tamilnadu

img

இந்நாள் ஜுலை 28 இதற்கு முன்னால்

1932 - ‘போனஸ் ராணுவ அணிவகுப்பு’ என்று குறிப்பிடப்படும், 43 ஆயிரம் பேர் பங்கேற்ற முன்னாள் ராணுவத்தினரின் போராட்டம் வாஷிங்டனில் நடைபெற்றது. 1914-18இல் நடைபெற்ற முதல் உலகப்போரில் போரிட்ட வீரர்களுக்குத் தரப்படாத போனசைக்கேட்டுப் போராடியபின், 1924இல் 20 ஆண்டுகள் கழித்து, 1945இல் மாற்றத்தக்க பத்திரங்களாக வழங்கப்பட்டிருந்ததை, உடனே மாற்றித்தருமாறு இந்தப் போராட்டம் நடைபெற்றது. அமெரிக்க விடுதலைப்போர் முடிந்தபோது, வீரர்களுக்கு ஊதியம் கொடுக்க நிதியில்லாததால், அமெரிக்காவுக்கு நிரந்தர ராணுவம் தேவையில்லை என்று 1781இல் படையைக் கலைத்துவிட்ட செய்தி இத்தொடரில் 2018 நவம்பர் 4இல் இடம்பெற்றது. இரண்டு ஆண்டுகளாகியும் பணியாற்றிய காலத்துக்கான ஊதியமே தரப்படாததால், 1783இல், அப்போது பென்சில்வேனியாவில் செயல்பட்டுக்கொண்டிருந்த அமெரிக்க நாடாளுமன்றத்தை, நூற்றுக்கணக்கான முன்னாள் படைவீரர்கள் முற்றுகையிட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றமே நியூஜெர்சிக்கு மாற்றப்பட்டது. 1592இல் இங்கிலாந்தில் இயற்றப்பட்டிருந்த, போனஸ் வழங்கும் சட்டத்தைப் பின்பற்றி, ராணுவத்தில் சேராமலிருந்தால் எவ்வளவு பொருளீட்டியிருக்க முடியுமோ அவ்வளவுக்கு, முன்னாள் படைவீரர்களுக்கு ஓய்வூதியம், போனஸ் ஆகியவை வழங்கும் சட்டம் 1788இல் இயற்றப்பட்டு, 1836இல் இறந்த வீரரின் மனைவிக்கும் விரிவாக்கப்பட்டது.

நிதிதான் இல்லையேதவிர, நிலம் ஏராளமாக இருந்ததால், போரின் முடிவில், மிகக்குறைந்த பதவியிலிருந்த வீரருக்கு 80 டாலரும், 100 ஏக்கர் நிலமும் போனசாக வழங்கப்பட்டன. மேஜர் ஜெனரல் பதவிக்கு 1,100 ஏக்கர்! குறைந்தது 160 ஏக்கர் வழங்குமாறு 1855இல் சட்டம் திருத்தப்பட்டது. கொடுப்பதற்கு நிலமில்லாமற்போன நிலையில், முதல் உலகப்போரில் போரிட்ட வீரர்களுக்கு போனஸ் வழங்காதது அரசியல் பிரச்சனையானது. 1924இல், உள்நாட்டில் போரிட்ட ஒவ்வொரு நாளுக்கும் ஒரு டாலர், வெளிநாட்டிலென்றால் 1.25 டாலர் என்ற விகிதத்தில், 50 டாலருக்குக் கீழான தொகைகள் உடனே வழங்கப்பட்டு, மீதமுள்ள 3.64 பில்லியன் டாலர் (தற்போது ரூபாயில் 3.76 லட்சம் கோடி!) 1945இல் மாற்றத்தக்க பத்திரங்களாக வழங்கப்பட்டது. பெரும் பொருளாதார வீழ்ச்சியின்போது, பெரும்பாலான முன்னாள் வீரர்கள் வேலையின்றித் தவித்தநிலையில், தலைநகரில் தங்கிப் போராடத் தொடங்கினர். ஜூலை 28இல் ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் இருவர் உயிரிழந்ததுடன், போராடியவர்கள் தலைநகரைவிட்டு வெளியேற்றப்பட்டனர். 1933இல் மீண்டும் தொடங்கிய போராட்டம், பெரும்பாலானவர்களுக்கு பொதுமக்கள் பாதுகாப்புப் படையில் வேலையளித்து முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. 1936இல்தான் சிறப்புச் சட்டம்மூலம், (பத்திரங்களை முன்கூட்டி முடிப்பதற்காகக் குறைத்துக்கொள்ளப்பட்ட) போனஸ் வழங்கப்பட்டது.