tamilnadu

img

எல்லா கனடியன்களும் அமைதியானவையல்ல - நா.வே.அருள்

பயணக்குறிப்பு

கனடாவின் வான்கூவர் நகரத்தின் மையத்தில் உயரமான பகுதியில் அமைந்திருக்கிறது ப்ளோடெல் கன்சர்வேட்டரி (BLOEDEL CONSERVATORY) என்ற பறவைகள் மற்றும் தாவரங்களின் சரணாலயம். எலிசபெத் ராணி பூங்காவின் நடுவில் மிகப் பெரிய கண்ணாடிக் கூண்டுக்குள் இது  வடிவமைக்கப்பட்டுள்ளது. முக்கோண வடிவில் அக்ரிலிக் கண்ணாடிகளால் இணைத்து பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள வறட்சிப் பகுதிக்கு ஏற்றவாறு அலுமினியங்களைப் பொருத்தியுள்ளனர்.  கண்ணாடி கூண்டுக்குள் செயற்கையாக வெப்பத்தை உருவாக்கிப் பராமரிக்கிறார்கள். அந்தப் பூங்காவுக்குள்ளேயே போன்சாய் அருவி ஒன்று ஓடிக்கொண்டிருக்கும். வழக்கம் போல கருப்பு அணில்கள். கறுப்பு முயல்கள்.   சரணாலயக் கண்ணாடிக் கூண்டுக்கு எதிரில் மூன்றரை அடி உயர மதில்சுவர் இருக்கிறது.  அங்கிருந்து பார்த்தால் வான்கூவர் முழுவதையும் பார்க்க முடியும்.  கூண்டுக்கு வலது புறத்தில் நீர் வழியும் பெரிய குளத்தில் நடனமிடும் தண்ணீர்க் குழாய்கள்.

உள்ளே நுழைந்ததும் பறவைகளின் படம் அச்சிடப்பட்ட வண்ணத்தாளினையும் பார்த்த பறவைகளின் கீழ் டிக் செய்ய ஒரு பென்சிலையும் கொடுக்கிறார்கள்.   இடதுபுறத்திலிருந்து நமது இயற்கை தரிசனம் தொடங்குகிறது. விதவிதமான தாவரங்களையும்  அங்கங்கும் சுதந்திரமாகச் சுற்றித் திரியும் பறவைகளையும் பார்வையிட ஆரம்பிக்கலாம்.  முதலில் ஒரு சிட்டுக் குருவி வரவேற்றது.  நம் ஊரில் ஒழித்துக் கட்டிய சிட்டுக்குருவியை வான்கூவர் வந்து பார்க்க வேண்டி இருக்கிறது. கொஞ்சம் நகர்ந்ததும் பச்சை சிறகுகள் கொண்ட பஞ்சவர்ணக்கிளிகள் (?) மாகா என்றழைக்கப்படும் இரட்டைக் கிளிகள்.  விரைவில் வளர்ந்துவிடக்.கூடிய சீன மூங்கில் மரங்கள். பூச்சிகள் உண்ணும் தாவரங்கள், எங்கும் வாழக்கூடிய எலிகள், விதவிதமான பறவைகள், தாவரங்கள் என நூறு வகையான பறவைகளும், ஐநூறு விதமான தாவரங்களும் மனிதர்களின் தொல்லை இல்லாமல் மகிழ்ச்சிகரமாக வாழ்ந்து வருகின்றன.  பிளான்கா என்கிற பச்சைக்கிளியும் ரூடி என்கிற சாம்பல்நிற ஆப்பிரிக்கப் பச்சைக்கிளியும் சொன்னதைச் சொல்லி நம்மை மகிழ்விக்கின்றன.  பேசிவிட்டோம் என்று போக எத்தனித்துத் திரும்பும்போது நாமே எதிர்பார்க்காத விதமாக ‘பை பை’ சொன்னது பிளான்கா.  பனியில் உறைந்து பழகியிருந்த நாங்கள் முதல் முதலாக அந்த வெப்ப சீதோஷ்ண நிலைக் கூண்டுக்குள் கொஞ்சம் உஷ்ணத்தில் உறைந்து போனோம்.  

