளித்த இந்தியக் கார்ப்பரேட்டுகளுக்கும், அந்நிய நிதி நிறுவனங்களுக்கும் நன்றிக் கடன் செலுத்தும் விதத்திலே அமைந்துள்ள ஒரு பட்ஜெட்டாகும். பட்ஜெட்டிலும் சரி, நிதியமைச்சரின் உரையிலும் சரி, பெரும் கார்ப்பரேட்டுகளுக்கும் பணம் படைத்தவர்களுக்கும் நாட்டின் பொருளாதாரத்தில் ஒரு பிடியை ஏற்படுத்தக்கூடிய விதத்திலும், இந்தியாவின் பொருளாதாரத்தினை அந்நிய நிதிச் சந்தையுடன் இணைக்கக்கூடிய விதத்தில் எண்ணற்ற வாக்குறுதிகளும் உறுதி மொழிகளும் வாரியிறைக்கப்பட்டிருக்கின்றன. இந்நாட்டின் உழைக்கும் மக்களான – தொழிலாளர்களுக்கும் விவசாயிகளுக்கும் இந்த பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. வேலைவாய்ப்புகளும், வாழ்வாதாரங்களும் மிகவும் சுருங்கிக் கொண்டிருக்கும் இன்றைய நிலையில் அவர்கள் அவற்றுடனேயே தங்களைத் தற்காத்துக்கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
நிதியமைச்சரின் உரையில் கார்ப்பரேட் ஆதரவு ‘சீர்திருத்தங்கள்’ தொடர்பாக ஒரு நீண்ட நெடிய பட்டியலே இருக்கிறது. இந்தியப் பொருளாதாரத்தை மேலும் அதிகமான அளவில் அந்நிய மூலதனத்திற்கும், அந்நிய நேரடி முதலீட்டுக்கும் வசதி செய்து கொடுத்திருக்கிறது. இதில் உழைக்கும் மக்களின் ஓய்வூதியத் திட்டமும் அடக்கம். நாட்டின் நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை, மெட்ரோ துறைகள் அனைத்தும் பி-பி-பி எனப்படும் பொது-தனியார்-ஒத்துழைப்பு என்ற பெயரில் தனியாரிடம் ஒப்படைக்கப்பட இருக்கின்றன. சமூக நலத்திட்டங்களும் கூட, ‘சோஷியல் ஸ்டாக் எக்சேஞ்ச்’ என்ற பெயரில் தனியாரிடம் தாரை வார்க்கப்பட இருக்கின்றன.
இந்திய விவசாயிகளுக்குக் கட்டுப்படியாகக்கூடிய விதத்தில் வேளாண் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்வது குறித்தோ, அவர்களின் கடன்வலையிலிருந்து அவர்களை மீட்பதற்கு உதவும் விதத்தில் அவர்களுக்குக் கடன் நிவாரணங்கள் வழங்குவது குறித்தோ பட்ஜெட்டில் எதுவும் இல்லை. தொழிலாளர்களைப் பொறுத்தவரை, ‘சீர்திருத்தம்’ என்ற பெயரில் தொழிலாளர் நலச் சட்டம் மேலும் மோசமான முறையில் தொழிலாளர் விரோத சட்டமாக மாற்றுவதற்கான அம்சங்களே பட்ஜெட்டில் காணப்படுகின்றன.
மத்திய நிதியமைச்சர் 2018-19ஆம் ஆண்டுக்கான வருவாய் மற்றும் செலவினங்கள் குறித்த உண்மையான விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளபோதிலும், அவற்றை இந்த பட்ஜெட்டில் வெளிப்படுத்திடவில்லை. மாறாக, பிப்ரவரி 1 அன்று இடைக்கால பட்ஜெட்டின்போது அளித்திட்ட திருத்திய மதிப்பீடுகளே இந்த இறுதிப் பட்ஜெட்டிலும் அப்படியே மாற்றமெதுவுமின்றி தரப்பட்டிருக்கிறது. சென்ற ஆண்டைக்காட்டிலும் இந்த ஆண்டு வருவாய் மற்றும் செலவினங்கள் குறைவாக இருப்பதை மூடிமறைப்பதற்காகவே இவ்வாறு செய்யப்பட்டிருக்கிறது.
