ஜெர்மனியில் கிளைபோஸேட் களைக்கொல்லி பயன்பாட்டுக்கு, வரும் 2023-ல் தடை விதிக்க உள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
கிளைபோஸேட் என்னும் ரசாயனத்தால் களைகள் கட்டுப்படுத்துவது மட்டுமல்லாமல் பல்லுயிர் பெருக்கமும் பெரிதாக பாதிக்கக்கூடியதாக உள்ளது. இந்தக் களைக்கொல்லியில் உள்ள வேதிப்பொருள் குரூப்-2ஏ புற்றுநோயை உண்டாக்க வல்லது. மேலும் மற்ற உடல் உபாதைகளையும், மனித மரபணுவை மாற்றும் போன்ற திறனுடையது என மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இந்நிலையில், ஜெர்மனியில் கிளைபோஸேட் களைக்கொல்லி பயன்பாட்டை படிப்படியாக கட்டுப்படுத்தி, வரும் 2023-ஆம் ஆண்டில் முழுமையாக தடை விதிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக கடந்த ஜூலை மாதம், ஆஸ்திரியா அரசு கிளைபோஸேட் களைக்கொல்லி பயன்பாட்டை தடை செய்தது. அதே போல், பிரான்ஸ் நாட்டிலும் இதன் பயன்பாட்டை குறைத்து, வரும் 2023-ல் முழுமையாக தடை விதிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.