tamilnadu

img

இந்நாள் ஜுன் 05 இதற்கு முன்னால்

1967 - ஆறுநாள் போர் என்று குறிப்பிடப்படும் மூன்றாம் அரபு-இஸ்ரேலியப் போர் தொடங்கியது. 1947-49இல் நடைபெற்ற பாலஸ்தீனியப் போரின் ஒருபகுதியாக 1948இல் நடைபெற்றது முதல் அரபு-இஸ்ரேலியப் போர் என்றும், 1956இல் ஏற்பட்ட சூயஸ் நெருக்கடி என்னும் போர் இரண்டாம் அரபு-இஸ்ரேலியப் போர் என்றும் குறிப்பிடப்படுகின்றன. சூயஸ் நெருக்கடிக்குப்பின் 1957இல் டிரான் நீரிணையில் இஸ்ரேலியக் கப்பல்கள் பயணிக்க அனுமதிக்கப்பட்டன. ஜோர்டானின் ஒரே துறைமுகமான அக்காபா, இஸ்ரேலின் ஒரே துறைமுகமான எலியட் ஆகியவற்றுக்கு, டிரான் நீரிணை மிகமுக்கியமான நீர்வழியாகும். இந்த நீரிணையை மூடுவது போரைத் தூண்டுவதாகும் என்று 1957இலேயே இஸ்ரேல் கூறியிருந்தது. 1967 மே 22இல் இரானிலிருந்து இஸ்ரேலுக்கு வரும் எண்ணெய்க் கப்பல்களை அனுமதிக்க எகிப்து மறுத்ததைத்தொடர்ந்து, தங்களுக்கு இடையூறான தடையை முறியடிப்பதற்கான தாக்குதல் என்ற பெயரில் ஜூன் 5இல் தாக்குதலை இஸ்ரேல் தொடங்கியது. அரபு அணியின் மொத்தப்படைகள், இஸ்ரேலியப் படைகளைப்போல் இரண்டு மடங்கிற்கும் அதிகம் என்றாலும், தெளிவான திட்டமிடுதலால் அவற்றை மிக எளிதில் தோற்கடித்தது இஸ்ரேல். அன்றைய அரபுநாடுகளின் விமானப்படை விமானங்கள் ஒரு நாளைக்கு ஒன்று அல்லது இரண்டு தாக்குதல்களை மட்டுமே நடத்தும் திறன் பெற்றிருந்தன. போருக்கு முன்பாக, தாக்குதல் நடத்தித் திரும்பிவரும் விமானங்களை உடனடியாக மறு தாக்குதலுக்குத் தயார்ப்படுத்துவதற்கு மிகப்பெரிய பயிற்சியை அளித்ததன்மூலம் இஸ்ரேலிய விமானங்கள் ஒரு நாளில் 4 தாக்குதல்களை நடத்தின. அரபு நாடுகளிலேயே மிகச் சக்திவாய்ந்ததாக இருந்த எகிப்தின் விமானப்படை கிட்டத்தட்ட முற்றிலுமாக அழிந்தது. வெறும் ஆயிரம் வீரர்களை பலிகொடுத்து, எதிரணியின் சுமார் 20 ஆயிரம்பேரை அழித்தது இஸ்ரேல். 3 நாட்களில்(ஜூன்-8) எகிப்தும், ஜோர்டானும், நான்காம் நாளில்(ஜூன்-9) சிரியாவும் போர் நிறுத்தத்துக்கு ஒப்புக்கொண்டுவிட்டன. ஜூன்-11இல் போர்நிறுத்தம் கையெழுத்திடப்பட்டது. இப்போரின்மூலம் காஸா பகுதி, சினாய் தீபகற்பம் ஆகியவற்றை எகிப்திடமிருந்தும், கிழக்கு ஜெருசலேம் உட்பட மேற்குக்கரைப் பகுதியை ஜோர்டானிடமிருந்தும், கோலான் குன்றுகளை சிரியாவிடமிருந்தும் இஸ்ரேல் கைப்பற்றிக்கொண்டது.

-அறிவுக்கடல்