2018-19ஆம் ஆண்டில் அரசுக்கு வரப்பெற்றுள்ள வருவாய் மற்றும் அரசின் செலவினங்கள் தொடர்பான உண்மையான விவரங்கள் அரசுக்குத் தற்சமயம் தெரிந்துள்ளபோதிலும் அவற்றைக்கூட இந்த பட்ஜெட்டில் வெளிப்படுத்தி நிதியமைச்சர் முன்வரவில்லை. அதற்குப் பதிலாக, பிப்ரவரி 1 அன்று தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் இருந்த திருத்திய மதிப்பீடுகள் இப்போதும் இறுதிப்பட்ஜெட்டிலும் அப்படியே தொடர்ந்து வைக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் கூறிய பட்ஜெட் மதிப்பீடுகளை விடவும், இடைக்காலப் பட்ஜெட்டின்போது திருத்தப்பட்ட மதிப்பீடுகளைக் காட்டிலும், உண்மையாக அரசுக்கு வந்த வருவாயும், செலவினங்களும் குறைவாக இருந்ததால் அதனை மூடிமறைப்பதற்காகவே அவை வெளிப்படுத்தப் படாமல் மறைக்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு பட்ஜெட் கணக்குகளையே மிகவும் சூழ்ச்சித்திறனுடன் கையாண்டிருப்பது, 2019-20ஆம் ஆண்டுக்கான செலவினங்கள் குறித்துக் கூறப்பட்டுள்ளவை தொடர்பான நம்பகத்தன்மையைக் குறைப்பதற்கும் தேவைப்படின் அந்த சமயத்தில் ஏற்படும் நிதிப்பற்றாக்குறையைச் சரிக்கட்டுவதற்குமே உதவிடும்.
2019-20ஆம் ஆண்டுக்காக மத்திய வரிகளிலிருந்து வரப்பெறும் மொத்த வருவாய் குறித்த மதிப்பீடுகள், இடைக்கால பட்ஜெட்டின்போது கூறப்பட்டதைவிட கிட்டத்தட்ட 91 ஆயிரம் கோடி ரூபாய் குறைக்கப்பட்டிருக்கின்றன. இதன் பொருள், இதனால் ஏற்பட்டுள்ள இழப்புகளில் 40 சதவீதத்தை மாநில அரசுகள் ஏற்க வேண்டியிருக்கும். ஜிஎஸ்டி வரியில் சுமார் 98 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும், வருமான வரியில் 51 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கும் மதிப்பிடப்பட்ட தொகையில் வசூலிக்கப்படாமல் குறைந்திருக்கிறது. வரிவசூலிக்கும் முறையில் இவர்கள் படுதோல்வி அடைந்திருப்பதையே இது காட்டுகிறது.
இந்த பட்ஜெட்டில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய அம்சம் என்னவென்றால், வரிவசூலிப்பு முறையின் அடிப்படைப் பிரச்சனைகளைக் கண்டு அவற்றைச் சரிசெய்வதற்குப் பதிலாக, அரசுக்குத் தேவையான நிதியை நேரடி வரி மூலமாக அதிகரிப்பதற்குப் பதிலாக, (அரிதிலும் அரிதான அளவில் ஒருசில நடவடிக்கைகளே கூறப்பட்டிருக்கின்றன) நிதி அமைச்சர், கார்ப்பரேட்டுகளுக்கு ஏராளமான சலுகைகளை வாரி வழங்கியிருப்பதாகும். அதேசமயத்தில், பெட்ரோல் மற்றும் டீசல்களின்மீது லிட்டருக்கு 2 ரூபாய் வீதம் கூடுதல் கலால் வரிகள் விதித்து, சாமானிய மக்கள்மீது சுமையினை ஏற்றுவதற்கு அவர் தயங்கவில்லை.