பார்த்து முடித்துத் திரும்பவும் வான்கூவர் நகரம் வந்த உடனே அருள்பாரதியும் விஜயதாவும் அழைத்துச் சென்ற இடம் டவுன் டவுன் (Down Town). ஒவ்வொரு நகரத்திலும் ஒரு டவுன் டவுன் இருக்கும்.  அதுதான் அந்த நகரத்தின் இதயப் பகுதி போல.  நகரத்தின் மையம்.  உயர உயரமான கட்டடங்கள்.  வழுக்கிக் கொண்டுபோகும் சாலைகள்.  வண்ணமயமான வணிக நிறுவனங்கள்.  கண்களில் ஜாலம் காட்டும் கலை வளாகங்கள். வான்கூவரில் நாங்கள் தங்கியிருந்த ரிச்மண்ட் பகுதியிலிருந்து பிரிட்ஜ்போர்ட் நிலையம் சென்று அங்கிருந்து டவுன் டவுனுக்குப் போக வேண்டும். கனடா பிளேஸ் (Canada Place) என்கிற சிறிய துறைமுகம் இருக்கிறது.  அங்கு மாஸ்டாம் கப்பல் ஒன்று நின்று கொண்டிருந்தது.  அங்கிருந்து கலிபோர்னியா செல்வதற்குத் தயாராக இருந்தது.  பயணிகள் வந்து கொண்டிருந்தனர்.  அந்தக் கப்பல் டைட்டானிக் கப்பலின் மினியேச்சர் போலத் தோன்றியது. அருகில் இருந்த துறைமுகப் பகுதியில்  தரையில் கனடாவின் ஒவ்வொரு மாநிலத்தின் பெயரும் குறிப்பிடப்பட்டிருந்தது.  நாங்கள் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தபோதே அங்கு ஒரு பெரிய மயில் கழுத்து வாத்து கம்பீரமாக நடைபோட்டுக்கொண்டிருந்தது.  ஒரு சீமாட்டி நாயைச் சங்கிலியில் பிடித்தபடி வந்துகொண்டிருந்தாள். அந்த மயில் கழுத்து வாத்து முதலில்  நாயை விரட்டியது.  சிறிது நேரத்தில் ஒரு பெண்ணைத் துரத்தியது.  அங்கிருந்த ஒரு தகவல் பலகை கண்ணில் பட்டது.  அதில் “எல்லா கனடியன்களும் அமைதியானவையல்ல” என்று குறிப்பிட்டிருந்தது. கனடியன்கள் என்று அவர்கள் குறிப்பிட்டிருந்தது அந்த மயில் கழுத்து வாத்துகளைத்தான்.  

அந்த கப்பல் நின்றிருந்த இடம் அமைதியாக அலையடித்துக் கொண்டிருந்தது.  அத்தனை அமைதி நிலவிய அந்த இடம்தான் ஆழம் நிறைந்த பசிபிக் மகா சமுத்திரம்.  அந்த அமைதியான பசிபிக் கடலின் நுனி முகத்தைப் பார்த்தபடி நகர்ந்தோம். கொஞ்ச தூரத்தில் ஒரு இசைக் கலைஞன் ஒற்றை மைக்கின் முன்பு பாடியபடியே கிதார் இசைத்துக்கொண்டிருந்தான்.  கீழே கிதாரின் உறை விரித்து வைக்கப்பட்டிருந்தது.  அதில் டாலர் நாணயங்கள் ஒன்றிரண்டு விழுந்து கிடந்தன.  ஏதோ என் மனம் கனத்துப் போயிருந்தது.  வருகிற சுரங்கப் பாதையிலும் இன்னொரு இசைக் கலைஞன் இதேபோல கிதார் இசைத்துக் கொண்டே பாடிக்கொண்டிருந்தது நினைவுக்கு வந்தது.  அநாதையாக இசை ஒவ்வொரு நடைபாதை வாசிகளிடமும் கையேந்துவது போலத் தோன்றியது. எதிரே கம்பீரமாக நின்றுகொண்டிருந்தது உலக வர்த்தக மையம்.  அதன் தாழ்வாரத்தில் நடந்துசென்றோம்.  நாங்கள் மட்டுமா? உலகமே அதன் தாழ்வாரத்தில்தான் ஒண்டிக்கொண்டிருந்ததுபோல பட்டது.

-பயணிப்போம்