tamilnadu

img

7.5 சதவீத இடஒதுக்கீடு: 6 மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் பயில வாய்ப்பு  

நெல்லை மாநகராட்சி கல்லணை அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ பயில இடம் கிடைத்துள்ளது.  

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் நீட் தேர்வு முடிவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்ட நிலையில் மாணவர்கள் மருத்துவ படிப்புகளில் சேர விண்ணப்பித்தனர். இந்நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள 4,349 இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் 2,650 இடங்கள் என மொத்தம் 6,999 இடங்களில் மாணவர் சேர்க்கை தரவரிசை அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அவற்றில் மாணவர்களை சேர்க்க தரவரிசை பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியிடப்பட்டது.  

அந்தவகையில் நெல்லை மாநகராட்சி கல்லணை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் படித்த 6 மாணவிகளுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத மருத்துவ படிப்புக்கான இடஒதுக்கீடு மூலம் அரசு மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் பயில்வதற்கான இடம் கிடைத்துள்ளது.

தரவரிசை பட்டியல் அடிப்படையில் நடந்த கலந்தாய்வில், ஞானலசி, இசக்கியம்மாள், நட்சத்திர பிரியா ஆகியோருக்கு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியிலும், காயத்ரி என்ற மாணவிக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியிலும் மருத்துவப் படிப்புக்கான இடம் கிடைத்துள்ளது. அதனைதொடர்ந்து சௌந்தர்யா என்ற மாணவிக்கு கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியிலும், கிருத்திகா என்ற மாணவிக்கு கோவை தனியார் கல்லூரியிலும், எம்.பி.பி.எஸ் படிப்பிற்கான இடம் முதல்கட்ட கலந்தாய்வில் கிடைத்துள்ளது. அதோடு ஒரு மாணவிக்கு கோவை பல் மருத்துவக் கல்லூரியில் பயில இடம் கிடைத்துள்ளது.  

அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கான கலந்தாய்வின் முதல் நாளிலேயே ஒரே பள்ளியைச் சேர்ந்த 6 மாணவிகளுக்கு அரசு மருத்துவக் கல்லூரியில் படிப்பதற்கான வாய்ப்பை பெற்றுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவித்துள்ளனர்.  

அதனைதொடர்ந்து இன்று நடைபெறும் கலந்தாய்வு வரும் இதே பள்ளியைச் சேர்ந்த மாணவிகள் பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் அவர்களுக்கும் அரசு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும் பள்ளி நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.