மேலும் அரசுக்கு வருவாயைப் பெருக்கிட அரசாங்கம் தேர்வுசெய்திருக்கும் மற்றுமொரு நடவடிக்கை பொதுத்துறை நிறுவனங்களை விற்பது என்பதாகும். ஒரு பக்கத்தில், சுமார் 1.05 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு பொதுத்துறை நிறுவனங்களை விற்பதற்குத் திட்டமிடப்பட்டிருக்கிறது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் தாங்கள் ஈட்டியுள்ள இலாபத்தில் கணிசமான தொகையைக் கறந்திடவும் அரசாங்கம் முடிவு செய்திருக்கிறது. இவ்வாறு பொதுத்துறை நிறுவனங்களிடமிருந்து கறந்திடும் தொகை ரூ.1.36 லட்சம் ரூபாய் என்று இடைக்கால பட்ஜெட்டில் கூறப்பட்டிருந்தது. அது இப்போது இந்த பொது பட்ஜெட்டில் 1.64 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டிருக்கிறது. இவ்வளவுக்குப் பிறகும்கூட இவர்களின் செலவினங்கள் தொடர்பாகக் கூறியுள்ள விவரங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தி(ஜிடிபி)யின் விகித அளவே இருக்கிறது.
மக்களுக்காக செலவிடும் திட்டங்களுக்கு பட்ஜெட்டில் மிகவும் அற்பமாகவே தொகை ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் முதல் பெண் நிதி அமைச்சர் அளித்துள்ள பட்ஜெட்டில் பெண்களுக்காக ஒதுக்கிவந்த தொகை என்பது 5.1 சதவீதத்திலிருநது 4.9 சதவீதமாகக் குறைந்திருக்கிறது. பெண்களின் பாதுகாப்புக்காக கொண்டுவரப்பட்ட நிர்பயா நிதிக்குக்கூட எவ்வித உயர்வும் கிடையாது. தலித்/பழங்குடியினருக்கான நலத்திட்டங்களுக்குப் பெயரளவில் சற்றே உயர்வு காணப்படுகிறது. அவர்களின் மக்கள்தொகை விகிதாசாரத்துடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாக இருக்கும் நிலை தொடர்கிறது. தலித்துகளுக்கான நலத்திட்டங்களுக்கு 2.9 சதவீதமும், பழங்குடியினருக்கான நலத்திட்டங்களுக்கு 1.9 சதவீதமும் மட்டுமே ஒதுக்கப்பட்டிருக்கிறது. தலித்துகளுக்கான ஒட்டுமொத்த திட்டத்திற்கான ஒதுக்கீட்டில் ஈராயிரம் கோடி ரூபாய் அளவிற்கு வீழ்ச்சி ஏற்பட்டிருக்கிறது.
சிறுபான்மையினர் விவகாரங்களுக்கான அமைச்சகத்திற்கான ஒதுக்கீட்டில் எவ்வித மாற்றமுமில்லை. வேலையின்மை மிகவும் அதிகரித்திருப்பதாக அரசாங்கமே ஒப்புக்கொண்டுள்ள நிலையில் மகாத்மா காந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின் கீழான ஒதுக்கீட்டில் சென்ற ஆண்டு திருத்தியமைக்கப்பட்ட மதிப்பீட்டுத்தொகையுடன் ஒப்பிடுகையில் மேலும் ஆயிரம் கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது. மோடி அரசாங்கத்தின் முதல் படாடோபத்திட்டமான தூய்மை இந்தியா திட்டத்திற்கான பட்ஜெட் தொகையும் சுமார் 4,500 கோடி ரூபாய் வெட்டப்பட்டிருக்கிறது.
2019-20ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட், நாட்டின் உண்மையான பொருளாதார நிலையைப் பிரதிபலித்திட முற்றிலுமாக மறுத்திருப்பதையே பிரதிபலிக்கிறது. இவர்கள் கூறும் தனியார் மூலதனத்தின் மூலமான வளர்ச்சித் திட்டங்கள் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கோ, அல்லது நாட்டிலுள்ள விவசாய நெருக்கடியைத் தீர்ப்பதற்கோ உதவிடாது. எனவே, இந்த பட்ஜெட், நம் மக்களில் பெரும்பான்மையானவர்கள் மீது மேலும் பொருளாதாரச் சுமைகளை ஏற்றும் விதத்திலேயே அமைந்திருக்கிறது.
இவ்வாறு பி.ஆர். நடராஜன் பேசினார்.
(ந.நி.)