தீண்டாமை ஒழிப்பு, பெண்கள் முன்னேற்றம், விதவைத் திருமணம், பெண் கல்வி போன்ற கருத்துகளைப் புதினங்களில் எழுதியவர் வ.ரா. 1914 ஆம் ஆண்டிலிருந்து பத்திரிகைப் பணியில் ஈடுபட்டார். இவர் ஆசிரியராக இருந்த மணிக்கொடி தமிழ் சிற்றிதழ் வரலாற்றில் ஒரு மறுமலர்ச்சி ஏற்படுத்திய இதழாக விளங்கியது. வ.ரா.வின் வாழ்க்கையில் பெரிய திருப்பம் என்பது மணிக்கொடி பத்திரிகை யில் சேர்ந்து, இளம் எழுத்தாளர்களை ஊக்குவித்தார்.
அவர் எழுதிய சிறுகதைகளில் சமூகத்துக்குச் சாட்டையடி கொடுத்துப் போராடும் தன்மை இருந்தது. 1930ஆம் ஆண்டு வேதா ரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டு 6 மாத சிறைத் தண்டனை பெற்ற வ.ரா. அலிப்பூர் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் இருந்து கொண்டே, ஆங்கிலேயர்களுக்கு எதிராகக் கட்டுரைகள் எழுதினார். அவை பின்னாளில் “ஜெயில் டயரி” என்ற பெயரில் நூலாக வெளிவந்தது. மகாகவி பாரதியின் நெருங்கிய நண்பராகவும், பாண்டிச்சேரியில் தீவிரவாத இயக்கங்களில் ஈடுபட்டிருந்த வ.வே.சு.ஐயர், அரவிந்தர் போன்ற விடுதலைப் போராட்ட வீரர்களின் நெருங்கிய சகாவாகவும் வ.ரா. திகழ்ந்தார். இவர் எழுதியவை நான்கு நாவல்கள்; ஐந்து வாழ்க்கை வரலாறு நூல்கள்; ஆறு சிந்தனை நூல்கள்; இரண்டு மொழிபெயர்ப்பு நூல்கள் என மொத்தம் பதினேழு நூற்படைப்புகள் ஆகும்.
-பெரணமல்லூர் சேகரன்