மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் அருந்ததிராய் நூல் நீக்கப்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வன்மையாக கண்டிக்கிறது. இது குறித்து நெல்லை மாவட்டச் செயலாளர் கே.ஜி.பாஸ்கரன் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் ஆங்கில முதுகலை வகுப்புப் பாட திட்டத்தில் மூன்றாண்டுகளாக இருந்துவந்த எழுத்தாளர் அருந்ததிராயின் Walking with the comrades என்ற புத்தகம் பாடதிட்டத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது என்ற மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக துணைவேந்தரின் தன்னிச்சையான அறிவிப்பு கண்டனத்திற்குரியது. ஏற்கனவே நடைமுறையிலுள்ள ஒரு பாடதிட்டத்தை அரசியல் அழுத்தத்திற்கு அடிபணிந்து மாற்றுவது ஒரு மெத்தப் படித்த துணைவேந்தருக்கு அழகல்ல. பாடத்திட்டம் குறித்து மறுபரிசீலனை செய்ய வேண்டுமென்றால் அது குறித்து சம்பந்தப்பட்ட பாடக்குழுவில் (Board of studies) விவாதித்து முடிவெடுத்து, அம்முடிவு கல்வி நிலைக்குழுவில் (Standing committee on academic affairs) உறுதி செய்யப்பட்டு, பின்னர் ஆட்சிக்குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். இதுவே பல்கலைக்கழக விதிகளுக்கு உட்பட்ட நடைமுறை. மசு பல்கலைக்கழக துணைவேந்தர் இவ்வவிதிகளை மீறி ஏபிவிபி எனும் மதவாத மாணவர் அமைப்பிற்கு அடிபணிந்து பாடதிட்டக்குழு, கல்விக்குழு, ஆட்சிக்குழு என்று
எந்த சட்டபூர்வ அமைப்பிலும் விவாதிக்காமல் தன்னிச்சையாக செயல்பட்டதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. பல்கலைக்கழகத்தின் தன்னாட்சி உரிமையை அரசியல் அதிகாரத்திற்கு மசு பல்கலைக்கழகத் துணைவேந்தர் அடகு வைத்திருப்பது கவலை அளிக்கிறது. எனவே துணைவேந்தர் தனது அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நெல்லை மாவட்டக்குழு சார்பில் வலியுறுத்துகிறோம்.