தஞ்சாவூர் மாவட்டம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை அன்னை ஈ.வெ.ரா மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழாவும் மகளிர் தின விழாவும் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரி யர் செ.வேலுசாமி தலைமை வகித்தார். பெரியார் சிந்தனை உயராய்வு மய்ய இயக்குநர் நம்.சீனிவாசன் வரவேற்றார். வழக்கறிஞர் நிர்மலா ராணி சிறப்புரையாற்றினார். விழாவில் கவிஞர் நந்தலாலா தலைமையில் “மணியம்மையார் காட்டிய பாதையில் இளைஞர் சமுதாயம்” நடைபயில்கிறதா? விலகிப் போகிறதா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது. நடைபயில்கிறது என்னும் தலைப்பில் முனைவர் க.அன்பழகன், முனைவர் க.செல்வக்குமார் உரையாற்றினார். விலகிப் போகிறது என்னும் தலைப்பில் முனைவர் வி.தமிழ்ச்செல்வன், மாணவி ஜெ.பூந்தளிர் உரை நிகழ்த்தினர்.
விழாவில் சிறந்த தமிழ்க்கட்டுரை எழுதிய முதலாமாண்டு வணிகவியல் துறை மாணவி கே.அபிநயா, சிறந்த ஆங்கிலக் கட்டுரை எழுதிய முதுகலை வணிக நிர்வாகவியல் மாணவி வி.அபர்ணா, சிறந்த தமிழ்க்கட்டுரை எழுதிய விண்வெளி பொறியியல் துறைப் பேராசிரியர் ர.சுரேஷ், சிறந்த ஆங்கிலக் கட்டுரை எழுதிய வணிக நிர்வாகவியல் துறைத் தலைவர் பேராசிரியர் ஜெ.சத்தியப்பிரியா பெரியார் கல்வி நிறுவனங் களில் திருச்சி நாகம்மை ஆசிரியைப் பயிற்சி நிறுவன ஆசிரியர் மா.திருச்செல்வி ஆகியோர் பரிசு பெற்றனர். மகளிர் தின விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகக் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. வசனமில்லா நாடகத்தின் மூலம் பெண்களின் நிலைக் காட்சிப்படுத்தப்பட்டது. முன்னதாக பல்கலைக்கழக முகப்பில் அமைந்துள்ள அன்னை மணி யம்மையார் சிலைக்கும், தந்தை பெரியார் சிலைக்கும் மாலை அணிவிக்கப்பட்டது.